பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாழ்படுவது நாமறிந்த விடயமே. சுற்றுச் சூழல் பாழ்படுவது மட்டுமில்லாமல் பயிர் பாதுகாப்பிற்கு அதிகம் செலவு ஆவதும் உண்மை. பூச்சிகளையோ, களைகளையோ தொடர்ந்து ஒரே விதமான வேதிப்
பொருட்கள் கொண்டு அழிக்க முனைந்தால் அவை தங்கள் உடலமைப்பில் மாறுதல் ஏற்படுத்திக் கொண்டு அந்த கொல்லிகளை எதிர்க்கும் திறன் பெற்று விடுகின்றன. பல களைக்கொல்லிகளை களைகள் தாங்கி வளர ஆரம்பித்து விட்டன. பல பூச்சிகளும் பூச்சிக்கொல்லிகளின் நச்சைத் தாங்கி வளர ஆரம்பித்து விட்டன.அது மட்டுமல்ல பயிர்களுக்கு நன்மை செய்யும் தேனீ போன்ற பூச்சிகளும் பூச்சிக்கொல்லி தெளிப்பினால் குறைந்து விட்டன.
கனடாவிலும், அமெரிக்காவிலும் மேற்கொண்ட சோதனைகளின் படி மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் மூலம் வேதிப் பொருள்களின் தேவை 40% சதவிகிதம் குறைக்கப்படுவது கண்டறியப்பட்டது. மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் 10% அதிகம் மகசூல் தந்ததும் தெரிய வந்துள்ளது.
2.
களர்நிலங்கள் மற்றும் உற்பத்தித் திறன் குறைந்த நிலங்கள் மேலாண்மை
சில பாக்டீரியாக்களால் நிலத்தில் உள்ள கன உலோகங்களின் தனிமங்களை கிரகித்துக் கொண்டோ அல்லது அசையாமல் நிலை நிறுத்தவோ முடியும்.அவ்வாறு அந்த கன உலோகங்களைக் கிரகிக்கச் சுரக்கும் சுரப்பிற்கான மரபணுவைத் தாவரங்களில் ஏற்றினால் அத்தகைய தாவரங்களை பிரச்சினைக்குரிய நிலங்களில் பயிர் செய்து அந்த நிலங்களில் உள்ள கன உலோகங்களை வெளியேற்ற முடியும்.
3.
மருந்துப் பொருள் உற்பத்தி
இளசு அண்ணா சுட்டிக்காட்டிய படி இன்சுலின் சுரப்புக்கான மரபணுக்களை பன்றிகளிடம் இருந்து பெற்று அதைத் தாவரங்களில் செலுத்தி,அத்தாவரங்களின் பெருக்கத்தின் மூலம் இன்சுலினை உற்பத்தி செய்யலாம். வீணாகப் பன்றிகளை அழிக்க வேண்டியது இல்லை. அதோடு மட்டுமில்லாமல் பன்றியில் உள்ள கிருமித் தொற்றுதல்களும் தவிர்க்கப் படலாம். இன்சுலின் மட்டுமல்ல ஏராளமான மருந்துப் பொருட்களைத் தாவரங்களின் மூலமாகவே உற்பத்தி செய்யலாம். ஏற்கனவே நான் கூறியுள்ள வைட்டமின் அரிசி அப்படித்தான். வைட்டமின் குறைபாட்டை குறைக்கலாம். உணவே மருந்து.
4.
பயிர்மேம்பாடு
சில வகைத் தாவரங்களுக்கு மற்ற தாவரங்களின் மரபணுகொண்டு
சுவை கூட்டவோ,உற்பத்தி பெருக்கவோ செய்ய மரபணுமாற்றம் பெரிதளவில் உதவுகிறது.வளர்ச்சி தாங்கி வளரக்கூடிய, களர், உவர் நிலங்களில் வளரக்கூடிய, நீர்த் தேவை குறைந்த எனப் பல தாவர வகைகளை உண்டாக்க முடியும்.
