மரப்பா(பூ)ச்சிகள்..!!
ஒவ்வொரு மே மாத
வரவேற்பும்..
எதிர்வீட்டு வாசலில்
தூங்கும் மரத்தின்
பூக்களின் சிரிப்போடு
ஆரம்பிக்கும்..!
ஆடிக்காற்றில் தலையசைத்து
கிளையாடும் போது
மழலையின் புதுச்சட்டை
குதூகலமாகவே தோன்றும்..!
மரங்களோடான பந்தம்
நெஞ்சில்
மனோரஞ்சிதமாக
மணம் வீசும்..!
மதிய உணவின்
மயக்கத்தில்
கண் மூடிய நேரம்....
உடல் செதுக்க..
கிளைகள் கை நீட்டி
ஆதரவு தேடும்
அபயக்குரல்..
மரமழலை அழுகை
கேட்டு ஓடி வெளிப்பட..
கண்ட காட்சி..
சாலையோர மரம் ஒன்று..
கிளையிழந்து கொண்டிருந்தது..
மற்றொரு மரம்
தூக்குக் கைதியின்
இறுதி நிமிட மௌனத்தில்
அமைதி காத்தது..
ஆடிக்காற்றின் வீச்சு
புயலாகக் கூடாதா..??
வெட்டுவோர்
அதை நிறுத்தகூடாதா..??
கண்ணுக்கு முன்
ஓர் அநீதி
கேப்பார் யாருமில்லையா..??
அடிமரத்தில் கோடாறியின் அடி..
அடிவயிற்றில் வலியுண்டாக்கியது..
கையறு நிலையில்
பலவாறாக மனம் ஏங்கியது..
வஞ்சியொருத்தியின்
வஞ்சக நெஞ்சொன்று..
வேர் அறுக்கும் கட்டிடமென
நஞ்சை விதைத்ததாம்..
சாலையோர மரங்கள்..
சாவுக்கு போராடி
குற்றுயிராய் கிடக்க..
அடுத்த வீட்டம்மா வந்தார்..
அறக்கிவிடப்பட்ட கிளை
தன் வாசல் விளக்கை உடைத்ததென
கூப்பாடு போட்டு ஓடி மறைந்தார்..
சுயநலப்பேய்களே...
எங்கள் அழுகை உங்கள்
காதுகளுக்கு எட்டவில்லையா?- என
மரம் கதறியது
என்னுள்ளும் எகிறவைத்தது...
மரவுடலின் ஒவ்வொரு
பாகமும் அறுந்து மண்ணில்
இறுதி மூச்சு விடுவதைப்..
பார்த்த கண்கள் கலங்கியது..
தட்டிக் கேட்க முடிவெடுத்து..
தந்தையிடம் முறையிட..
காரணமின்றி இரு உயிர்களை
பலி வாங்க ஏது காரணம்..?
சாலையோர மரமொன்றை வீழ்த்தினால்..
பத்து மரம் தப்பாமல் வைத்தாகனும்..
அரசாங்க அறிக்கையோடு
அப்பா எதிர்க்க...
குடிதண்ணீருக்கே அல்லாடியவர்
தாம் வைத்ததாய் கதை சொன்னார்...
எங்கள் மரமென உரிமை பேசினார்..
ஈருயிர் பலி தின்ற
ரத்தம் அவர்கள்
எச்சிலில் தெறித்தது..
தந்தை மனம் கனத்து
மனிதரல்லவென
வெறுத்துத் தகர்ந்தார்..
சுற்றியிருந்த மற்றோர்
மூடிய கதவுகளுக்குள்
ஒளிந்தபடி பேடிகளாயினர்..
நல்லவை கேட்க கூட
நாதியில்லையா நாட்டில்??
பத்துக்கு மேல் ஆளிருந்தும்..
ஒருவர் கேட்டதில் பலமில்லை...!
பதறிய மனம்..
பதைப்போடே..
மரம் பார்த்து கதறியது..
கலங்குகையில் தலை கோத - இனி
இலைக்காற்றின் இதமில்லையே...!
இறுதி அஞ்சலி செலுத்த கூட
இமைகளுக்கு இயலவில்லையே..!
"சுத்தக் காற்றின்றி
மூச்சடைத்து சாவாய்"-என
மரந்திண்ணும் மனிதப்பூச்சிகளுக்குச்
சாபமிட்டது மனம்...!!
Bookmarks