அன்பர்களே,
இன்று காலை "அருணகிரிநாதர்" படத்தை டீ.வீ.யில் காட்டினார்கள்.
அதில் ஒரு காட்சி. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ்
வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து விரட்டி
அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும்
நுழைய அஞ்சியிருந்தனர்.
அப்போது அருணகிரிநாதர் அங்குச்சென்றார். அவரையும்
வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார். அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப்
போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி
இருக்கவேண்டும் . வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை
அறுத்துவிடலாம்.
வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, முதல்
பாடலைத் தானே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார்.
வில்லிப்புத்தூரார்
விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப்பாடல் தலையும்
புரியவில்லை; காலும் புரியவில்லை.
அது ஒரு "தகரவர்க்க"ப் பாடல். முற்றிலும் " த" என்னும் எழுத்தின்
வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும்
தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. "ஏகாக்ஷரப் பாடல்" என்று
சொல்வார்கள்.
பாடலைப் பார்ப்போம்:
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
இதன் பொருளை திருமுருக கிருபாநந்த வாரியார் சுவாமிகள்
இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,
திதி - திருநடனத்தால் காக்கின்ற
தாதை - பரமசிவனும்
தாத - பிரமனும்
துத்தி - படப்பொறியினையுடைய
தத்தி - பாம்பினுடைய
தா - இடத்தையும்
தித - நிலைபெற்று
தத்து - ததும்புகின்ற
அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி - தயிரானது
தித்தித்ததே - தித்திக்கின்றதென்று
து - உண்ட கண்ணனும்
துதித்து - துதி செய்து வணங்குகின்ற
இதத்து - பேரின்ப சொரூபியான
ஆதி - முதல்வனே!
தத்தத்து - தந்தத்தையுடைய
அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத - தொண்டனே!
தீதே - தீமையே
துதை - நெருங்கிய
தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து - மரணத்தோடும்
உதி - ஜனனத்தோடும்
தத்தும் - பல தத்துக்களோடும்
அத்து - இசைவுற்றதுமான
அத்தி - எலும்புகளை மூடிய
தித்தி - பையாகிய இவ்வுடல்
தீ - அக்கினியினால்
தீ - தகிக்கப்படுகின்ற
திதி - அந்நாளிலே
துதி - உன்னைத் துதிக்கும்
தீ - புத்தி
தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்
இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல்.
இதில் "திதத்தத்தத்" என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்
திருப்பி வருகிறது. இதனை "மடக்கு" அல்லது "யமகம்" என்று சொல்வார்கள்.
முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்த பாடலின் முதற்சொல்லும் ஒன்றாக
இருக்கும். ஆகவே அக்காப்பியவகையை "அந்தாதி" என்று சொல்வார்கள்.
கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் - தெரிந்துகொள்ள
வேண்டியவை இருக்கின்றன.
நன்றி: அகத்தியம் குழு மட்டுறுத்துனர், திரு ஜெயபாரதி அவர்களின் விளக்கம்.
Bookmarks