அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தில் தனி நபர்களையும் சேர்க்க பி.எப்.ஆர்.டி.ஏ., முடிவு
மத்திய, மாநில அரசுகளில் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தில், தனிநபர்களையும் சேர்க்க, 'ஓய்வூதிய நிதி கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,)' முடிவு செய்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பின், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்தில், எந்த அரசுப் பணியும் வகிக்காத தனிநபர்களையும் சேர்க்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறைவான பிரிமியம் செலுத்தி சேர்ந்து கொள்ளும் வகையில், இந்த திட்டம் தேசிய அளவில் அமலாகிறது. 2009ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு முன் இது அமல்படுத்தப்படும் என, ஓய்வூதிய நிதி கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணைய தலைவர் சுவரூப் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தனி நபர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை துவக்கும் முன், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அத்துடன் ஒரு புதிய செயல்பாட்டு முறை ஒன்றை உருவாக்குவோம். இதன்மூலம் தனி நபர்கள் செலுத்தும் நிதியைத் திரட்டி அவற்றை முதலீடு செய்ய நடவடிக்கை எடுப்போம். தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்படும். அதற்கான தேர்வு நடவடிக்கைகள் ஜனவரி 31ம் தேதிக்குள் முடிவடையும். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் வங்கிகள், புதிய ஓய்வூதிய திட்ட சேவை நடவடிக்கையில் ஈடுபடும். அப்போது, குறிப்பிட்ட இந்த வங்கிகளுக்கு தனி நபர்கள் சென்று, அங்கு தரப்படும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுத்து, ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். அப்படி சேரும் போது, அவர்களுக்கு வருமான வரி நிரந்தர கணக்கு எண் போல, ஒரு தனித்துவம் வாய்ந்த அடையாள எண் கொடுக்கப்படும். அதன்பின் அந்த எண்ணைப் பயன்படுத்தி, எந்த உறுப்பினரும் வங்கியில் பணத்தை டிபாசிட் செய்யலாம். அப்படி செலுத்தப்படும் பணம் புதிய ஓய்வூதிய திட்டத் திற்குப் போய் சேர்ந்து விடும். தனி நபர் ஒருவர் குறைந்தபட்சம் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இருந்தாலும், ஒருவர் தொடர்ந்து செலுத்தும் வகையில், நியாயமான வகையிலேயே தொகை நிர்ணயிக்கப்படும். ஒரு நிறுவனத்தில் உள்ளவர்கள் குரூப்பாகச் சேர்ந்து இந்தத் திட்டத் தில் சேர விரும்பினாலும், அதையும் நாங்கள் அனுமதிப்போம். அதற்கு தனி நபர் அடிப்படையில் குறைவான தொகை செலுத்தினால் போதும். 2009ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப் பின், இவை எல்லாம் அமலுக்கு வரும். புதிய ஓய்வூதிய திட்டம் பற்றி தெரியாதவர்களுக்கும், அவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எளிமையான மொழியில் அவற்றை விளக்குவோம். இவ்வாறு சுவரூப் கூறினார்.
நன்றி தினமலர்
மேலும் விபரங்களுக்கு : http://pfrda.org.in/
Bookmarks