தீமைகள்.
1.
ஒவ்வாமை:
ஒவ்வாமை என்பது இந்தியாவில் பெரிய பிரச்சினையாக இல்லை. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேர்க்கடலையால் பலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. வேர்க்கடலையால் செய்த தின்பண்டங்கள் பள்ளிக்குள் கொண்டு வரக்கூடாது என்பன போன்ற சட்டங்கள் உள்ளன. வேர்க்கடலையில் இருந்து பெறப்பட்ட மரபணு வேறு செடிகளுக்கு மாற்றப்படும் பொழுது அந்தச் செடியும் ஒவ்வாத பொருட்களை உற்பத்தி செய்யலாம். எல்லாமே ஒரு ஊகம்தான்.யாரும் இன்னமும் அப்படி நடந்ததற்கான ஆதாரம் காட்டவில்லை. அபப்டி நடக்காது என்பதற்கான உத்திரவாதமும் இல்லை.
2.
இயற்கையான மரபணு மாற்றம்??
மரபணுமாற்றத்தினால் வரக்கூடிய மிகப் பெரிய தீமை இதுவாகத்தான் இருக்க முடியும்.
இங்கே, களைக்கொல்லி கொண்டு களையைக் கட்டுப்படுத்துவது பற்றிய விளக்கம் கொடுத்தால் நன்றாக விளங்கும். களைக்கொல்லிகள் தாவரங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சுரப்பிகளைக்(hormones responsible for regular physiological processes) கட்டுப் படுத்தவோ அல்லது ஊடுருவிச் சென்று அந்தச் சுரப்பியின் செயல் திறமையை குறைப்பதன்(reducing the activity or binding to that hormone) மூலமோ அந்தச் செடிகள் அழியக் காரணாமாகின்றன. களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட தாவரங்களில், புதிய மரபணுவின் மூலம் அன்றாடம் சுரக்கும் சுரப்பிகள் மட்டுமில்லாமல் அதிகமாக வேறொரு சுரப்பியும் சுரக்க வைக்க முடியும். அந்தப்புதிய பொருள் தெளிக்கப்படும் நச்சின் மூலப்பொருளோடு வினை புரிவதன் மூலம் அந்த நச்சு மூலப்பொருள் அந்த்ச் சுரப்பியை அழிக்கவோ அல்லது சிரப்பியின் செயல்திறன் குறைக்கவோ முடியாது அல்லவா? ஆக அந்த நஞ்சானது செடிகளைக் கொல்ல முடியாது. இப்பொழுது களைக்கொல்லியைத் தெளித்தால் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட தாவரங்கள் தவிர மற்ற அனைத்து தாவரங்களும் அழியவேண்டியதுதான். ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் எல்லாக் களைக்கொல்லிகளையும் அந்தத் தாவரத்தால் எதிர்த்து வாழமுடியாது. புதிய மரபணுவால் உற்பத்தி செய்யப்படும் அந்தப் புரதமானது சில குறிப்பிட்ட வேதிப்பொருள்களோடு மட்டுமே
வினைபுரிய முடியும். ஒரு உதாரணம் சொல்லலாமா?
