விஜயா
சற்றே பெரிய சிறுகதை
விடியங்காட்டி வந்திர்றேன்னு சொல்லிட்டுப் போன விசியாவ இன்னம் காணோமே! கிரகம் பிடிச்சவ எங்கன போய்த்தொலைஞ்சாளோ! என்ற வசவோடுதான் சீனியம்மாளுக்கு அன்றைய நாள் புலர்ந்தது.மேலக்காட்டில அருகு மண்டிக்கிடக்கு. கன்னிப்புள்ளையும் பாலாட்டங்கொழையுமா களைப் புடிச்சி போயிருக்கே! நாலாள கூட்டிட்டுப்போயி வெட்டினா வெரசா வேலை முடியும்னு நேத்தைக்குச் சாயங்காலமே ஆள் சேர்த்துத்
தயாரா வச்சிட்டுத்தான் உறங்கப்போனா சீனியம்மா.காலையில விசயா வரலைன்னா அச்சலாத்தியாத்தான இருக்கும்.
விசயா விசயானு சின்னப்புள்ளைக கூட கூப்பிடற விஜயாவிற்கு போன ஆவணியோட 33 முடிஞ்சி 34 வயசு நடக்கு. ஏற்கனவே வெள்ளாமை பொய்ச்சு போயிருக்கிற ஊரில தரித்திரம் தாண்டவமாடற குடும்பத்தில மூனாவது புள்ளையாத்தான் விசயா பொறந்தா. விசயாவுக்கு கூடப் பொறந்தது ஒரு அண்ணனும் அக்காளும். அவுகய்யா ஊக்குருசாமி விசயா பொறந்ததுமே காணமப் போயிட்டாரு.அம்மாவும் அண்ணனுமா சேர்ந்து விசயாவுக்கு கஞ்சி ஊத்தினாக. விசயாவும் படிக்க பள்ளிக்கூடம் போனாய்யா! ஆனா பாருங்க ஓரொன்னா ஒன்னுக்கு அப்புறம் வாய்ப்பாடுல ஒன்னுமே தெரியாது. மூணாப்பு மட்டும் முக்கி முக்கி மூணுவருசம் படிச்சா. பள்ளிக்கூடத்தை நல்லா சுத்தமா கூட்டிப் பெருக்குவான்னு சரசுவதி டீச்சர் அவளை பெயிலாப் போட்டிட்டாங்கன்னு விசயாவுக்கு ஒரே கோவம். இனிமேல் பட அந்தப் பள்ளியியோடம் போவமாட்டேன்னு உக்கார்ந்திட்டா. அதோட சின்னப்பிள்ளைக கூட விளையாடித் திரிஞ்சா விசயா.
பிள்ளைகளும் விசயாக்கா விசயாக்கானுதான் ஆரம்பத்தில வெளையாடிச்சிங்க. போகப்போக அக்காவை மறந்து இப்போ எல்லாருக்கும் விசயாதான். புளியமரமேறி புளி பறிச்சிப் போடுவா. புளியம்பழத்தை மேல மட்டும் உடைச்சி ஆட்டு மடுவிலே அப்படியே பாலைக்கறந்து அந்த புளியம்பழத்தோட்டுக்குள்ள விட்டிடுவா. புளில பட்ட பால் உடனே திரிஞ்சதும் தயிராயிடுச்சுன்னு சின்னப்பிள்ளைகளுக்கு வெளாட்டுக்காட்டுவா.எலந்தப் பழம்பறிக்கிறதென்ன, தட்டாம்பூச்சி யடிக்கிறதென்ன விசயாவுக்கு நல்லாத்தான் நேரம் போச்சு. அப்பதான் அவுக அக்காளைப் பக்கத்தூரில ஒரு சம்சாரிக்கு கட்டிக் கொடுத்தாக. கல்யாணம் முடிஞ்சி போனவ போனதுதான். அவ மாமங்காரன் அக்காளை பொறந்த வீட்டுக்கே போகக்கூடாதுன்னுட்டான். இங்கன இவுக வீட்டிலயும் வசதி இல்லாததால மொறை செய்ற கண்க்கில இருந்த தப்பிச்சிக்கிடலாம்னு அமைதியா இருந்துக்கிட்டாக. வீட்டு சாமான் வாங்க காச்சல் மண்டையிடின்னா ஊசி போடப் பக்கத்தூருக்குப் போனா அப்போ பார்த்துக்கிட வேண்டியதுதான். ரெண்டு நாள் வேலையிருக்கு அக்காக்காரி வீட்டில ரவைக்குத் தங்குவோம்கிற பேச்சுக்கிடமில்லை.
