அறிவியல் மைல்கற்கள் - 33
----------------------------------------------
அ.மை- 32: நிலமகள் பரமதம் - இங்கே:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16433
-----------------------------------------------
அறிவியல் மைல்கற்கள் - 33
தடுத்தாண்டவர்
எட்வர்ட் ஜென்னர் -Edward Jenner ( 1749 - 1823)
---------------------------------
''இன்னும் ஏன் சிந்தனை?
செய்துவிடு பரிசோதனை!''
தம் சீடனான ஜென்னருக்கு மூத்த மருத்துவர் ஜான் ஹண்ட்டர்
சொன்ன அறிவுரை இது..!
எதைப் பற்றி ஜென்னர் சிந்தித்தார்?
என்ன செய்ய யோசித்தார்?
ஜென்னர் இங்கிலாந்தின் பெர்க்லி நகரில் பிறந்தவர்.
பறவைகள் உள்ளிட்ட இயற்கையைப் படிப்பதே அவர் முதல் காதல்.
உள்ளூரில் ஒரு மருத்துவரிடம் உதவியாளராக பல ஆண்டு பணியாற்றியதால்
மருத்துவம் மேல் மறுகாதல்!
பின் இலண்டன் சென்று முறையாய் முழுமையாய் மருத்துவம் படித்து,
பிறந்த ஊர் திரும்பி, மளமளவென பிரபல மருத்துவர் ஆனார்!
மருத்துவக் கல்லூரியில் அவர் ஆசான் ஹண்ட்டர்.
பெர்க்லிக்குத் திரும்பினாலும், ஆசானுடன் எப்போதும் தொடர்பிலிருந்தார் ஜென்னர்.
ஜென்னர் வாழ்ந்த அந்த காலகட்டத்தில் :
--------------------------------------------------------------
ஒரு தகவல்:
ஊரில் ஆயிரம் பேர் இருந்தால் -
அதில் அறுநூறு பேருக்கு பெரியம்மை வரும்...!
வந்தவரில் இருநூறு பேர் மாண்டு போவார்கள்!!
பிழைத்தவர்களில் முகத்தழும்பும், கண்ணிழப்புமாய் நின்றவர்கள் நிறைய்ய்ய்ய்ய!
கொள்ளை (பிளேக்), பேதி ( காலரா) வுடன் பெரியம்மையும் சேர்ந்து
முப்பெரும் அரக்கர்களாய் உலகை அடிக்கடி காலி செய்த காலம் அது..!
----------------------------------------------------------------------
ஒரு முயற்சி :
பெரியம்மை வந்தவர்களின் கொப்புள நீரை மற்றவர் வலிந்து தோலுக்குள் ஏற்றிக்கொண்டால்
(Variolation) - அவர்களுக்கு வரும் அம்மைநோய் வீரியம் கொஞ்சம் குறைந்து வந்தது.
ஆனாலும், இது சட்டியில் இருந்து அடுப்பில் விழுவதைப்போல..
பலநேரம் தடுப்புக்காக வலிந்து ஏற்ற நோயே காவு வாங்கி பயமுறுத்தியது..
--------------------------------------------------------------------------------
ஜென்னரின் கவனிப்பு:
பால் கறப்பவர்கள் கைகளில் மாட்டம்மை தொற்றும்.
அப்படி மாட்டம்மை வந்தவர்களுக்கு, பெரியம்மை வருவதில்லை..!
------------------------------------------------------------------------
ஜென்னரின் சிந்தனை :
வலிய மாட்டம்மை வரவழைத்துக் கொண்டால்
பெரியம்மையிலிருந்து தப்பலாம்..
மாட்டம்மை வீரியம் குறைந்த நோய்..விபரீத வாய்ப்புகள் குறைவு..
-------------------------------------------
செய்தார் சோதனை :
1796; மே 14 - மனித வரலாற்றில் ஒரு பொன்னாள்.
சாரா என்ற பால்காரியின் மாட்டம்மை கைப்புண் சீழை
ஜேம்ஸ் ஃபிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு ஊசியால் ஏற்றிய நாள்.
இலேசான காய்ச்சல்.. கொஞ்சம் ஊசி போட்ட இடத்தில் கொப்புளம்.
சில நாளில் ஆறித்தேறிவிட்டான் ஜேம்ஸ்!
ஆறாவது வாரம், அவனுக்கு பெரியம்மைச் சீழை ஏற்றினார் ஜென்னர்!
எத்தனை மனத்தவிப்பு... அதை மீறும் எத்துணை அறிவியல் முனைப்பு..?
ஜென்னரின் கரங்களின் அக்கண நிலையை ஒரு கணம் எண்ணிப்பாருங்கள்!
கவனிப்பு.. சிந்தனை.. அதையொட்டிய முடிவு!
ஜேம்ஸ் நலமாய் இருந்தான்.
ஜென்னர் - வென்றார்..
மனித குலமே பலன் கண்டது..
-----------------------------------------------------------
உலக நாயகன்:
உலகெங்கும் ஜென்னரின் கோட்பாடு ஏற்கப்பட்டு
பெரியம்மைத் தடுப்பு அமலாக்கப்பட்டது..
இறுதியாய் 14 ஆண்டுகள் முனைப்பாய்ச் செயலாக்கி
1980-ல் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டது..!
ஜென்னர் காட்டிய வழியில் பின்னர் வந்த லூயி பாஸ்டர்
காலரா, ஆந்த்ராக்ஸ், ரேபீஸ் - தடுத்தாண்டார்.
அதன்பின் பலர் ஹெப்படைட்டிஸ் பி முதல் டைபாய்டு வரை
இன்னும் இன்னும் தடுத்தாண்டனர்..
சகமனிதர் நோய்கண்டு, அது தடுக்கும் முறை கண்டு
கோடிக்கணக்கானோரைக் காப்பாற்ற வழி சொன்ன
ஜென்னர் போன்றவர்களே உண்மையான உலக நாயகர்கள் , இல்லையா நண்பர்களே!
Bookmarks