என் இரவுகளின் ரகசிய கனவுகளில்...
தினம் தினம் நான் பயணம் போகிறேன்...
பூக்களும் புன்னகைகளும் வரவேற்கும்
ஓர் அழகிய உலகத்திற்கு..
இங்கு எல்லாமே அதனதன் இயல்புகளோடு இருக்கிறது...
பூக்களை ரசிக்க முடிகிறது...
மழையில் நனைய முடிகிறது...
நினைத்தால் சிரிக்க முடிகிறது...
நான் நானாய் வாழ முடிகிறது.
இந்த உலகத்தின் இரவுகள்....
நான் விழிக்கும் வரை விடிவதேயில்லை....
என் கனவுகளை கலைக்கும் உரிமை...
எனக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
பாதையோர பூக்களுக்காய் வழி விட்டு...
வளைந்து போகிறது தண்டவாளங்களும்.
பேசும் வார்த்தைகளிலே வழிந்தோடும் அன்பு...
பார்க்கும் கண்களிலே கறையில்லாத காதல்...
கடந்து போகும் முகத்திலெல்லாம் களங்கமில்லா சிரிப்பு...
பறிக்கபடாத பூக்களில்... நுகரப்படாத வாசம்...
இங்கு.. பூமியின் பாதையெங்கும் சிதறியிருக்கிறது...
நாம் ஒவ்வொருவரும் வாழ மறந்த அல்லது...
வாழ மறுத்த வாழ்க்கை.
இந்த உலகின் நுழைவுவாயில் உங்கள் கனவுகள்...
நேரமிருந்தால் வந்து பாருங்கள்.... உங்களை வரவேற்கும்...
பூக்களும் புன்னகைகளும் மட்டுமே...
இந்த புதிய பூமியெங்கும் சிதறி கிடக்கும்...
காதல் காதல் காதல் மட்டுமே...
இது நான் கவிதை போட்டியில் பதிந்த கவிதை. உங்கள் விமர்சனங்களை எதிர்பார்த்து இங்கு பதிகிறேன்...
Bookmarks