மஞ்சள் வெயில் மாலையிலே.. காலையில் டிபன் சாப்பிடும் போது கேட்ட பாட்டு இதோ கண்முன். கீழ்வானம் செக்கச்செவேலென சிவந்து அதனை எட்டிப்பிடிக்க அலைகள் ஒன்றோடொன்று மோதி தடுமாறி கீழே விழுந்து.. அதோ தூரத்தில் கடலும் வானும் சங்கமிக்கிறது தலை சிறந்த ஓவியன் வரைந்தது போல் நேர்க்கோடாய் அந்த சந்திப்பு. ஆழ்கடலின் ஆர்ப்பரிப்புக்கு இணையாக ஆடும் படகுகள். இந்நேரம் ஒரு கவிஞன் மட்டும் இருந்திருந்தால் இதையெல்லாம் கவிதை மலையாய் எழுதி குவித்திருப்பான். ஆனால் எனக்கோ இப்போதிருக்கும் மனநிலையில் கடல் பார்த்தாலே பயமாய் இருந்தது. எந்நேரமும் என்னை வா என்றைழைக்கிறதோ?
பெசண்ட் நகர் பீச்சில் ஆட்கள் குறைவே இருந்தனர். ஜில்லென்று காற்று இடத்திற்கே ரம்மியம் சேர்ப்பது போல். தீவிர சிந்தனையில் நான். நான் பேரா..உடலா..மனதா..? தெரியவில்லை. தெரியாமலே ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஓட்டியாகிவிட்டது. ஆம். பெயர் சீனிவாசன். அழகான குடும்பம். அன்பான மனைவி பங்கஜம். இரு குழந்தைகள். ஆஸ்திக்கு ஒரு ஆண், ஆசைக்கு ஒரு பெண். பையன் ஜெயராமன். திருமணமாகி மூன்று வருடங்கள் தவமிருந்து கோயில் கோயிலாய் ஏறி பெற்ற பையன். நல்ல முறையில் படித்து நல்லதொரு வேலையில் இருக்கின்றான். அடுத்த வருஷம் கல்யாணம் முடித்து விட வேண்டும். பெண் சங்கீதா கல்லூரியில் படிக்கிறாள். கேம்பஸ் இண்டர்வ்யூவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையும் கிடைத்து விட்டது.
இப்படிப்பட்டவனுக்கு என்ன பிரச்சனை என்கிறீர்களா? நான் தான். ஊரோடு ஒத்து வாழ். கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் மனது கேட்கமாட்டேன் என்கிறது.
அரசாங்க உத்தியோகம் பார்க்கும் ஒரு சாதாரண பொறியாளன் நான். வேலைக்கு சேர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை இக்கட்டான சூழலில் இருந்ததில்லை. ஆனால் இப்போது. இதுவரை ஒருமுறை கூட கைநீட்டி கையூட்டு பெற்றதில்லை. கூட வேலை பார்க்கும் எல்லோரும் வாங்கும் போது அந்த நினைப்பே வந்ததில்லை. என் வேலையும் அதற்குத் தகுந்தாற் போல் யாரையும் தொந்தரவு செய்யாத வேலை. தற்சமயம் மாற்றலாகிவிட்டது. சென்னையிலேயே இருக்கும் இன்னொரு அலுவலகத்திற்கு. என் பணியில் காசோலையில் கையெழுத்து போடும் வேலையும் வந்து சேர்ந்து விட்டது. அதில் தான் சிக்கலே. இப்படி தான் இரண்டு நாள் முன்பு….
"மிஸ்டர் சீனிவாசன்.. உங்க கூட கொஞ்சம் பேசணும்.." தலைமை மேலாளர் கூப்பிட எழுந்து சென்றேன்.
"சொல்லுங்க சார்.."
"அந்த பாலம் காண்ட்டிராக்டர் வந்திருந்தார். அவருக்கு சேர வேண்டிய செக் ஏதோ பாஸாகாம இருக்காமே.."
