======================================================================================================================
1ம் நாள்||2ம் நாள் ||3ம் நாள் ||4ம் நாள்||5ம் நாள்|| 6ம் நாள்|| ||7ம் நாள் ||8ம் நாள்||9ம் நாள்|| 10ம் நாள் || 11ம் நாள் || 12ம் நாள்
======================================================================================================================
தியாகப் பயணத்தில் திலீபனுடன் 12 நாட்கள் என்ற நூலை கவிஞர் மு.வே.யோ.வாஞ்சிநாதன் எழுதினார். அந்த நூலில் இருந்து வரும் 12 அத்தியாயங்களை இங்கே 12நாட்கள் தருவது சாலச்சிறந்தது என்ன் எண்ணுகிறேன். ஏனெனில் தியாகி திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் இன்றுதான்(15.09.1987).
நன்றி : தமிழோசை இணையத்தளம்.
=============================================================
முன்னுரை
தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள், 15.09.1987 அன்று, நல்லூர்க் கந்தசாமி கோயிலின் முன்பாக, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
இந்திய வல்லாதிக்கத்தின் கண்களைத் திறப்பதற்காக அவர் மேற்கொண்ட அந்தத் தியாகப் பயணத்தில், 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல், மனக்கட்டுப்பாட்டுடன் இருந்து, தமிழ் பேசும் மக்களின் விடுதலைத் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்தபின், 26.09.1987 அன்று ஈகச்சாவு அடைந்தார்.
அந்த ஈகப் பயணத்தில் 12 நாட்களும் அவரின் அருகிலிருந்து, வேதனைக்கடலில் மூழ்கி, ஈகை வேள்வியில் சங்கமமாகி, நேரில் கண்ட உண்மை அனுபவங்களை கட்டுரைத் தொடராக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
இந்த நூல் எழுதப்பட்ட சூழ்நிலை மிகவும் சிக்கலானது. இந்திய வல்லாதிக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினார் மிகவும் உக்கிரமாக மோதிக்கொண்டிருந்த காலகட்டம் அது...... இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், அ.இ.அ.தி.மு.க ஆட்சி நீக்கப்பட்டு, ஆளுநர் ஒருவரின் பொறுப்பில் விடப்பட்டிருந்த காலம் அது... தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் பலவற்றைத் தப்பான வழியில் செலுத்தி, இயக்கங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்துவதற்காக "றோ" வின் நரி மூளை மிகத் தீவிராமாக வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. இந்நூலை நான் எழுதுவதற்காகக் கிட்டு அண்ணாவின் அழைப்பை ஏற்று இந்தியா சென்றபோது, வேதாரண்யம் காவல் அதிகாரிகளினால் 1988 மாசி மாதம் கைது செய்யப்பட்டேன். அக்காவல் நிலையத்திலிருந்த எல்லோருமே தமிழர்கள் என்பதனால் என்னை அவர்களிடம் அடையாளம் காட்டியபோது, நான் மிருகத்தனமாக அவர்களால் தாக்கப்பட்டேன்.
"தமிழ்நாட்டிற்கு எதற்காக வந்தாய்? ஆயுதம் கொண்டு போகவா? கண்ணிவெடிவைக்க வெடிமருந்து கொண்டு போகவா?"... என்று அடிக்கடி கேட்டுக் கேட்டு மிருகம் போல் அவர்களில் ஒருவன் தாக்கிய போது, என் மூக்கிலிருந்து இரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. உடம்பின் சகல பகுதிகளிலும் ஏற்பட்ட குண்டாந்தடிக் காயங்களால் உடம்பே பற்றி எரிவது போல் இருந்தது. இந்திய வெறியர்களுக்கு வடம் பிடிக்கும் இவனைப் போன்ற ஒரு சில தமிழர்கள் வரை, உலகத் தமிழனுக்கு வெகு விரைவில் விடிவு ஏற்பட்டு விடாது என்பதை இப்போது நான் எண்ணிக்கொண்டேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ்நாட்டு முகாம்கள் எங்கெங்கே இருக்கின்றன என்றும், அவைகளில் யார், யார் இருக்கின்றார்கள் என்றும், வேறு ஒரு உப அதிகாரி (எஸ்.ஐ) என்னிடம் மிரட்டிக் கேட்டான் நான் அதற்கு எதுவித பதிலும் கூறாமல் இறுதிவரை நிற்கவே, இவனும் அவனுடன் சேர்ந்து என்னை மிருகம் போல் தாக்கினான்
"ஒடையிலே என் சாம்பர் கரையும்போதும்
ஓண் தமிழே சல சலத்து ஒடவேண்டும்..."
