நூர் பாத்திமா.....
ஒரு தேவதையைப் போல
எல்லைகளைக் கடந்து
எங்கள் நாடு வந்தாய்.
தலையைச் சுற்றி
மூக்கைத் தொடும்
தலைவலியின்றி
தரைவழி வந்தாய்.
கிழிந்து கிடக்கும்
நம் உறவுகள் போலவே
உன் இதயம் முழுக்க
ஒட்டைகளோடு வந்தாய்.
கருமேகம் சூழ்ந்த
வானம் போலத்தான்
உன்னைப் பெற்றவர்களின்
முகத்திலும்
அருளின்றி இருந்தது -
தலைநகரத்தில்
நீங்கள் இறங்கிய பொழுது.
எல்லை தாண்டிய தீவிரவாதிகள்
எங்கள் ஜவான்களின் இதயத்தில்
ஓட்டை போட்டுக் கொண்டிருந்த பொழுது -
உன் இதயத்து ஓட்டையை
அடைப்பதற்கு எங்கள் நாட்டு
மருத்துவர்கள் உழைத்தனர்.
நொடிப்பொழுதில்
வெடிக்கும் குண்டுகளில்
செத்து வீழும்
அப்பாவி காஷ்மீரிகளின்
குருதி தெருவில் ஓடிய பொழுது,
எங்கள் நாட்டு மக்களின்
ரத்தமும் ஆக்ஸிஜெனும்
உன் உடலின் உள்ளே
புகுத்தப் பட்டுக் கொண்டிருந்தது.
மயக்கத்தில் நீயும்
கலக்கத்தில் உன் பெற்றவர்களும்
இருந்த பொழுது
நாங்கள் எல்லோரும் பிரார்த்தனையில்
இருந்தோம் -
'கடவுளே!
எங்களைத் தேடி வந்த
இந்த பிஞ்சைக் காப்பாற்று'
கூட்டுப் பிரார்த்தனையும்
மலர்க் கொத்துகளும்
நாட்டு எல்லைகளைக் கடந்து
உன் காலடியில் சமர்ப்பிக்கப் பட்டது.
பலகோடி மக்களின்
இதயங்களும் ஒருமித்து
உனக்காகத் துடிக்க
உன் இதயமும் பழுதில்லாமல்
துடிக்கத் தொடங்கியது.
உனக்காக செலவு செய்ய
உன் பெற்றோர்கள் செய்த ஏற்பாடுகள்
அனைத்தும் மறுத்து
எங்கள் நாட்டு மருத்துவர்கள்
தங்கள் உழைப்பை
உனக்கு அன்புக் காணிக்கையாக்கினர்.
இந்த அன்பிற்குப் பதில் அன்பு என -
உன் மருத்துவ செலவுத் தொகையும்,
வந்த அன்பளிப்புகளும்,
ஏழைக் குழந்தைகளின் இதயத்துக்காக
உன் பெற்றவர்களால்
அர்ப்பணிக்கப் பட்ட போது
எல்லோருக்கும் தெளிவானதே -
இரு நாட்டு மக்களும்
எதிரிகளல்ல,
சந்தர்ப்பம் கிடைத்தால்
சகோதரர்களும் ஆவர் என்று.
சில காலம் முன்னே
எலியும், பூனையுமாக
அடித்துக் கொண்ட
அரசியல்வாதிகளை
ஒதுக்கித் தள்ளிவிட்டு
மக்களின் அன்பை
வெளிப்படுத்த
ஒரு தேவதையாக
உன் வரவு ஆகியதே...
இனியாவது
உன் போல் தேவதைகள் மட்டும்
எங்கள் நாட்டிற்கு வரட்டும்.
சாத்தான்களின்
குண்டுகளும், வார்த்தகளும்
ஓடியே போகட்டும்....
Bookmarks