அமெரிக்காவின்
மான்சாண்ட்டோ(Monsanto) நிறுவனம் தயாரிக்கும் களைக்கொல்லியின் பெயர் Round Up. அதன் மூலப்பொருள்(தாவரத்தின் செயல்பாட்டைக் குறைக்கும் வேதிப்பொருள்) கிளைஃபோசேட் (Glyphosate). மான்சாண்ட்டோ நிறுவனம் கண்டுபிடித்துள்ள கனோலா வகை இந்தக் களைக்கொல்லியை மட்டுமே எதிர்க்க முடியும் (Round-up ready Canola). மற்றொரு நிறுவனமான
ஜெர்மனியின் பேயெர்(Bayer Crop Sciences-நான் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனம்) தயாரிக்கும் களைக்கொல்லி Liberty. அதன் மூலப்பொருள் குளுஃபோசினேட்(Glufosinate). இந்த மூலப் பொருள் தாவரத்தின் வேறு சுரப்பியைத் தாக்கி அழிப்பது. பேயெரின் கனோலா வகை Liberty-Link Canola. இது பேயெரின் களைக்கொல்லியை மட்டுமே தாங்கி வளரமுடியும். விதையையும், களைக்கொல்லியையும் பிரித்து வாங்க முடியாது. விதை விற்கும் நிறுவனமே களைக்கொல்லியையும்
விற்கும். அதுதான் வியாபார தந்திரம். ஒரு நிறுவனத்திடம் வாங்கிய விதையில் மற்ற எந்த நிறுவனத்தின், ஏன் அதே நிறுவனத்தின் வேறு
களைக்கொல்லி தெளித்தாலும் செடிகள் இறந்து விடும்.
அப்படியானால் மரபணுமாற்றம் செய்யப்பட்ட கனோலாவின் மகரந்தம் காற்றில் பறந்து மரபணு மாற்றம் செய்யப்படாத மற்ற கனோலாக்களைகருவுறச்செய்வதன் மூலம் அந்தச் செடிகளையும் மரபணுமாற்றம் செய்யலாம். களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட கனோலா நிலத்தில், கடுகு வகைகள் களையாக வளரும். கனோலாவும் கடுகும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. களைக்கொல்லி அடித்தால் கனோலா தவிர அனைத்துமே இறக்கவேண்டியதுதான். களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட மரபணுமாற்றம் செய்யப்பட்ட கனோலா தன் மகரந்தத்தின் மூலம் கடுகையும் மரபணுமாற்றம் கொண்டதாக மாற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் கனோலா சிறிய செடியாக இருக்கும் பொழுதே களைக்கொல்லி தெளிப்பதன் மூலம் கடுகைக் கொன்று விடுவதால் அது பூவே பூக்காதே! பின்னர் எப்படி மகரந்தச் சேர்க்கை எல்லாம் என்கின்றனர் மரபணுமாற்றத்தை ஆதரிப்போர் . அப்படியெல்லாம் எளிதாக சொல்லிவிடமுடியாது. நீங்கள் தெளிக்கும் களைக்கொல்லி தன் மேல் படாமல் தப்பி வளரக்கூடிய ஒன்றிரண்டு கடுகுச்செடிகள் அந்த மகரந்தச் சேர்க்கையின் மூலம் கருவுற்றால் பின்னர் அந்தக் கடுகும் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் பெற்று விடும். இன்று ஒரு செடியாக இருப்பது நாளை 4000 ஆகும் என்கின்றனர் எதிர்ப்போர். அப்படி மகரந்தம் மூலம் மரபணுமாற்றம் பெற்று மரபணுமாற்றப்படாத கனோலா களைக்கொல்லியை தாங்கி வளர்ந்த கதையும் கனடாவில்தான் நடந்தது.
பேயெரின் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் பெற்ற கனோலாவின் படம் கீழே.
3.
பாக்டீரியாவின் டி.என்.ஏவை உண்ணும் அபாயம்
பாக்டீரியாவின் டி.என்.ஏ மரபணுமாற்றப்பட்ட தாவரத்தில் இருப்பதால் அந்த தாவரத்தின் விதைகளிலும் அந்த டி.என்.ஏ இருக்குமே. அதையும் சேர்த்து நாம் உண்ணும் அபாயம் இருக்கிறதே? என்பது எதிர்ப்பவர்கள் வாதம்.
