எண்ணங்களுக்கெல்லாம்,
வண்ணங்கள் கொடுத்தாய்!
வார்த்தையிலே.....
வாழ்க்கையிலே?!
பூமிப்புறாவின் கனவுகளில்
வலம் வந்தது, சில காலம் -அந்த
வெண்ணிலவு!
கனவுகளுக்கெல்லாம்
கல்லறையமைத்திட,
பிறந்தது ஒரு விடியல்..
எல்லோருக்கும்,
விடியலென்பது ஒரு வெளிச்சம்...
இந்த பூமிப்புறாவுக்கோ,
அதன் கனவுகளை சிதறடிக்க
வந்த ஒரு இருள்!
காலைபொழுது விடிந்ததும் -தன்
கனவது உடைந்ததும்,
நிலவை தேடியது பூமிப்புறா...
காணக்கிடைக்காமல்,
கண்ணீர் விட்டழுதது!
தான் கண்டதெல்லாம்
வெறும் கனவென்று
நம்ப மறுத்தது...
அழுதது! புரண்டது!! துடித்தது!!
எப்பொழுதும்,
மாலைபொழுதினில் வந்திடும் நிலா
அன்றும் வந்தது!
தன் வெண்ணிலாவை
மீண்டும் கண்டதில்..
இன்பத்தில் மிதந்தது!
சிறகையடித்து,
நிலவருகில் பறந்தது!
நெருங்க முடியாது என்று
தெரிந்தோ, தெரியாமலோ....
உயர உயர பறந்தது புறா!
விலகி விலகி சென்றது நிலா!
உடல் சோர்ந்தது!
உள்ளம் சோர்ந்து!
நா வறண்டு, உடல் சுருண்டு
வேகமாய் வீழ்ந்தது கீழே…
"பூமிப்புறா"
அது கடைசியாய் உச்சரித்தது!
நிலவைப்பார்த்து....
"நீ கடவுள் வரைந்த ஓவியம்!
நான் காற்றில் கரைந்த காவியம்!"
Bookmarks