இன்று போய் நாளை வா?
மௌனங்களே வார்த்தைகளாகி
மனதுக்குள் ஒலிக்கட்டும்
இனியும் எமக்கு
விடிவு வருமாவென?
வயதாகி விட்டது
வார்த்தைகளுக்கு..
இன்னுமொரு தலைமுறையும்
படிக்கட்டும்
இதிகாச வரலாற்றில்
இராவணன் ஆண்டான் என.
இயக்கரும் நாகரும்
வாழ்ந்த இந்த பூமியில்
இன்னும்
இரக்கமற்ற இனம்
வாழுகின்றது என
வரலாறு வழிகாட்டும்.
அகதி முகாங்களிலும்
அன்னியச் சிறைகளிலும்
அடைக்கப்பட்டாலும்
திறந்து விடப்பட்டாலும்
சித்திரவதைப்படும்
சின்னங்களுக்கு
சிறைவாசலில்
கேள்விக்கனைகளை
தொடுக்கும்
பெற்றோருக்கு
ஒரே பதில்
இன்று போய் நாளை வா?
இதில்
இராமன் யார்?
இராவணண் யார்?
- முகவன் -
Bookmarks