நேற்று மாலை சந்தையில் வெடித்த
குண்டுவீச்சில் அவனும் இறந்துபோனான்...
அவனோடு சேர்த்து
மூன்று குழந்தைகள்
எட்டு பெண்கள்
நான்கு வயோதிபர்கள்
ஏழு ஆண்கள்...
குண்டை வெடிக்க வைத்ததே அவன்தானாம்...
அவன் ஒரு தீவிரவாதியாம்
போலிஸ் வலைவிரித்த முக்கிய புள்ளியாம்
இதுவரை பலகொலைகள் செய்தவனாம்...
இவைகளை உண்மையென்றே நானும் நம்புகிறேன்...
அவனை நல்லவனென்றவர்கள்
அவன் சடலத்தின் மீது
கல்லையும் மண்ணையும் எறிந்துகொண்டேயிருக்கின்றனர்..
எனது பங்கிற்கு நானும் இரண்டு கற்கள்
சிலவேளை அவன் குற்றமற்றவனாகக்கூட இருக்கலாம்..
என்ன செய்ய....
பதற்ற சூழலில் எல்லாமே நம்பவேண்டும்..
அவன் பற்றி எனக்கு இன்றுதான் தெரியும்
பலமுறை கண்டிருக்கிறேன்
ஓரிரு முறை பேசியதாகவும் ஒரு ஞாபகம்...
சடங்கிற்காக அவன் பெயர் கேட்டு
பின் சடுதியாய் மறந்து போன எனக்கு
அவன் பற்றி இன்றுதான் தெரியும்..
படிப்பை பாதியில் விட்டுவிட்டு
கடையொன்றில் கூலி வேலை செய்தவன்
விசுவாசமாவென்று அவன் முதலாளி அடிக்கடி
சொல்லக்கேட்டிருக்கிறேன்..
பெரிய உயரமில்லை
சற்று கறுப்பு
பார்ப்போர்களை வசீகரிக்கும் காந்தக்கண்கள்
இவை தவிர்த்து இன்னபிற இன்றுதான் அறிந்துகொண்டேன்...
சந்திகளில் நின்று சிகரெட் பிடித்தவனில்லை
பெண்களை கண்டால் எள்ளி நகைத்தவனில்லை
அவனைத்திட்டும் எவருக்குமே
அவன் இன்சொல் சொன'னதில்லை
அந்தக்கூட்டத்தில் வேறு யாரேனும்
குண்டு வைத்திருக்கலாம்
அல்லது குண்டு வைத்தவன் தப்பித்து ஓடியிருக்கலாம்...
எது எப்படியோ
அவன்தான் குற்றவாளியென்று எல்லோரும்
சொல்வதை நானும் நம்புகிறேன்...
அவன் பற்றி எனக்கு இன்றுதான் தெரியும்..
இனி அவனை மறந்து விடுவோம்
Bookmarks