நன்றாய் வளர்ந்த
ஒரு உண்டு கொழுத்த மனிதன்
முட்டிக்கால் அளவே உள்ளவனிடம்
போருக்கான அறைகூவல் விடுத்து
நேருக்கு நேராய் நிற்கிறான்
அதுவரை
தனியாயாளாயிருந்த குட்டையனிடம்
விதவிதமான வடிவமுடைய
விதவித ஆயதங்களேந்திய
படையினர்கள் நாற்புறத்திலிருந்து
வந்து ஒட்டிக்கொள்கிறார்கள்
படையை பார்த்த பயத்தில்
பஞ்சு பஞ்சாய் பறக்கிறது
நெட்டையனின் உடல்
பார்த்தவர்கள் பிரமிக்கும்
ஏதோ ஒரு ஜந்துவாய்
மாறிப்போகிறான் நெட்டையன்
மெதுவாய் நகர்ந்து
பின் மெல்ல குனிந்து
குட்டையனின் காதில்
இரகசியம் ஓதுகிறான்
சண்டைவேண்டாமென்று
சமாதானம் பேசுகின்றான்
என்றேன் நான்
அப்படியெல்லாம் இல்லை
என்கிட்ட வச்சுக்காத
காணாம போயிடுவன்னு சொல்றான்
என்றான் நண்பன்
வேணும்னா பாருவே
சண்டை நடக்காது
நான் கூறிக்கொண்டிருக்கும்போதே
வானம் இருட்டத்தொடங்கியது.
குட்டையனுடம் நெட்டையனும்
கலையத் தொடங்குகையில்
காலையில பாரு
கண்டிப்பா சண்டையிருக்கு
என்ற நண்பனை
தோற்கடிப்பதற்காய்
அடுத்தநாள்
பள்ளி செல்லும் வழியில்
அந்த வெயிலிலும்
குட்டையனையும் நெட்டையனையும்
தேடிக்கொண்டு செல்வேன்
அண்ணார்ந்து பார்த்தபடி.
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
Bookmarks