இல்லை. பாக்டீரியாவின் டி.என்.ஏ என்பது முதலில் சமைக்கும் பொழுதே சிதைந்து விடலாம். அப்படியே சமைக்காமல் உண்டாலும் உணவுக்குழாய்க்குள் சென்று விட்ட டி.என்.ஏ என்பது நம் உணவுக்குழாய்களில் சுரக்கப்படும் அமிலங்களினால் செயலிழக்கச் செய்ய முடிகின்ற வாய்ப்பும் இருக்கிறது. அப்படியே அது செய்யாது என எடுத்துக் கொண்டோமானாலும் நாள்தோறும் நாம் உண்ணும் உணவுகளில், சமைக்காத மரபணுமாற்றம் செய்யாத காய்கறிகளிலும் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. வழி வழியாக இத்தகைய நுண்ணுயிரிகளைக் கொல்ல நமது உடல், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் புரதங்களைக் கொண்டுள்ளது அவை இது போன்ற டி.என்.ஏக்களைக் கொன்று விடும். ஒரு வாதத்திற்கு எதிர்ப்பாளர்கள் சொல்வது உண்மை எனக் கொண்டாலும் நம் உடலில் இது நாள் வரை நாம் உண்ட உயிரினங்களின் மரபணு இருக்க வேண்டுமல்லவா. அப்படியானால் மாம்பழத்தின் மஞ்சள் நிறத்துக்கான மரபணு ஒரு ஆப்பிரிக்கரையாவது மஞ்சளாக மாற்றி இருக்கலாமே? பூச்சிகளை உண்ணும் மனிதர்களில் யாருக்கேனும் இறக்கைகள் இருக்க வேண்டுமே? என்பது ஆதரிப்போர் வாதம்.
ஆனால் அவ்வளவு எளிதாக நாம் இதை விட்டு விட முடியாது. இன்றைக்கு ஆபத்தில்லாத ஒன்று திடீரென ஆபத்து எனத் தெரிய வருகையில் காலம் கடந்து போயிருக்கும். அன்றைக்கு நாம் இதை சரி செய்ய முடியாது. எனவே இந்த ஆபத்தான விளையாட்டுக்கள் எல்லாம் வேண்டாம் மூட்டை கட்டி வையுங்கள் என்பது எதிர்ப்போர் வாதம்.
4.
மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிருக்கும் பூச்சிகள் எதிர்ப்புத் திறன் உருவாக்கலாம்.
இப்படியான ஒரு வாய்ப்பு இல்லை என்றும் மறுத்து விட முடியாது. ஆனால் பூச்சிகள் வேதிப்பொருட்களுக்கும் இயற்கை இடுபொருளான வேப்பம் புண்ணாக்கிற்கும் கூட எதிர்ப்புத்திறன் வளர்க்கும் சாத்தியம் உண்டு. அப்படியானால் இந்த தீமையானது இந்தத் தொழில் நுட்பத்தை மட்டும் குறிப்பதல்ல.
5. சரி நீங்கள் ஒரு புதிய மரபணுவைப் புகுத்துவதால் மரபணுக்கட்டமைப்பில் மாறுதல் ஏற்படுத்துகிறீர்கள். அப்படியானால் அந்தச் செடியில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்கள் மரபணுமாற்றம் செய்யப்படாத தாவரங்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களிலிருந்து மாறுபட்டு இருக்குமே?
இருக்கலாம். ஆனால் சந்தைக்கு வரும் ஒரு தாவர ரகத்தின் சத்துக்கள், கனிம உப்புக்கள் போன்றவற்றின் விகிதம் எந்த விதத்திலும் மரபணு மாற்றப்படாத தாவரத்தின் விகிதத்தில் இருந்து வேறுபடக்கூடாது என்பது விதி. எனவே அந்த பயம் தேவையில்லை.
இன்னமும் சில நன்மைகளும் தீமைகளும் இருந்தாலும், நான் மேற்கூறியவை மிக முக்கியமானவை. மரபணு மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் நன்மையும் தீமையும் கலந்த சிக்கலான விளைவுகள். இது வேண்டுமா வேண்டாமா? எந்த இடத்தில் மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இந்தச் சிக்கல்களைக் களைய என்ன வழி? அடுத்த பகுதியில்
மாற்றம் தொடரும்.
Bookmarks