என்ற தமிழ்க் கவிஞனின் வரிகள்தான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தன. காக்கை வன்னியன்...... எட்டப்பன்......போன்றவர்களின் நாமம் அழிந்து விடாமல் இருக்க, இன்னும் நமது இனத்தின் பலபேர் இருந்து கொண்டிருக்கிறார்கள்...
"அங்கே எமது ஆட்களைக் கண்ணிவெடி வைத்துக் கொல்கிறீர்கள்... இங்கே வெடிமருந்து..... ஆயுதங்கள் வாங்க வருகிறீர்கள்......உங்களையெல்லாம் நாயைச் சுடுவதுபோல் சுட்டுத்தள்ள வேண்டும்" என்று அவன் ஊறினான். "உன் அப்பன் என்ன இந்திக்காரனா?" என்று, துணிந்து கோபத்துடன் கேட்டேன். அடுத்த நிமிடமே என் நெஞ்சிலும், வயிற்றிலும் அவர்கள் இருவரும் மாறி மாறிக் குத்துவிட்டார்கள்: நான் மயங்கிவிட்டேன்!
அடுத்தநாள் காலைவரை எதுவித உணவோ, தண்ணீரோ அற்றநிலையில், குளிர்ந்த தரையில் படுக்கவிடப்பட்டேன்...... காலையில் திருத்துறைப்பூண்டியிலுள்ள நீதிமன்றத்தில் நான் நிறுத்தப்பட்டேன். கடவுச்சீட்டு இல்லாமல் நாட்டுக்குள் நுழைந்த குற்றம் என் மீது சுமத்தப்பட்டு, 15 நாட்கள் வரை திருச்சி மத்திய சிறைச்சாலையில் வைத்திருக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். காவல் நிலையத்தில் எனக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கூற முயன்ற போது, நான் மேற்கொண்டு பேச அனுமதிக்கப்படவில்லை......
திருச்சி மத்திய சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டு, சென்னை சென்ற நான், கிட்டு அண்ணாவின் உத்தரவின்படி திலீபன்பற்றிய இந்நூலை எழுதத்தொடங்கினேன். எழுத்துச்சுதந்திரம்... பேச்சுச் சுதந்திரம்......நடமடும் சுதந்திரம் என்பன அப்போது தமிழ்நாடு மாநிலத்தின் ஆளுநராக இருந்த அலெக்சாந்தர் என்பவரால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தடைசெய்யப்பட்டிருந்தது. எது எப்படி இருந்தபோதும், திலீபனின் உண்ணாவிரதம் பற்றிய இந்நூலை மிக விரைவில் எழுதிமுடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில், இரவு பகலாக முழுமூச்சுடன் ஈடுபட்டேன்: என் முயற்சிக்குத் துணையாக, திரு. ராஐன் இருந்தார்.
1988 ஆடி மாதமளவில் மதுரை, சென்னை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் அமைந்திருந்த எமது இயக்கத்தின் வசிப்பிடங்கள், தமிழ்நாட்டுக்காவல் துறையினரால் முற்றுகை இடப்பட்டு, நாம் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டோம்.
இதற்கிடையில் தளபதி கிட்டுவுக்கும் இந்திய அரசுக்கும் இடையில், தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதில் "றோ" அமைப்பினரும் கலந்துகொண்டனர்
தமிழ்நாட்டில் நாம் தொடர்ந்தும் எமது வசிப்பிடங்களை வைத்திருக்க வேண்டுமானால், பேச்சுவார்த்தையின்போது அதையாவது விட்டுக்கொடுக்க வேண்டும் என்று, இந்திய வல்லாதிக்கத்தின் அதிகாரிகள், சிலர் எதிர்பார்த்தனர். அதற்காகவே வீட்டுக்காவலில் எம்மை வைத்துப் பணியவைக்க அவர்கள் முயன்றிருக்க வேண்டும்.
