என் பிரியமானவனுக்கு...!
நான் உன்னை விட்டுப் போகிறேன். உலகை விட்டுப் போகலாம் என்றுதான் நினைத்தேன். என் இதயச் சிறையின் நினைவுக் கம்பிகளுக்குள் இருக்கும் ஆயுட்கைதியான அந்த சம்பவம் என்னை தடுத்து விட்டது.
கூடாரத்தில் கிருஷ்ணவேணி மௌனமாக படுத்திருக்கிறாள். அவளது உடலிலும் சரி முகத்திலும் சரி எந்தவிதமான சலனமும் இல்லை. அவளுக்குப் பக்கத்தில் நீ மௌனியாக. இப்படியான மௌனத் தருணங்களில் உங்களை அதிகமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் காதலும் மிக அடர்வாக.. வழக்கத்துக்கு மாறாக மனித இரைச்சல்களும்..
எனக்கு முதுகாட்டி நின்றிருந்த உன் தோள்களில் கையை வைக்கிறேன். நீ திரும்புகிறாய். பார்வைகள் பரிபாசைகள் ஆகின்றன. இமைகள் நெறிப்படுதுக்கின்றன. உன் கண்களில் காதல் முட்டுகிறது. என் இதழ்கள் விரிய முனைய உன் உதடுகள் வெடிக்கின்றன..
"இவள் கோழைடா.."
கோபம் தெறிக்க நீ சொன்னாலும் உன் கண்களில் முட்டிய காதல் கன்னத்தில் கோடு போட்டு அவள் மேல் நீ கொண்ட உரிமையையும் அவளுக்கு உன்னை புரியவைக்காத இயலாமையையும் காட்டுகிறது. நான் பயந்தேன். நீ அடிக்கடி சொல்வாய். "இயலாமை கோபப்படுத்தும். கோபம் கோழையாக்கும். கோழைத்தனம் விபரீத முடிவுகளை தரும்." நல்லவேளை நீ விபரீத முடிவுகளுக்குப் போகவில்லை.
என் உலகப் பிரிவைத் தள்ளிப்போட்ட அந்தக் கைதி உனக்குள்ளும் நிச்சயமிருப்பான். அந்தக் கைதி உன்னுடன் நானிருப்பதை எப்போதும் உனக்கு நினைவூட்டுவான்.
கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்த அனந்தராமனின் இமைகள் மூடிக்கொண்டன. வேறொரு உலகுக்கு அனந்தராமனை அழைத்துச் சென்றன. அதைப் பார்த்த பாலுக்குப் பொறுக்கவில்லை. பொங்கி.. வடிந்து.. நெருப்புக்குள் விழுந்து.. சத்தமிட்டு.. கருகி.. அனந்தராமனை இவ்வுலகுக்கு இழுத்து வந்தது. பக்கத்திலிருந்த மொத்த துணியால் பால் கொதித்த பாத்திரத்தை இறக்கிவிட்டு அடுப்பை அணைத்தார். கிளாசுக்குள் பாலை ஊற்றினார். பால் காய்ச்சிய பாத்திரத்துக்குள் தண்ணீரை விட்டார். கண்களை கடிதத்தில் வடியவிட்டார்.
இப்ப எதுக்காக உன்னை விட்டுப் போக வேண்டும் என்று கேட்கிறாயா. நீ சமீப நாட்களாக என் பக்கத்தில் நிழலாய் வரும் போதே பின்னாலும் உன் ஒரு நிழலை தொடரச் செய்கிறாய். உன்னை குற்றஞ் சொல்லவில்லை. நீ என்ன செய்வாய். உன் வேலை அப்படி. என்னை உனக்கு அம்மணமாய்த் தெரிந்தும் இப்படி ஒரு நிலையா என்று நீ வருத்தப்பட்டிருப்பாய் என்று எனக்குத் தெரியும். சொல்லத்தேவை இல்லை. இருந்தாலும் சொல்கிறேன்.
