பரபரப்பில்லாத ஞாயிற்றுக்கிழமை காலை. சிற்றுண்டியை முடித்துக்கொண்டு ஜன்னலோரம் அமர்ந்து சாலையை நோக்கிக்கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி. பதினேழு, பதினெட்டு வயதுடைய இளைஞன் ஒருவன் அவரது வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான். உடலை வளைத்து கைகளால் முழங்கால்களைத் தாங்கித் தாங்கி சிரமப்பட்டு வந்துகொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. கதவைத் திறந்த சுந்தரமூர்த்தி அந்த இளைஞனின் கைகளில் வைத்திருந்த காகிதத்தையும், முகத்தில் வழிந்த பரிதாபத்தையும் பார்த்ததுமே தெரிந்துகொண்டார் அவனது வரவின் நோக்கத்தை.
”சார்....”
அவன் தொடங்குமுன்னமே...
“ இல்லப்பா என்னால உனக்கு எந்த உதவியும் செய்யமுடியாது. தயவு செய்து எதையும் என்கிட்ட எதிர்பார்க்காதே..”
என்று அவர் சொன்னதும் அந்த இளைஞன்,
” என்ன சார் இது வீடு, காருன்னு வசதியா வாழற நீங்களே உதவி செய்யமுடியாதுன்னு சொன்னா எப்படி சார். அதுவும் என்னோட இந்த நிலைமையைப் பாத்தும்.......” என்று தன் வளைந்து சிறுத்திருந்தக் காலகளைக் காட்டியபடி கேட்டதும்,
“உன்னோட இந்த நிலையைப் பாத்துதாம்ப்பா உதவமுடியாதுன்னு சொல்றேன். இதே வயசுல நானும் உன்னைப் போல அடுத்தவங்க உதவியில வாழ நினைச்சிருந்தா இன்னைக்கும் நான் உன்னை மாதிரியே வீட்டுக் கதவுகளைத் தட்டிக்கிட்டிருந்திருப்பேன். ஆனா உழைச்சு முன்னேறனுன்னு நினைச்சுக் கஷ்டப்பட்டேன். இன்னைக்கு இந்த நிலைமையில இருக்கேன்.” சொன்னவரைப் பார்த்து,
“சார் நான் இப்படி இருக்கும்போது எப்படி சார் என்னால...” அவனை மேலே பேச விடாமல்,
“முடியும்ப்பா...முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமில்ல.”
என்று சொல்லிவிட்டு அதுவரை நிற்பதற்கு உதவியாய் பிடித்துக்கொண்டிருந்தக் கதவிலிருந்து தன் கைகளை எடுத்து, வளைந்து, தன் முழங்கால்களைப் பிடித்துக்கொண்டு, அந்த இளைஞனைவிட சிரமமாய் விந்தலுடன் நடந்து உள்ளே போன சுந்தரமூர்த்தியைப் பார்த்து....அந்த இளைஞன் விக்கித்தான்.
கையிலிருந்த உதவிக்கேட்கும் காகிதத்தைக் கிழித்தெறிந்துவிட்டு திரும்ப நடந்தவனின் நடையில் முன்னைவிட அதிக உறுதி தெரிந்தது.
Bookmarks