எமது மக்களின் எதிர்காலம் ஒன்றுக்காக, எதையும் விட்டுக்கொடுக்க முடியாத நிலையில், எமது கொள்கைகளில் உறுதியாக இருந்த எம்மை, 08.08.1988 அன்று அதிகாலை பன்னிரண்டு மணியளவில் நித்திரையால் எழுப்பிக் கைது செய்து கொண்டு சென்றார்கள், பேச்சுவார்த்தையில் நாம் பணியவேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது நெருக்குதல் இதுவென்று உணர்ந்து கொண்டோம். ஆனால், தளபதி கிட்டுவையும் அவருடன் இருந்த சிலரையும், அவர்கள் இந்தத் தருணத்தில் கைதுசெய்யாமல், தொடர்ந்தும் வீட்டுக் காவலிலேயே வைத்திருந்தனர்.
அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்கள், சென்னைக்குச் சுற்றுப்பயணம் செய்யவிருந்ததால் முன்னேற்பாடாக எம்மைக் கைதுசெய்வதாகச் சில உளவுப்படை அதிகாரிகள் கூறினர். ராஜீவ் தமிழ்நாட்டுக்கு வரும் வேளைகளிலெல்லாம் சிலகாலமாக எமது இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, அவர் போனபின் விடுவிக்கப்படுவது வழக்கமாகையால் நாமும் இதுபற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சிறையில் இருந்தோம். ஆனால், பேச்சுவார்த்தைகள் முற்றாகத் தோல்வியடைந்ததும், தளபதி கிட்டுவையும் அவர்கள் சிறையில் போட்டார்கள். அதுமட்டுமன்றி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எம்மீது பொய்க் குற்றங்களையும் சுமத்தியிருந்தனர்.
நடக்கமுடியாத நிலையில் எம்மில் சிலர் சென்னைச் சிறைச்சாலையில் இருந்தனர். அதுபோல் ஒரு சிலர் மதுரைச் சிறைச்சாலையிலும் இருந்தனர். மதுரைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தவர்களில் பலர் உறுப்புக்களை இழந்த நிலையிலோ அல்லது பாரிய காயங்களுக்கோ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர்களாகும். இவர்களை ஈவிரக்கமற்ற முறையில் இந்திய வல்லாதிக்க அரசின் கைக்கூலிகள், கைகளில் மாட்டப்பட்டிருந்த குளுக்கோஸ் வயர்களைக் கழற்றி எறிந்துவிட்டு அம்புலன்சில் ஏற்றிசென்று சிறையில் தள்ளியதை, நாம் ஒருபோதும் மறந்துவிடமாட்டோம்.
இந்தியத் தேசிய பாதுகாப்புச் சட்டமானது ஒரு நபரை எதுவித நீதிமன்ற விசாரணையும் இன்றி, சிறைச்சாலையில் நிபந்தனையற்ற முறையில் ஒருவருடம் வரை தடுத்து வைப்பத- -ற்கு இடமளிக்கிறது. 1988, ஆவணி மாத இறுதிவாரத்தில் கிட்டண்ணாவும், அவருடன் இருந்தவர்களும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டு, எம்முடன் கொண்டுவந்து சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டனர்.
பேசுமட்டும் அவருடன் பேசிவிட்டு தமது எண்ணப்படி இறங்கி வரவில்லை என்பதற்காக அவரது பாதிக்கப்பட்ட உடல் நிலையைக்கூட எண்ணிப் பார்க்காமல், ஈவிரக்கமற்ற முறையில் அவரைச் சிறையில் தள்ளியது இந்திய ஏகாதிபத்தியத்தின் "புளிச்சல் ஏவறை"யை எமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்காட்டும் ஒரு செயலாகும்.
தமிழ்நாடு முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 154 பேர் (பெண்கள் உட்பட) அப்போது கைதுசெய்யப்பட்டிருந்தனர். இப்படித் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டேர் மீது, பாரிய பொய்க் குற்றங்களில் முக்கியமானது:
சென்னையிலுள்ள பௌத்த விகாரையை வெடிவைத்துத் தகர்க்கும் நோக்கத்துடன் நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட்டதுமல்லாமல், அத்திட்டத்தை நிறைவேற்றச் செல்கையில் தாம் சந்தேகத்துடன் நெருங்கிய போது நான் தப்பமுயன்றது......