அட்டத் தரித்திரம் விட்டத்தில இருக்கும்னு ஒரு சொலவடை சொல்வாக. அதைப்போல அமைஞ்சி போச்சி விசயா கதை. அவ அண்ணங்காரன் கூட வேலை செஞ்ச வள்ளியைக் கல்யாணம் பண்ணிகிட்டு வந்திட்டான். வந்த வள்ளி மொத வேலையா உங்கம்மாவுக்கும் உன் தங்கச்சிக்கும் நான் சோறாக்க முடியாதுன்னுட்டா. விசயாவையும் அவுகம்மாளையும் துண்டா ஒரு குடிசை பார்த்து வெச்சாக. ஒத்தைப் பொம்பளையா என்ன செய்ய முடியும் அவுகம்மாவுக்கு. அதனால அவளை களையெடுக்க்க கூடக் கூட்டிப்போச்சு. விசயாளுக்கு மிளகாச்செடிக்கும் களைக்கும் வித்யாசம்
தெரியாம வரட்டு வரட்டுனு ஒரு பட்டம் மிளகாச்செடியைப் பிடுங்கிப்போட்டா. இதென்ன கெரகசாரம்னுட்டு முதுகில நாலு சாத்து சாத்திச்சி அவுகம்மா. பாவம் விசயா வாயெடுத்து அழுகுறா. பெருங்கொரலெடித்து கூப்பாடு போடறா.எனக்கெதுவும் தெரியலையே சொல்லிக்கொடு ஆத்தானு மருகுறா.அவுகம்மாவும் அழுகுது. பொழைக்கத் தெரியாத பொச கெட்டவளா வளர்த்திட்டோமேனு உருகுது. அவுகம்மா எல்லாத்தையும் விசியாவுக்கு சொல்லிக் கொடுத்திச்சு.மம்பட்டி பிடிக்கிறதும் வெட்டருவா பிடிச்சி மரம் வெட்டற்துமா விசயா பழகிக்கிட்டு ஊர்லயே வேலைக்குக் கெட்டிக்காரின்னு பேரெடுத்தாய்யா.
விசயா சோடுப் பொண்ணுகளெல்லாம் கல்யாணம் ஆகிப் போய்ட்டாக. விசயாவிற்கும் கல்யாண ஆசை வந்திச்சு. விசயாவிற்கு கல்யாண செஞ்சி வைக்கத்தான் ஆளில்லையே. காதல் செஞ்சி யார் மனசையும் கவர முடியற அளவுக்கு கன்னியாலம்மன் விசயாவிற்கு அழகும் கொடுக்கலை. ஒரு வேளை கொஞ்சம் வசதியா நல்லா சாப்பிட்டிருந்தானா ஓரளவு பூசின ஒடம்பாயிருந்திருக்குமோ என்னவோ விசயா இன்னமும் ஒல்லிக்குச்சி போலத்தான் திரியுறா. காட்டு மேட்ல திரிஞ்சி தலைக்கு எண்ணையக் காட்டி பல வருசமானவளைப் போலத்தான் இருப்பா. எப்பவோ வாங்கின சிவப்பு ரிப்பனை வெச்சி ஒத்தைச்சடையை ரெண்டா மடிச்சிக் கட்டியிருப்பா விசயா.
