தம்பியின் கல்லூரிக்கட்டணம் கட்ட வேண்டும். இங்கிருந்து இரண்டரை மணி நேர பேருந்து பயணம். வீட்டுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம். அதிகம் காக்க வைக்காமல் பேருந்தும் வந்துவிட்டது, அந்த வெயிலுக்கு ஆறுதலாக இருந்தது.
வேறு யாரும் அந்த நிறுத்தத்தில் ஏறாதது, எப்படியும் இருக்கை கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்படுத்தியது. எதிர்பார்த்ததை போல இருக்கை கிடைத்தாலும், அந்த ஒரு இருக்கை மட்டுமே இருந்தது. ஜன்னலோரம் ஒருவர் அமர்ந்திருக்க, மற்ற இருக்கை காலியாக இருந்தது.
சென்று அமர்ந்தேன். பக்கத்திலிருந்தவனின் பார்வையே சரியில்லை. பார்க்கவும் நாகரீகமில்லாதவனாக இருந்தான். கைப்பையில் வைத்திருந்த ஐம்பதாயிரத்தை இறுக்கமாக நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, அவன் பக்கம் முகம் திருப்பாமல் அமர்ந்துகொண்டேன். அவனோ என்னையே முறைத்துக்கொண்டிருந்தான்.
சாதாரணமாக பேருந்தில் அமர்ந்த சற்று நேரத்துக்கெல்லாம் தூங்கிவிடும் பழக்கமுள்ளவன் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டிருந்தேன். அவன் அடிக்கடி சட்டைக்குள் கையை நுழைப்பதும், எடுப்பதுமாய் இருந்தான். அடிக்கொருமுறை பின்னால் திரும்பிப்பார்த்து யாருக்கோ சைகை செய்து கொண்டிருந்தான்.
கைப்பையைக் கவனமாக இறுக்கிப் பிடித்துக்கொண்டேன். ஒருவழியாய் கடைசி நிறுத்தம் வந்தது. நான் எழுவதற்குள் அவசரமாய் எழுந்து என்னைத் தாண்டிக் கொண்டு அவன் இறங்கியதும் திடுக்கென்றிருந்தது. அச்சத்தோடு கைப்பையைப் பார்த்தேன். தோலிருக்க சுளை முழுங்குவதைப்போல பிளேட் போட்டு உள்ளிருக்கும் பணம் உருவப்படுவதை அறிந்திருக்கிறேன்.
ஆனால் பணம் பத்திரமாக இருந்தது. இறங்கி நடந்தவன் சற்று தூரத்தில் என் பக்கத்து இருக்கைக்காரன், தன் நன்பனிடம்,
“டே சொடல...இன்னிக்கு நான் பயந்தே போயிட்டேண்டா. என் பக்கத்துல உக்காந்தவன் முளிச்ச முளியே சரியில்ல. பணத்தை சட்டைக்குள்ல வெச்சுக்கிட்டேன். இப்பல்லாம் களவாணிப் பசங்க டிப் டாப்பா வரானுங்க. நல்ல வேளை நான் அடிக்கடி உன்னை திரும்பிப்பாத்து சைகை செஞ்சதுல நான் தனியா இல்லன்னு தெரிஞ்சிக்கிட்டு ஒன்னும் செய்யல. இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியாது. நாமதான் சாக்கிரதையா இருந்துக்கனும்...”
சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.
Bookmarks