இதில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இதே குற்றத்துக்காக எம்மில் பலரின் பெயர்கள் போடப்பட்டிருந்ததுதான். இதில் இன்னுமொரு அதிசயம் என்னவென்றால்,
சென்னையில் ஒரு பௌத்த விகாரை இருப்பதே எனக்குச் சிறையில் இருக்கும்போதுதான் தெரியும். வின்சன்ட் என்ற எமது போராளி ஒருவருக்கு கண்;ணிவெடி ஒன்றின் மூலம் முழங்காலின் கீழ் துண்டிக்கப்பட்டிருந்தது: அவரால் நடக்கவே முடியாது ஆனால், மூளை கெட்ட அதிகாரிகள் சிலர் அவர்மீதும் சில பொய்க் குற்றச்சாட்டுகளைச் சோடித்திருந்தனர். அவைகளில் ஒன்று, பௌத்த விகாரையில் வெடிவைப்பதற்குத் தயாராக நின்றபோது காவல் துறையினரைக் கண்டுவிட்டு ஓடமுயன்றார்: காவல் துறையினர் அவரைத் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர் என்பதுதான். என்ன கற்பனை இது?
எம்மைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளிய இந்திய அரசு, வெளியுலகிற்குத் தான் சுத்தமான அரசு என்பதைக் காட்டுவதற்காக "சதா சிவம் விசாரணைக் கொமிஷன்" என்ற விசாரணைக் குழு ஒன்றை நியமித்து, அதனிடம் எமது விசாரணையை ஒப்படைத்தது.
26.09.1988 அன்று திலீபன் தியாக மரணமடைந்த முதலாண்டு நினைவு தினத்தன்றுதான் - இந்த விசாரணைக் குழுவினர், முதன்முதலாக எம்மை விசாரிக்க அழைத்திருந்தனர். அன்று சாட்சியமளிக்கச் சென்றவர்களில் நானும் ஒருவன். அன்று நாம் திலீபனின் நினைவாக ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதத்தைச் சிறையில் ஆரம்பித்திருந்தோம். அந்த நிலையில் கைகளில் விலங்கிடப்பட்டவாறு நாம் விசாரணைக் குழு முன்பாக அழைத்துச் செல்லப்பட்டோம்.
தமிழ்நாட்டு அரசியற் கட்சிப் பிரமுகர்கள் சிலர் எமக்காக சதாசிவம் விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். அவர்களில் ஒருவர்தான் திரு.ஆற்காடு வீரசாமி. அவர் எடுத்துக் கூறியவற்றில் ஒன்று மட்டும் இன்னும் என் மனத்தில் அப்படியே பதிந்திருக்கிறது
"போனவருடம் இதே தினத்தன்று உண்ணாவிரதத்தை மேற்கொண்டு தியாக மரணமடைந்த திலீபன் அவர்கள், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துத் தன் போராட்டத்தை இந்திய அரசுக்கு எதிராக நடத்தினார். அவைகளில் ஒன்று, சிறையிலிருக்கும் தமிழ்க் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்பது. ஆனால் அவர் இறந்தபின் கூட இந்திய அரசு அதை நிறைவேற்றவில்லை. அன்று இந்திய அரசிடம் திலீபன் இக்கோரிக்கையை விடுவித்தபோது, தமிழ்க் கைதிகள் சிறீலங்காச் சிறைகளில் இருந்தனர். ஆனால், இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை இந்திய அரசு இந்த மண்ணிலேயே, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பழிவாங்கும் நோக்குடன் கைது செய்து சிறையில் வைத்திருக்கிறது. அன்று இலங்கைச் சிறையிலிருந்த அரசியல் கைதிகளை இதேநாளில் லிடுவிக்கும்படி, திலீபன் இந்திய அரசிடம் கேட்டான். இன்றும் அதே நாளில் இந்தியாவில் இருக்கும் இலங்கை அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி நாம் கேட்கவேண்டிய நிலை உள்ளது. திலீபன் உண்ணாவிரதம் இருந்து ஈகை மரணமடைந்த இந்தத் துக்கநாளில், தமிழீழ விடுதலைப் புலிப் போரளிகளை (கிட்டு உட்பட) விடுதலை செய்ய வேண்டும்மென்று, தாழ்மையுடன் வேண்டுகிறேன். எமது நாட்டிற்கு எம்மால் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டவர்களை நாமே சிறையில் போடுவது அநீதியானது" என்று, அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நூலின் அச்சுவேலைகள் இந்தியாவில் முடிவுற்று 26.09.1988 அன்று, திரு. வை. கோபாலசாமி (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது, அதற்காக உழைத்தவர்களில் நண்பர்கள் வோல்டர், ராவ், முத்துராஐh, மூத்த உறுப்பினர் பேபி அண்ணா (இளங்குமரன்), முரளி, ராஐன், போன்றோர் முக்கியமானவர்கள்...... அவர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்நூலை வெளியிடும்போது நான் சென்னை மத்திய சிறையில் இருந்தேன். ஆகவே, வெளியீட்டு விழா முடிந்ததும் இதன் பிரதிகள் சிலவற்றை என்னிடம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் கொண்டுவந்து தந்த திரு. வை. கோபாலசாமி அவர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக, இந்நூலை நான் எழுதிய போதும் இதை மிக ஒழுங்கான முறையில், பிரசுரத்திற்கு ஏற்றவாறு தட்டச்சில் பொறித்துத்தந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் திரு. தேவர் அவர்களின் சேவையையும் என்னால் ஒரு போதும் மறக்கமுடியாது. மீண்டும் இந்நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிடும் முயற்சியில் என்னைச் சில வருடங்களுக்கு முன் தூண்டிய திரு. ராதேயன் (முன்னால் "ஈழநாதம் வாரமலர்" ஆசிரியர்) அவர்கட்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.
கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்
மாவடி வீதி, ஐந்து சந்தி
யாழ்ப்பாணம், தமிழீழம்.
புரட்டாதி,1992
*******************************************************
முதலாம் நாள் 15-09-1987
காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார்.
"வோக்கிடோக்கி"யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற "வானை" நோக்கி நடக்கிறார்.... எல்லோரும் பின் தொடர்கிறோம்…. ஆம், அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகி விட்டது.
மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர்….! வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது…. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையசைத்து வழியனுப்புகிறார்கள்.
வான் நின்றதும், பிரதித் தலைவர் மாத்தையா எதிர்வந்து நின்று, திலீபனைக் கட்டி அணைத்து வரவேற்று, உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க் கொண்டிக்கிறோம்…. எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடக்கிறது. வயதான ஒர் அம்மா… தள்ளாடிய சிவந்த நிற மேனி, பழுத்த தலை, ஆனால் ஒளி தவழும் கண்களில் கண்ணீர் மல்க, திலீபனை மறித்து, தன் கையில் சுமந்துவந்த அர்ச்சனைச் சரையிலிருந்து நடுங்கும் விரல்களால் திருநீற்றை எடுத்து திலீபனின் நெற்றியில் பூசுகிறார்….
சுற்றியிருந்த "கமெரா"க்கள் எல்லாம் அந்தக் காட்சியைக் "கிளிக்" செய்கின்றன. வீரத்திலகமிடுகிறார். அந்தத் தாய்… தாயற்ற திலீபன் அந்தத் தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போய் விடுகிறார்…
காலை 9.45 மணி !
உண்ணாவிரத மேடையிலே உள்ள நாற்காலியில் திலீபனை அமர வைக்கிறார், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா அவர்கள்… எனக்கு அப்போது ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. நெல்லியடி இராணுவ முகாம் தாக்குதலுக்கு முன்பாக கப்டன் மில்லரிடம் திட்டத்தை ஒப்படைத்து, வழியனுப்பி வைக்கிறார் மாத்தையா… அன்று மில்லர் வீரத்துக்குக் காவியம் ஒன்றையே படைத்துவிட்டு வீரமரணம் அடைந்தான். இன்று திலீபன்…?
திலீபனின் அருகே நான், ராஐன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்திருக்கிறோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அங்கு பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணாவிரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பது பற்றி விளக்கமளித்தார்கள்… தமிழ் மக்களினதும் தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைப் பேணும் நோக்கமாக, இந்தியா மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளும் பின்வருவன:
1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றம், உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு" என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
5. இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
பிரசாத் அவர்களால் மேற்படி ஐந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கைகளை 13-09-1987 அன்று இந்தியா உயர் ஸ்தானிகரின் கையில் நேரடியாகக் கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் கொடுத்திருந்தார்கள்… ஆனால், 15-09-1987 வரை எந்தப் பதிலும் தூதுவரிடமிருந்து கிடைக்காத காரணத்தினால் சாகும்வரை உண்ணாவிரதமும், மறியல் போராட்டமும் நடாத்துவதேன தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் 13-09-1987 அன்று தீர்மானிக்கப்பட்ட- -து… அதன்படிதான் திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பித்தது…
பிற்பகல் 2.00 மணி !
