என்னைக் பார்த்தவள்
தன் விரல்களால் கொய்து
கூந்தலில் சூடினாள்...
படிய வாரியக் கூந்தலில்
ஒற்றை அரசனாய்
கர்வத்துடன் அமர்ந்திருந்தேன்....
என்னிடம் பிடித்தது எது ?
அடர்ந்த என் வண்ணமா?
உருண்ட என் தேகமா?
கேட்டேன்
அமைதியான உன் சுபாவமும்
பற்று வோரை பற்றிக் கொள்ளும் பாசமும் ...
எனப் பதில் தந்தாள்...
தன் கரத்தால்
என்னிருப்பை எப்போதும்
உறுதிப் படுத்திக் கொண்டாள்
அவள் கரங்களின் கதகதப்பில்
களித்தேன்....
எங்குச் சென்றாலும் என்னைத்
தன்னோடு வைத்திருந்தாள்...
அடுத்த சில நேரத்தில்
என்னிலும் மென்மையான
வெண்மையானச் சிலர்
அவள் கரத்தில் குடிவந்தனர்...
நறுமணம் பரவியது அவர்களிடமிருந்து...
அந்த மணம் அவளுக்குப் பிடித்திருந்தது..
ஆனால் அது எனக்குப் பிடிக்கவில்லை...
எனது இதழ் முட்களால் என்னிருப்பைத்
தெரிவித்தேன்....
சட்டைசெய்யவில்லை..
என்னை ஓரத்தில் விலக்கி விட்டு
புதியவர்களை
கூந்தலில் குடிபுகுத்தினாள்...
சில நாளில்
வண்ணமயமாய் வந்தவர்கள்
தன்னிலை கலைத்தனர்
நிறம் தொலைத்தனர்
அவர்களிடமிருந்த வாசமும்
வீசிய தென்றலோடு தொலைந்து போனது...
அவர்களும் காற்றோடு கலந்து உதிர்ந்து மறைந்தனர் .....
கலைந்த கூந்தலின்
இடையில் ஓடிய நாரும்
நாரோடு ஒட்டியபடி நானும்
இன்னும் மீதமிருந்தோம்
நாரைத் பிய்த்தவள்
நாரோடு சிக்கியிருந்த
என்னையும் சேர்த்து
எறிந்தாள்....
நிறமும் குணமும்
மாற்றத் தெரிந்த
மல்லிகையாயிருந்தால்
நாரை விட்டு எப்போதோ
உதிர்ந்திருப்பேன்
நிறமும் குணமும்
மாற்ற இயலாத
வாடா மல்லியாகிய நான்
இன்னும் அவள் புடவை நூலில்
தொங்கியபடி அவளைத்
தொடர்கிறேன்....
அவளுக்குத் தெரியாமலேயே..
என் ...
நிறமும் குணமும் மாறாமலேயே...
Bookmarks