சொன்னதை செய்யென நிர்பந்திக்கப்பட்டு
தின்னதை செரித்துக்கொண்டு
பின்னதை யோசிக்கா பெருங்கூட்டம்....
முன்னவன் சொன்னதை ஏற்று
என்ன அவன் சொன்னானெனவும் சிந்திக்காத
மன்னவன் அடிமைகளாய்
மண்னிதன் மேல் அலையும் நடைப்பிணங்கள்....
குஷ்டரோகியின் விரல்களைப்போல
மத ரோகிகளின் குறை இதயங்கள்..
மறை வார்த்தைகளுக்கு
மாற்றுப் பொருள் கற்பித்து,
இறைவெறி கொண்டு, சார்ந்த
இனம் அழிக்கும் ஈனங்கள்......
விளைவித்தவனின் வியர்வையை
விலைபேசி வளம் கொழிக்கும்
இடைத் தரகரைப் போல
இல்லா இறைவனின்
அருள் வாங்கித் தருவதாய் சொல்லி
பொருள் சேர்க்கும்
பொல்லா இறைத்தரகர்கள்.....
இவர்களைப்போல.....
சிதைந்த சடலம் சுமக்கும்
பிணந்தூக்கியாய் அலைவதில் விருப்பமில்லை
மரணித்த மதத்தை முதுகில் சுமக்கும்
மடத்தனத்தில் சம்மதமில்லை
படபடத்து எரியும் சுடலையில் கருகும்
மனிதத்தைக் காண மனமில்லை
விதிர்விதிர்த்து விழிக்கும்
சாமான்ய மக்களின் அன்றாட
அவலம் காண அவகாசமில்லை....
உடனடித் தேவை....
உள்ளுக்குள் சங்கடம் தரும்
மதம் விலக்க...
மதமிளக்கி வில்லைகள்...
கஷ்டப்பட்டேனும் கழுவ வேண்டும் இந்த
கடவுளின் கறைகளை...
அதற்குக் கொஞ்சம்
உள்சுத்தி அமிலமும்....
உற்பத்தி செய்ய வேண்டும் உடனே.....
உலகின் மதம் விரும்பா மனிதர்கள்,
இன பேதமில்லா இதயங்கள்,
இன்றே ஒன்று சேர வேண்டும்
ஒன்றே ஒன்றை செய்யவேண்டும்...
மத நேயர்களால்
மனிதநேயமழியாமல் காக்க வேண்டும்...!!
Bookmarks