பாகம்-1
ஆம்ஸ்டர்டாம் சிப்போல் விமான நிலையத்தில், ட்ரான்ஸிட்டில் அடுத்த பயணத்துக்கான போர்டிங் அட்டையை வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தான் வெற்றிச் செல்வன். ஜியாலஜிஸ்ட்டாக ஒரு அமெரிக்க எண்ணை திருடும் மகா நிறுவனத்தினருக்காக மேற்கு ஆப்பிரிக்க நாடான கபான் என்ற நாட்டில் பணியிலிருந்தான். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாயகம் வந்துபோகும் வாய்ப்பிருந்தது. கபான் நாட்டிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு விமானச்சேவை இல்லையென்பதால், கே.எல்.எம் விமான சேவையின் மூலம் சிப்போல் வந்து அங்கிருந்து சென்னை செல்வது அவன் வழக்கம். வழக்கமென்றால் இது மூன்றாவதுமுறை அவ்வளவுதான்.
கபானின் தலைநகரம் லிப்ரெவெலியில் விமானம் ஏறும்போதே சிப்போல் விமான நிலைய வரிவிலக்கு கடைகளில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலைத் தயாராக சட்டைப் பையில் வைத்திருந்தான். 5அடி 10 அங்குல உயரம். சாக்லேட்டு கலருக்காரா, சிலேட்டு முதுகுகாரா என்று பாடப்படக்கூடியவனாக நல்ல ஆரோக்கியத்தில் இருந்தான்.
அடுத்த வரிசையில் ஒரு ஜெர்மேனியன், ஆத்தா உடம்புக்குள் புகுந்து மலையிறங்கியபின் நிற்பதைப் போல தலை தனியாக ஆட, நின்று கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தான். மேசைக்கு அந்தப்புறமிருந்த பெண்ணிடம்
'என்னை ஏன் இரண்டு நாளாக இந்த விமான நிலையத்தில் வைத்திருக்கிறீர்கள். என்னை என் வீட்டுக்கு அனுப்புங்கள்.என் ரஷ்ய மனைவி எனக்காக காத்துக்கொண்டிருப்பாள்.'....
என்று சலம்பிக்கொண்டிருந்தான். அவன் சலம்பலைத் தாங்க முடியாதவனாக அவனருகே வந்த விமான நிலைய ஊழியர் ஒருவர் அவனை சமாதானப் படுத்தி அப்புறப்படுத்தினார். வெற்றிச்செல்வன் அந்த ஊழியரிடம் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு,
"மூன்று நாட்களுக்கு முன் இவனும் ஒரு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்தான். அன்றே அவனது அடுத்த விமானமும் தயாராக இருந்தது. நன்றாக குடித்துவிட்டு நடக்க முடியாமல் இருந்தவனை விமானத்தில் ஏற நாங்கள் சம்மதிக்க வில்லை. நேற்றும் அதன் முன் தினமும் இதே தொல்லைதான். அதனால் இப்போதும் இங்கேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. எப்படியும் இன்று தண்ணீர்த் தொட்டியில் இரண்டுமணிநேரம் முக்கிவைத்தாவது அனுப்பிவிடுவோம்" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.
எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவன் வெற்றி. அதே சமயம் தன்னால் முடிந்த உதவியையும் செய்யக்கூடியவன். கவிதை எழுதுவான். கராத்தே தெரிந்துவைத்திருக்கிறான். டிஸ்கொதேக்களுக்கும் போவான், சுகி சிவத்தின் உரை கேட்கவும் போவான். கையில் கிடைத்த போர்டிங் அட்டையை எடுத்துக்கொண்டு மெல்ல வரிசைவிட்டு வெளி வந்தான். அருகிலிருந்த திரையில் அவனது விமானம் புறப்படும் டெர்மினலைக் கண்டுபிடித்தான். மிகப்பெரிய விமானநிலையம். இவனது டெர்மினல் அங்கிருந்து சற்றேறக்குறைய அரை கிலோமீட்டர் இருந்தது. நடக்க ஆரம்பித்தான். இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாமென்ற எண்ணத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடை இருந்த பகுதிக்குப் போனான்.
30, 50, 125 ஈரோ என்று விலைகள் போட்டிருந்த அட்டைகளைப் பார்த்ததும் வாங்கவேண்டுமென்று தோன்றிய எண்ணத்தை இந்தியத்தொகையில் மாற்றிப்பார்த்து கைவிட்டான். போனமுறை திரும்பி வரும்போது தங்கையும், நெருங்கிய நன்பனும் வாங்கிவரச் சொன்னதை மட்டும் வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வெளிவந்து நடை பாதையில் சங்கமமான நிமிடம் அந்தப் பெண் அவனை இடித்துக்கொண்டு போனாள். கோபமாய் அவளைத் திரும்பிப் பார்த்தவன், அதே நேரம் இவனை நோக்கித் திரும்பிய அவளது கலக்கமான முகம் பார்த்து கோபம் குறைந்து குழப்பமானான். துவாரப்பாலகர்களைப் போல, கோட் அணிந்த இரண்டுபேர் அவளை அரை அங்குல இடைவெளியில் கிட்டத்தட்ட தள்ளிக்கொண்டு போனார்கள்.
எப்போதும் தலைதூக்கும் அவனது ஆர்வம் இப்போது எட்டிப் பார்த்தது. கைக்கடிகாரம் பார்த்து அந்த எண்ணத்தை மறந்து நடந்தான். நான்கு அடிகூட நடந்திருக்க மாட்டான்...ஒரு ஆள் இந்தியமுகம், மேற்கத்திய நாகரீகத்துடன் இருந்த அவன் இவனை நிறுத்தினான். கையில் வைத்திருந்த வெள்ளைக் காகிதத்தை அவனிடம் கொடுத்துக்கொண்டே ஆங்கிலத்தில்,
'அதோ அங்கே போகிறாளே ஒரு பெண்..."என்று அவனை சற்றுமுன் இடித்துவிட்டுப் போனப் பெண்ணைக் காட்டி,
"இதை என் கையில் திணித்துவிட்டுப் போனாள். இதில் என்ன எழுதியிருக்கிறதென்று என்னால் படிக்க முடியவில்லை. ஏதாவது இந்திய மொழியாக இருக்கும்...உங்களுக்குப் புரிகிறதா என்று பாருங்கள்' என்றான்.
இவனுக்கே உள்ள குறும்பில்..அந்த மனிதனைப் பார்த்து "ஏன் நீங்களும் இந்தியர்தானே...உங்களால் படிக்க முடியாதா?" என்று கேட்டதும்,
"ஹே மேன்...நான் இந்தியனாக இருந்தாலும் ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்தவன். எனக்கு இந்த குப்பைகளெல்லாம் தெரியாது...கீப் திஸ்' என்று அந்த கை துடைக்கும் தாளை வெற்றியின் கைகளில் திணித்துவிட்டு எனக்கென்ன என்பதைப்போல நகர்ந்து மறைந்தான்.
சுரு சுருவென்று வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டே அந்த தாளைப் பிரித்தான். அதில்
"என்னைக் காப்பாத்துங்க...ஆபத்து"
என்று தமிழில் எழுதியிருந்தது.
தொடரும்
Bookmarks