பாவப்பட்ட இனத்தில் பிறந்தது என் குற்றமில்லை. எனக்குக் கவிமனம் வாய்த்ததும் என் தவறில்லை. கவிமனம் அடிக்கடி கொதிப்பதுக்கும் நான் பொறுப்பில்லை. ஒரு மனிதன் கொடுமைப்படும் போது கொதிக்கும் மனம் ஒரு இனம் கொடுமைப்படும் போது சும்மா இருக்குமா. எழுதினேன்.. ஆவேசமாக எழுதினேன். கோபாவேசமாக எழுதினேன். எத்தனையோ பேரின் உடுப்புகளை நடுரோட்டில் கவிதைகளால் உருவி எடுத்தேன். என்றும் எனக்கு இனபேதம் இருந்ததில்லை. நான் பிறந்த இனம் கொடுமைப்படுவதுக்கு நான் காரணமுமில்லை. என்னை கவியாகப் பார்க்காமல் இனமாகப் பார்த்தத்து யார் தப்பு. என்னை வேவு பார்க்க உன்னையே நியமித்தது எவர் தப்பு.
தப்புகள் யாருடையாதவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நண்பனிடம் நண்பனாக நடிக்கும் அவலநிலையை உனக்குத் தர நான் விரும்பவில்லை. உனக்கான சங்கடங்களின் ஊற்றுக் கண்ணாக இருக்க எனக்கு ஒப்பவில்லை. அதுதான் போகிறேன். இப்போது கூட என்னைத் தேடும் பணி உன்னிடம் தரப்படலாம். நீயும் என்னைத் தேடலாம். நான் உன்னை காணக்கூடாது என்று ஓடலாம். இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் என்றுமே உன்னை நான் சதிக்கக் கூடாது. இதைத்தான் நான் ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.
கடைசியாக ஒன்று எவரிடமும் "நான் உண்மையாக இருந்ததில்லை" என்று அப்பப்போ என்னிடம் கொட்டித்தீர்ப்பாய். நீ தாய்தேசத்துக்கு உண்மையாக இருந்திருக்கிறாய். அதன் மூலம் ஒவ்வொருவனுக்கும் உண்மையாக இருந்திருக்கிறாய். என்றும் இதை உன் மனதில் பிரேம் போட்டு மாட்டிக்கொண்டு சந்தோசமாக இரு.
விடைபெறுகிறேன்
என்றும் உன் அன்பு நண்பன்
சோமு என்கிற சோமசுந்தரன்
படித்து முடித்து மூடிய அனந்தராமன் கண்களுக்குள் காட்சிகள் மின்னி மறைகின்றன. சோமு என்னன்மோ பேசுகிறான். என்னென்னமோ சேட்டை செய்கிறான் அவன் செய்யும், சொல்லும் எல்லாமே அவரை குசிப்படுத்துகிறது. குசிப்படுத்துவதுக்காகச் செய்கிறானோ.. அவன் செய்வதால் குசிப்படுகிறாரோ என்று அனந்தராமன் யோசிக்கும் போதே எங்கோ செல்கிறான். அனந்தராமன் அவனைத் தேடுகிறார். எங்கும் அவன் அகப்படவில்லை. ஒருநாள் குண்டு ஒன்று வெடிக்கிறது. சோமு அதில் சிக்கி உடல் சிதறி மாள்கிறான். ஏற்கனவே இருந்த சந்தேகம் சோமுதான் வெடித்தான் என்று உறுதிப்படுத்துகிறது. அவனுக்கு தீவிரவாதி என்று பட்டம் சூட்டுகிறது. அவனுக்கு உடந்தையாக இருக்கலாமோ என்று அனந்தராமன் மீது சந்தேகக்கை நீட்டுகிறது. அனந்தராமன் இல்லை என்பதை நிரூபித்து விட்டு இந்த அறைக்குள் முடங்குகிறார். அனந்தராமனின் கண்திரை இருள்கிறது. புற வெளிச்சம் பரவுகிறது.
அனந்தராமன் பால்கிளாசை கையில் எடுத்தார். பால் ஆடை பூண்டிருந்தது. அனந்தராமன் பாலாடை நீக்கிப் பழக்கம் இல்லாதவர் அப்படியே மடக் மடக் என்று பாலை தொண்டையில் சரித்தார் பாயை விட்டு எழுந்து கடிகாரத்துக்குப் பக்கத்தில் மகாராணி போல கண்ணாடிப்பிரேமை வைத்தார். கடிகாரம் டிக் டிக் என்று சப்தித்து அந்த அறையை அதிகாரம் செய்துகொண்டிருந்தது. அனந்தராமன் பாயில் சாய்ந்தார்.
Bookmarks