தேடுதல் எப்பொழுதும் துரத்துகிறது.
நேற்று வந்த பாராட்டுக் கடிதம்...
படிக்க உதவும் மூக்குக் கண்ணாடி...
வாசித்துக் கொண்டிருக்கும் வார இதழ்...
எழுதுவதற்கு கூர் தீட்டிய பென்சில்....
எல்லாவற்றையும் தேடித்தேடி
எரிச்சலாகிப் போகும் மனது,
தேடியது கிடைத்ததும் -
சாந்தமாகி வெட்கப் படும்
தேடும்போது போட்ட கூச்சலுக்காக.
ஒவ்வொன்றிற்கும் ஒரு இடம் -
பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்
மனைவியின் மந்திரம் ஒலிக்கிறது
மனதிற்குள் பதியாத வாக்கியமாய்.
'ஒவ்வொன்றிற்கும் ஓரிடம் ' -
ஆலயம் செல்லும் வழியிலே,
வாக்களித்தபடி,
மனைவியிடம் கேட்டேன் -
'எதைத் தேடி இங்கு வந்தாய்?'
'இதென்ன கேள்வி -
இறைவனைத் தான்.'
'ஒவ்வொன்றிற்கும் ஓரிடம்
உனக்கு மட்டும் செல்லுபடியாகாதா?
தேடுதலில் நீயும் தானிருக்கிறாய் -
எங்கே வைத்தோம் என்று மறந்துவிட்டு.'
'அட, போ, நாத்திகமே '
வைது விட்டு தேடிப்போகிறாள் படியேறி -
காலியான இதயத்தைச் சுமந்து கொண்டு.
Bookmarks