ஊரில பொம்பளைகளுக்கு பொழுது போகணும்னா விசயால வீட்டுக்கு கூப்பிட்டு கதை பேசுவாக. அங்கன மாப்பிள்ளையிருக்கு இங்கன மாப்பிள்ளையிருக்கு நான் உனக்கு பேசி முடிக்கிறேன்.. சித்த இந்த மாவை ஆட்டிக்கொடுத்திட்டுப் போனு ஏமாத்தி வேலை வாங்குறது தெரியாமலேயே எனக்கந்தப் பெரியம்மா கல்யாணம் முடிச்சி வைக்கும்.. அந்த கீழத்தெரு ராசம்மாக்கா மாப்பிள்ளை பார்த்திருக்குனு அப்பிராணியா சொல்லிக்கிட்டு திரிஞ்சா விசயா. அவுகம்மாவுக்கு சொந்த மகனே அனுசரனை இல்லாமப் போனதால இதயெல்லாம் தட்டிக்கேட்க முடியாம வாயிருந்தும் ஊமையாத்தான் கிடக்கு.
ஏட்டி கல்யாணத்திற்கு பணம் வேணுமே பணம் சேர்த்துவை உடனே கல்யாணம் முடிக்கலாம்னு ஒரு தடவை பொங்கலுக்கு வந்த முத்துலட்சுமி சொல்லிட்டுப் போனதில இருந்து விசயா பணம் சேர்க்குறாய்யா. யாரென்ன வேலை சொன்னாலும் செய்றா. ஆள் ஒல்லியா இருந்தாலும் ஒரு ஆம்பிளை செய்ற வேலை செய்றா. அவ பணம் சேர்க்கற வெறியில மரத்தை வெட்டினானா மரச்சில்லுக எல்லாம் பல மைல் தூரமா பறந்து போகுதுக.
மம்பட்டி பிடிச்சி கொத்துனான்னா மண்ணெல்லாம் விட்டிடு விட்டிடுன்னு வெலகி ஓடுது. சத்துணவு அமைப்பாளர் அக்கா மட்டுந்தான் விசயா மேல கொஞ்சமாவது உண்மையான பாசத்தோடு பழகும். அன்னன்னிக்கு மீந்து போன சாப்பாட்டையெல்லாம் விசயாவை வாங்கிகிட்டுப் போகச்சொல்லும். அது சொல்லித்தான் பக்கத்தூர் போஸ்ட் ஆபிஸ்ல பணம் போட்டிட்டு வந்தா விசயா.அந்தா இந்தானு அது ஒரு பத்தாயிரமாச் சேர்ந்து போச்சி. இன்னைக்குச் சீனியம்மா வீட்டு வேலைக்கு கிளம்பியிருக்கிறா.
சீனியம்மாவோட வசவைச் சரிக்கட்டிக்கிட்டு வெக்கு வெக்குனு மேலக்காட்டுக்கு மத்த பொம்பளைகளோட போனா. மத்தியான வரைக்கும் களை வெட்டிட்டு வேம்புக்கடியில கூடினாக பொம்பிளைக. கொண்டிட்டு வந்த கஞ்சியைக் குடிச்சிட்டு கேலியும் கிண்டலுமா அன்னைக்குச் சாயுங்காலம் வரைக்கும் வேலை பார்த்தாக. கல்யாணத்தைப் பத்தி சீனியம்மாதான் பேச்சுக்கொடுத்தா.கம்மாப்பட்டியில ஒரு ஆளு இருக்காரு. அவரும் பல நாளாக் கல்யாணம் முடிக்காமத்தான் இருக்காரு பேசி முடிச்சிடுவமான்னா சீனியம்மா. சரின்னா விசயா.விசயாளுக்கு ஒரு வழி பொறந்திடுச்சோன்னு சந்தோஷப் படுதுக அவ கூட்டாளியெல்லாம்.