திலீபன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தி- -யாலங்கள் முடிந்துவிட்டன. இரண்டாவது மேடையிலே நடைபெற்றக் கொண்டிருந்த உண்- -ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்துவிட்டது.
"படிப்பதற்குப் புத்தகங்கள் வேண்டும்" என்று என் காதுக்குள் குசுகுசுக்கிறார் திலீபன்: நான் ராஐனிடம் சொல்கிறேன்.
பதினைந்து நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வருகின்றன. விடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிவதில் திலீபனுக்கு மிகுந்த ஆர்வம் எப்போதுமே உண்டு. பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஹோசிமின், யாசீர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும்போது படிப்பார்.
பலஸ்தீன மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் படிப்பதென்றால் அவருக்குப் பலாச்சுளைமா- -திரிப் பிடிக்கும்.
"பலஸ்தீனக் கவிதைகள்" என்ற நூலை அவரிடம் கொடுத்தேன். அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். முhலை 5.00 மணிக்கு பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று.
பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத் தொடங்கினர். சுசீலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் கவிதையை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார்.
"அண்ணா திலீபா !
இளம் வயதில்
உண்ணாமல்
தமிழினத்துக்காக……
நீ தவமிருக்கும்
கோலத்தைக்
காணும் தாய்க்குலத்தின்
கண்களில் வடிவது……
செந்நீர் !.......
சுசீலாவின் விம்மல், திலீபனின் கவனத்தைத் திருப்புகிறது.
கவிதை தொகுப்பை முடித்துவிட்டு (பலஸ்தீனக் கவிதைகள்), கவிதை மழையில் நனையத் தொடங்கினார்.
அவர் விழிகளில் முட்டிய நீர்த்தேக்கத்தை ஒரு கணம் என் கண்கள் காணத் தவறவில்லை.
ஏத்தனை இளகிய மனம் அவருக்கு? இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்கப் போகிறது?
அகிம்சைப் போராட்டத்துக்கே ஆணிவேராகத் திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட, தனது உண்ணாவிரதப் போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்!
ஏன்?
ஐரிஷ் போராட்ட வீரன் "பொபி சாண்ட்ஸ்" என்ன செய்தான்?
சிறைக்குள், நீராகரம் அருந்தித்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து உயிர்நீத்தான்.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திரு. பொட்டி ராமுலு என்பவரும் அதே முறையில்தான் உண்ணாவிரதம் இருந்து, இறுதியில் தியாக மரணம் அடைந்தார்.
1956 ஓகஸ்ட் 27 இல், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 63 வயதான விருதுநகர் சங்கரலிங்க நாடார் 78 ஆவது நாள், அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் உயிர்துறந்தார் ( 13 ஆண்டுகளின் பின் பேரறிஞர் அண்ணாவால், 1969 இல் சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது).
பகத்சிங்கின் தோழரான வங்காளத்தைச் சேர்ந்த ஐதீந்திர நாத்தாஸ் என்ற இளைஞன் 13.07.1929 இல் லாகூர் சிறையில், சிறைக்கொடுமைகளை எதிர்த்து உண்ணாவிரதமிருந்து 13.09.1929 அன்று, 63 ஆம் நாள் வீரமரணமடைந்தார் (அதன் பின் சிறைச்சாலை விதிகள் தளர்த்தப்பட்டன).
ஆனால் நம் திலீபன்?
உலகத்திலேயே நான் அறிந்தவரையில் இரண்டாவதாக, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமதிப்பைப் பெறுகிறார்.
அப்படியானால் அந்த முதல் நபர் யார்?
அவர் வேறு யாருமல்ல: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்தான்!
1986 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் இந்தியாவில் அவர் இருந்த போது, தகவல் தொடர்புச் சாதனங்களை இந்திய அரசு கைப்பற்றியதைக் கண்டித்து, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, உலகில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்துவைத்த பெருமை அவரையே சாரும்.
இரண்டாம் நாளே இந்திய அரசு பணிந்ததால் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றார்.
அதுபோல், அவரால் உருவாக்கப்பட்ட திலீபன் இன்று குதித்து விட்டார். அவரது கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றுமானால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயார்.
இல்லையென்றால் இறுதிமூச்சு வரை அதைத் தொடரத் தயாராக இருந்தார்.