"ஆமா..சார். அவங்க அக்கவுண்ட்ல கணக்கு கொஞ்சம் இடிக்குது. அதான் பாத்துட்டு இருக்கேன். இன்னிக்குள்ள முடிச்சு நாளைக்கு செக் பாஸ் பண்ணிடறேன்"
"அதப் பத்தி தான் பேசணும். கணக்கெல்லாம் சரி பார்க்க வேணாம். அவங்க கணக்கு சரி தான். அந்த அமௌண்டுக்கே செக் குடுத்துடுங்க"
"அதெப்படி சார். நாளைக்கு பிரச்சனை வருமே.."
"அதெல்லாம் வராது.. நான் பாத்துக்கறேன். உங்களுக்கு ஏதாவது தேவைன்னா சொல்லுங்க. அவர் செய்வார்."
"சாரி சார். என்னால் முடியாது"
விருட்டென்று வெளியே வந்துவிட்டேன். ஆனால் என்ன பண்ணுவதென்று தெரியவில்லை. சர்வீஸுக்கு இன்னும் மூணு வருஷம் தான் இருக்கு. இதுவரைக்கும் நல்ல பேரோடு இருந்துட்டோம். இப்போ என்ன பண்ணுவது? மனம் தாறுமாறாய் குழம்பியது.
மறுநாள் பக்கத்து டேபிள் நண்பர் வந்தார்.
"சீனிவாசன்.. மேனேஜர் சொன்னார். ஏன் சார் வீம்பு பிடிக்கறீங்க? பேசாம அவர் சொல்ற மாதிரி செஞ்சுட வேண்டியது தானே? அது தான் நமக்கும் நல்லது"
ஏதோ பொடி வைத்து பேசறார்னு மட்டும் புரிந்தது. மனம் இருப்பு கொள்ளாமல் அரைநாள் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். பங்கஜத்திடம் தலைவலிக்குது என்று சொல்லி படுத்துவிட்டேன். மாலை கொஞ்சம் தெளிந்தவனாய் பங்கஜத்தைக் கூப்பிட்டு நடந்ததை சொன்னேன்.
"ஏங்க. இப்படியெல்லாம் பண்றாங்க. நீங்க எதுக்கு அடுத்தவங்க பொல்லாப்புக்கு போறீங்க. பேசாம அவங்க சொல்ற மாதிரி செஞ்சுடுங்க. நமக்கு எதுக்கு பொல்லாப்பு"
"நானும் இதைப் பத்தி தான் யோசிச்சேன். எனக்கும் வயசாயிடுச்சு. எதிர்த்து போராடற தெம்பு இல்லை. வேற இடத்திற்கு மாத்திட்டு போலாம்னு பார்த்தா இன்னும் ஆறு மாசமாகும். அதுக்குள்ள இவங்க சொல்ற மாதிரி தான் செய்யணும். அதான் ஒரு முடிவெடுத்துட்டேன்"
வித்தியாசமாய் பார்த்தாள் பங்கஜம்.
"பேசாம வி.ஆர்.எஸ். குடுத்துடலாம்னு இருக்கேன். இன்னும் மூணு வருஷம் தான் சர்வீஸ் இருக்கு. பையன் வேற கை நிறைய சம்பாதிக்கிறான். இன்னும் என்ன. வி.ஆர்.எஸ். குடுத்துட்டு பையனுக்கும் கல்யாணம் பண்ணிட்டு புடிச்ச வேற ஏதாவது வேலைக்குப் போறேன்.."
பங்கஜம் முகம் அஷ்டக் கோணலாகியது.
"என்னது வி.ஆர்.எஸ். குடுக்க போறீங்களா? குடுத்துட்டு என்ன பண்ண போறீங்க? அதெல்லாம் வேண்டாம். நாளைக்கு பையன் கல்யாணம் பண்ணனும்.."
அவளுக்கு தன் கணவன் இஞ்ஜினீயர் என்பதில் பெருமை. மகன் கல்யாணத்தில் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் இஞ்ஜினீயர் மனைவி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை. அவளைச் சொல்லி குற்றமில்லை. அவளின் நியாயமான ஆசை அது. ஆனால் எனக்குத் தான் அதற்கு தகுதியில்லை.
கொஞ்ச நேரம் கழித்து தெளிந்தவளாய்..
