இலையுதிர் காலம் முடிந்து
இப்போது இங்கே
கிளையுதிர்காலம்...

தினமும் இயற்கை மரணத்தை விட
செயற்கை மரணம் மலிந்து போன
மண் இது...

சுவாசப்பைகளும்
இருதயத்துடிப்பும்
பலவந்தமாய் பிதுங்கியெறியும் கைகளை
குலுக்கிக்கொண்டிருக்கின்றன
சில ராட்சசக்கைகள்..

எம்மண்ணுமே இங்கே
செம்மண்தான்
குருதித்துகள்கள்
கலந்து போனதால்...

குழந்தைகள்
தாலாட்டு
தொட்டில்
மூன்றும் தலைகீழாகி இப்போது
சடலங்கள்
ஒப்பாரி
பாடை

எங்கள் ரணங்களை
உங்களுக்கெல்லாம் புரிய வைக்க
எந்த உவமைகளை தேடிப்பிடிப்பது...?

ஆயுதங்களும்
ஆயுதங்களும் மோதுகின்றன..
அப்பாவிகளை இடைநடுவில் நிறுத்திக்கொண்டு...

அவர்கள் கூற்றுப்படி இது
சமாதானத்துக்கான போராட்டமாம்..
இவர்கள் கூற்றுப்படி இது
வன்முறைக்கெதிரான போராட்டமாம்...
எங்கள் கூற்றை யார் கேட்கிறார்கள்...?

எனது தேசத்தின் வரலாறு
சிதறி விழும்
மனித உயிர்களின்
குருதியினால் தத்ரூபமாக வரையப்பட்டுக்கொண்டிருக்கிறது..

எப்போதோ ஓர் நாளில்
இங்கு சமாதானம்
மலரத்தான் போகிறது.
எல்லோரும் இறந்து போன பின்......

கிளையுதிர்காலம் முடிந்து
இன்னும் சில நாட்களில்
தோன்றக்கூடும் வேரறுகாலம்....

அப்போது
எலும்புக்கூடுகளும்
மண்டையோடுகளுமே
எஞ்சியிருக்கும்....