பொண்ணு பார்க்க ஏற்பாடெல்லாம் சீனியம்மா தலைமையில நடக்குது. மாப்பிள்ளைக்காரனும் அவன் தங்கச்சி குடும்பமும் பொண்ணு பார்க்க குறுக்குப் பாதை வழியா மொட்டை வண்டில வந்து எறங்குறாங்க. மாப்பிள்ளை ராசப்பனுக்கு 40 வயசிருக்கும். ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்குமிடையே எங்க ஊர் கம்மா மடை போல இடமிருக்கு. வண்டி மசை போல கரு கருன்னு அப்படி ஒரு கருப்பு. முடியை விளக்கெண்ணை ஊத்தி படிய வாரி நெத்தில செந்திருக்கப் பொட்டை வெச்சிருக்கான். அவன் தங்கச்சி, தங்கச்சி வீட்டுகாரன், அப்புறம் சின்ன புள்ளைக ரெண்டு பேரு இவ்வளவுதான் மாப்பிள்ளை வீட்டு ஆளுக. உள்ளூர்ல இருக்கிற அண்ணங்காரனும் அவன் பொண்டாட்டியும் ஏதோ போனாப் போகுதுன்னு வர ஒத்துக்கிட்டாக. அதிலயும் அவ மதினி வள்ளி விசயாவோட அண்ணங்காரனை சொல்லித்தான் கூட்டிட்டு வந்தா. அங்கன போய் அது செய்றேன் இது செய்றேனு வாய்விட்ட்டீரு தொலைச்சிப்பிடுவேன் தொலைச்சினு. விசயா அண்ணன் மக்கமாரு ரெண்டு பேரும் வந்தாக. விசயாவோட அம்மாவைச் சேர்த்துகிட்டா இவ்ளோதான் பொண்ணு வீட்டாளுங்க.
ராசப்பன் இருக்கிற லட்சணத்திற்கு விசயா அழகுல நொட்டம் சொல்லுதான். பொண்ணு ஒல்லியாயிருக்குங்குறான். வயசாயிடுச்சுங்குறான் அந்த 40 வயசு இளவட்டம். அவன் இருக்குற இருப்புக்கு ஐம்பதாயிரம் கொடுத்தா கட்டிக்கிடுதேங்கான். விசயா வச்சிருக்கிற பத்தாயிரம் அவ பட்ட பாடு அவளுக்குத்தான் தெரியும். விசயா மதனி எங்க வீட்டுக்காரன் வாக்குக்கொடுத்திடுவானோன்னு அவனை வடக்குவாசெல்லியம்மனைப் போல ஒரு முறை முறைச்சிப் பார்க்கிறா. விசயாவோட அம்மா வீட்டு எடத்தை வித்தாவது கட்டிக்கொடுக்கணும்னு சரின்னு சொல்லிச்சு. கார்த்திகை மாசம் அது.மார்கழி முடிச்சி வர்ற தையில கல்யாணத்தை வெச்சிக்கிடுவோம்னு பேச்சு.யாரைப்பார்த்தாலும் கல்யாணத்தைப் பத்திதான் பேசுறா விசயா. வேலைக்குப் போன அங்க இருக்குற பொம்பிளைகளுக்கு எடக்குப் பேச இப்போ விசயா கல்யாணம் அமைஞ்சி போச்சி.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்னு சும்மாவா சொன்னாக. விசயாவோட அண்ணன் காரனுக்கு மரத்திலேருந்து விழுந்து பொசம் இறங்கிப்போச்சின்னு ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்காகலாம். திரும்பவும் தோள்பட்டையச் சேர்த்துவைக்கணும்னா இருபதாயிரம் செலவாகுங்குறாரு கணேசன் டாக்டரு.அப்படியும் அவனால கையை வெச்சு முரட்டு வேலைகளெல்லாம் செய்ய முடியாதாம். விசயாதான் சத்துணவு அக்கா சொல்லச் சொல்லக் கேட்காம அந்தப் பத்தாயிரத்தை தூக்கிக் கொடுத்தா. ராசப்பனைக் கல்யாணம் கட்ட முடியாதுன்னு தாக்கல் சொல்லியாச்சி. இப்போவும் என்ன வேலைன்னாலும் விசயா செய்யத் தயாராதான் இருக்கா. வம்பாடுபட்டாவது பணம் சேர்த்து கல்யாணம் செய்யணும்னு இல்லை. அண்ணன் பிள்ளைகள் அவளைப் போல தெருவில திரியக்கூடாதேன்னுட்டுதான்.
சில வார்த்தைகளின் பொருள்
அச்சலாத்தி- எரிச்சல்
அருகு- அருகம்புல்
வெள்ளாமை- வேளாண்மை
ரவைக்கு- இரவுக்கு
அட்டம்- அஸ்டம்- முடிவு
விட்டம்- வீட்டின் மேலிருக்கும் மரம்
பட்டம்- பயிர்களின் நீண்ட வரிசை
துண்டா- தனியாக தனிக்குடித்தனம்
Bookmarks