கன்யாகுமரியின் கடலலைகள் ஆரவாரங்களுடன் கரைக்கு வருவதும் போவதுமாக அலைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த காற்று ஈரத்தையும் சேர்த்து வீசியதில் மழைத்துளி போல சிறு துளிகள் காற்றில் பறந்து வந்து விழுந்தன. சூரியனை மொத்தமாய் விழுங்கியிருந்த கடல் சுண்டு விரல் அளவுக்கு சூரியனை வெளியேற்றியதில் வெளிச்சம் லேசாக கசியத்தொடங்கியது.
திருநெல்வேலி சாரதா மகளிர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து சூரியன் எழுந்து வரும் அழகை தரிசிக்க கவிந்திருந்த இருளையும் பொருட்படுத்தாமல் ஒரு தனியார் பேருந்தில் புறப்பட்டு வந்தார்கள் பிளஸ் டூ படிக்கும் தேவதைகள்.
பஸ் கடற்கரையில் வந்து நின்றதும் ஓ கோ, ஓகோ என்ற குரல் எழுந்து அடங்கியது. கொஞ்ச நேரத்தில் குரலுக்குரிய மாணவிகள் வரிசையாக இறங்க ஆரம்பித்தார்கள். மொத்தம் நாற்பது மாணவிகள் என்று கணக்கெடுத்தார்கள் நிர்மலா டீச்சர்.
‘’எல்லாரும் சூரிய உதயத்த பார்த்துட்டு எட்டு மணிக்கு டிபன் சாப்பிட பஸ்ஸுக்கு வந்திடணும், யாராவது லேட்டா வந்தா பைன் போட்டுடுவேன் புரிஞ்சுதா?’’ தனது மூக்குக் கண்ணாடியை விரலால் அழுத்தி ஏற்றிவிட்டு சொன்னார்கள்.
மணி ஆறைத் தொட ஐந்து நிமிடங்கள் மீதமிருந்தது, இரண்டு மணிக்கு மேல் நேரமிருக்கு என்றபடி தங்களுக்கு பிடித்த மாணவிகளோடு கடற்கரையின் இதமான மணலில் சூரியனை பார்த்துக்கொண்டே நடந்தார்கள் ஐந்து மாணவிகள்.
’’ ஏய், அங்க பாருடி கடலுக்கு மஞ்சள் தேச்ச மாதிரி சூரியன் தெரியறான் என்னா அழகு பாத்தியா!'' புஸ்பா சூரியனின் அழகை ரசித்தபடி சொன்னாள்.
’' இன்னும் கொஞ்ச நேரத்துல உன்ன ஒருத்தன் சுடப்போறான்''
’' யாருடி?''
’'சூரியன் தான்!''கொல்லென்ற சிரிப்பு சத்தம் எழுந்து அடங்காமல் தொடர்ந்துகொண்டிருந்தது. வெகுதூரம் வந்துவிட்டதை உணராமல் கால்கள் நடந்துகொண்டிருந்தன. ஆள் அரவமற்ற பகுதியில் வந்த பிறகு அனைவரின் முகத்திலும் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.
‘' ஏய் வாடி திரும்ப போயிடலாம்!''புஸ்பா எச்சரித்தாள்.
’' பொழுது விடிஞ்சுகிட்டே இருக்கு, இதுல பயப்பட என்ன இருக்கு!'' அவளது தோழி சொன்னபோது புஸ்பாவுக்கு அது சமாதானமாக தெரிந்தது.
கடற்கரையின் ஓரத்திலிருந்த பாறைகளில் ஏறி அமர்ந்து அந்த குளிரிலும் சூரியனை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.பாறைகளுக்கிடையே மறைந்திருந்த லிங்கம் தனது கரங்களை புஸ்பாவின் பின் கழுத்து பகுதியை நோக்கி மெல்ல நகர்த்தினான்.
புஸ்பா திரும்பவும் பாறையின் மறைவிலிருந்த லிங்கத்தைப் பார்த்துஅய்யோ என்று அலறினாள். சட்டென்று அனைவரும் பாறையிலிருந்து மணலில் குதித்து ஓட ஆரம்பித்தார்கள். லிங்கமும் அவர்களை துரத்திக்கொண்டு ஓட மாணவிகள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாக ஓடினார்கள்.
புஸ்பா ஓட்டப்பந்தையத்தில் ஓடிவரும் முதல் மாணவியைப்போல, கண்மண் தெரியாமல் ஓடினாள்.கடற்கரைக்கு வெகுதூரம் தள்ளி தென்னைமர கீற்றுகளால் மறைக்கப்பட்ட கடைகள் முன்புறம் திறந்து இளநீர் விற்பனை செய்துகொண்டும் பின்புறம் மறைக்கப்பட்டும் இருந்தது. கடையின் பின்புறம் ஓடி வந்த புஸ்பா சட்டென்று அந்த கடையின் பின் புற ஓலையை பெயர்த்து உள்ளே நுழைந்தாள் லிங்கமும் அவளைத்தொடர்ந்து உள்ளே நுழைந்தான்.
சிறிது நேரத்தில் அந்த கடையின் மேல்கூரை ஓலைகள் பறக்க லிங்கம் அதற்க்கு பின்னால் பறந்து அந்தரத்தில் மூன்று முறை டைவ் அடித்து மணலில் தொப்பென்று விழுந்தான். கடைக்கு உள்ளே இருந்த இருபத்திஐந்து வயதுக்கு சொந்தக்காரனான பழனி லிங்கத்துக்கு விட்ட குத்தின் வீரியம்தான் அவன் மேல்கூரையை பிய்த்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தான் என்ற விபரம் பின்னர் தான் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ஒரு திரைப்படத்தின் ஹீரோவைப்போலே ஜெம்ப் செய்து மேல்கூரை வழியாக மணலில் குதித்து நின்றான் பழனி.
லிங்கம் தாக்கப்பட்டான் என்ற செய்தி எப்படி தெரிந்ததோ தெரியவில்லை ஐந்தாறு ரவுடிகள் திடீரென்று முளைத்து பழனியை வட்டமிட்டார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று வேடிக்கை பார்க்க கூட்டம் கூடிவிட்டது.
புஸ்பா திகைத்தபடி தனது தோழிகளின் தோழ்களைப்பற்றி பயந்தபடி நின்றாள்.
பழனி ஒவ்வொரு ரவுடிகளையும் பந்தாடினான். கொஞ்ச நேரத்தில் ரவுடிகள் சுருண்டு விழ பழனியை இருவர் தூக்கிப் பிடிக்க பூ மழை பொழிந்தது.
’’ஏய் பழனி வந்தான் பழனி வந்தான் பாரு- இவன்
பட்டயத்தான் கிளப்பப்போறான் பாரு என்று பாடல் பாடி ஆட, கட் கட் என்று சொன்னார் இயக்குநர் பேரரசு.
Bookmarks