தேனியிலிருந்து இடுக்கிவரை போகவேண்டிய நிர்ப்பந்தம். பேருந்து எதுவும் வரவில்லை. எல்லாம் நேரம். அலுவலக வேலையாய் இடுக்கிக்கு உடனே போக வேண்டியுள்ளது. சாலையையே பார்த்து பார்த்து அலுத்துவிட்டது. கடிகாரத்தைப் பார்த்தால் டென்ஷன் கூடுமென்று அதையும் பார்க்காமலிருந்தான் பரசுராமன்.
ஒரு லாரி வந்தது. கையைக்காட்டினான். நின்றது. ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்தவன்,
“எங்க சார் போகனும்?” என்று கேட்டதும்,
“இடுக்கிப்பா”
“வண்டி அங்கதான் போகுது வாங்க”
வயிற்றில் பாலை வார்த்தான். சந்தோஷமாய் ஏறி அமர்ந்துகொண்டான் பரசுராமன். வண்டி போய்க்கொண்டிருக்கும்போதே “ம்....மா” என்ற சப்தம் கேட்டதும், சின்ன ஜன்னல் திறப்பைத் திறந்து பின்னால் பார்த்தான் பரசுராமன். இருபது மாடுகள் மட்டுமே ஏற்றப்படவேண்டிய வண்டியில் முப்பது மாடுகளை ஏற்றியிருந்தார்கள்.
“என்னப்பா இது அநியாயமா இப்படி வாயில்லாத ஜீவன்களை கொடுமை படுத்துறீங்க? பாவமா இருக்குப்பா...”
“ என்னா சார் நீங்க...நாளைக்கு இது கேரளாவுல துண்டு துண்டா கடையில தொங்கும் சார்....நாளைக்கு சாவப்போற ஜீவனைப் பத்தி இன்னிக்கு எதுக்கு சார் கவலைப் படறீங்க?”
‘அடப்பாவமே...இதெல்லாம் அடிமாடா..?”
“ஆமா சார். அவங்களுக்கு பால் குடுத்து வளத்த பசுமாடுங்கதான் சார். இப்ப பால் வத்திப்போச்சி...அடிமாட்டுக்கு அனுப்பிட்டாங்க...மனுஷங்க சார்...லாப நஷ்ட கணக்கு பாக்குறவங்க...”
எதுவும் பேசமுடியாமல் மௌனமாய் இருந்தான். தரகன் தொடர்ந்து,
“நம்ம மனுஷனுங்கதான் சார், பொம்பளப்பிள்ளை தனக்குப் பிறந்தா நஷ்டம்ன்னு சொல்லி கொண்ணுடறதும், மாட்டுக்கு பிறந்தா லாபம்ன்னு கொண்டாடுறதும்....அதே சமயத்துல...அங்க பாருங்க சார்...பாவம் பிறந்து பத்து நாளே ஆன கிடாரி...அதான் சார் ஆம்பிள கண்ணுக்குட்டி....அதனாலயும் பிரயோஜனமில்லன்னு கறிக்கு வித்துட்டானுங்க.....கேவலமானவங்க....ஆனா அவங்களாலத்தான் சார் எங்க பொழப்பு ஓடுது...”
அவன் மேற்கொண்டு சொன்ன எதுவும் பரசுராமனின் காதுகளில் விழவில்லை.
போனவாரம் முதியோர் இல்லத்தில் சேர்த்த அம்மாவை உடனே வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வரவேண்டும். உறுதி செய்து கொண்டான்.
Bookmarks