திலீபன் மிகவும் மன உறுதி படைத்தவர். ஓல்லியான உடலாயினும் திடமான இதயம் அவரிடம் இருந்தது.
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம் என்ற தலைவர் பிரபாகரனின் அசையாத கொள்கையிலே பற்று வைத்திருப்பவர், திலீபன்.
அவரது கோரிக்கைகள் நிறைவேறுமா? …….
காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலீபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதிவரை உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டல்….? அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு ஓர் மாபெரும் வெற்றிதான்.
உலகில், புதிய அத்தியாயம் ஒன்றின் "சிருஷ்டி கர்த்தா" என்ற பெருமை அவனையே சாரும். ஆனால், அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா?
"இறைவா ! திலீபனைக் காப்பாற்றிவிடு!"
கூடியிருந்த மக்கள் நல்லூர்க் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள்- இதை நான் அவதானிக்கிறேன்.
பழந்தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரசதானியிலே…. அதுவும் தமிழ்க் கடவுளாகிய குமரனின் சன்னிதியில்… ஒரு இளம்புலி உண்ணாமல் துவண்டு கிடக்கிறது………
ஒரு நல்ல முடிவு கிடைக்கவேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்துவிடும். எனக்குள் இப்படி எண்ணிக் கொள்கிறேன்.
அப்போது ஒர் இளைஞன் மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறான்.
" திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல@ தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான். இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும்…… அவர் தமிழீழம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்தே ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படிவற்புறுத்தித் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார்.
எந்த காரணத்தாலாவது இதை இந்திய அரசு நிறைவேற்றத் தவறுமானால், திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம்…… திலீபன் அண்ணா இறந்தால்…… ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும்: ஒரு புரட்சி இங்கே வெடிக்கும்…… இதுதான் என்னால் கூறமுடியும்"
அவரின் பேச்சு முடிந்ததும் கூடியிருந்த மக்கள், அந்தப் பேச்சை வரவேற்பதுபோல் கைகளைத்தட்டி ஆரவாரஞ் செய்கின்றனர்.
அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடிக்கின்றது.
அன்று இரவு பதினொரு மணியளவில் தலைவர் வே.பிரபாகரன் திலீபனைப் பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார். அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், மாத்தையா, ஜொனி இப்படி பலரும் வருகின்றனர்.
வெகுநேரம்வரை தலைவருடன் உரையாடிக் கொண்ருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று, போகும்போது என்னிடம் கூறிவிட்டுச் சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்துவிடுவார். அதனால்தான் தலைவர் அப்படிக் கூறிவிட்டுச்சென்றார்.
அன்றிரவு பத்திரிகை நிருபர்களும், பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்களும் திலீபனைப் பார்க்க மேடைக்கு வந்தனர். "முரசொலி" ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசைச் சேர்ந்த பஷீர் போன்றோருடன் திலீபன் மனம்திறந்து பேசினார். அவரைக் கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பைக் கெடுத்துக்கொள்ளப் போகிறாரே என்பதனால் அவரை அன்பாகக் கடிந்து கொண்டேன்.
இரவு 11.30 மணியளவில் கஷ்டப்பட்டு சிறிநீர் கழித்துவிட்டு, சுமார் 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றார்.
ஆவர் ஆழ்ந்து உறங்கத் தொடங்கியபோது நேரம் 1.30 மணி.
அவரின் நாடித்துடிப்பைப் பிடித்து அவதானிக்கிறேன்.
நாடித்துடிப்பு :- 88
சுவாசத்துடிப்பு :- 20
அவர் சுயநினைவுடன் இருக்கும்போது வைத்திய பரிசோதனை செய்வதற்கு அனுமதிக்க- -மாட்டார். தனக்கு உயிர்மீது ஆசையில்லை என்பதால் பரிசோதனை தேவையில்லை என்று கூறுவார்.
அவன் விருப்பத்துக்கு மாறாக உணவோ நீரோ மருத்துவமோ இறுதிவரை அளிக்கக் கூடாதென்று, முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார்.
நானும் ராஐனும் அவரின் பக்கத்தில் படுத்துவிட்டோம். மேடையின் மறுபுறத்தில் இரு "நவினன்களும்" படுக்கைபோட்டனர்.
மேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொது மக்களும் கொட்டக் கொட்ட கண் விழித்துக் கொண்டிருந்தனர்.
பயணம் தொடரும்........
Bookmarks