"என்ன வேணா பண்ணுங்க? ஆனா பையங்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுடுங்க. அவன் சரின்னு சொல்றபடி பண்ணுங்க. அவனும் வேண்டாம்னு தான் சொல்லப் போறான்."
பையனை சாக்காய் வைத்து தன் வேலையை முடிக்கப் பார்க்கிறாள். ஆனால் என் நிலை தான் அவளுக்குப் புரிய மாட்டேன் என்கிறது. இருபத்தியாறு வருட தாம்பத்யமானாலும் சில இடங்களில் அடுத்தவர் எண்ணம் புரிபடாமல் தான் போகின்றது. இன்றும் அலுவலகத்திற்கு போகவில்லை. நாளை நண்பன் கல்யாணம் என்று ஜெய் இன்றிரவு வருவதாய் சொல்லியிருக்கிறான். கேட்டு முடிவெடுக்கலாம்.
இதோ இந்நேரம் ஜெய் வந்திருப்பான். போய் பேசி முடிவெடுக்கலாம். வீட்டுக்கு செல்ல ஆயத்தமானேன். வீட்டுக்குள் நுழையும் போதே ஜெய்யின் பேச்சுக்குரல் கேட்டது. பங்கஜம் பேசிக்கொண்டிருந்தாள். பேச்சு என்னைப் பற்றி இருந்ததால் சற்று தயங்கினேன்.
"ஜெய். உங்கப்பா வேலை விடறேன்னு சொல்றார். ஏதோ செக் பாஸ் பண்ண சொல்றாங்களாம். இவர் முடியாதுன்னு சொல்றார். லஞ்சம் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்போ வி.ஆர்.எஸ். குடுக்கப் போறேன்னு சொல்றார். கொஞ்சம் நீயாச்சும் அவருக்கு எடுத்து சொல்லு"
"ஏன் டிரான்ஸ்பர் வாங்கிக்க வேண்டியது தானே?"
"அத தாண்டா நானும் சொன்னேன். இப்போ குடுத்துட்டு உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாராம். கல்யாணத்துல உன் புருஷன் என்ன வேலை பாக்கறார்னு கேட்டா என்னடா சொல்லுவேன்.."
"அம்மா.. கொஞ்சம் இரு. அவர் தான் பிடிக்கலேன்னு சொல்றாருல்ல. அப்புறம் ஏன் வற்புறுத்தற. போன மாசம் தான் நான் கம்பெனிய மாத்துனேன். வேலை சரியில்லே. சம்பளம் கம்மின்னேன். நீயே மாத்த சொன்ன. எனக்கு ஒரு நியாயம் அவருக்கு ஒரு நியாயமா?
அம்மா.. எனக்குத் தெரியல. ஏன் வேலை பாக்குறோம்னு. யாருக்காக? நம்ம விருப்பத்திற்கா? இல்லை சொந்தங்களுக்காகவான்னு. இருபத்தியெட்டு வருஷத்து முன்னாடி இந்த வேலையில சேர்ந்திருக்கார். அவருக்கு இந்த வேலை பிடிச்சதோ இல்லியோ. ஆனாலும் உன்ன காப்பாத்த என்னையும் சங்கீயையும் படிக்க வைக்க வேலை பாக்க வேண்டியதா போச்சு. இவ்ளோ நாள் பிடிக்காமலேயே இந்த வேலையில இருந்த இப்போ வி.ஆர்.எஸ் குடுக்கறதில என்ன தப்பு? இனியாச்சும் அவர் அவருக்கு புடிச்ச வேலைய பாக்கட்டுமே. அவர் இஷ்டம் போலவே செய்ய சொல்லுமா"
வாசலில் நின்றிருந்த என் கண்களின் ஓரத்தில் நீர். இருபத்தியாறு வருடங்களுக்கு முன் இருந்த தவம் இன்று பலித்தது போலிருந்தது. கால்கள் மெதுவாக கடற்கரை நோக்கி நடக்க ஆரம்பித்தது.
இனி கடற்காற்றையும் கடல் ஆரவாரத்தையும் ரசித்து கவிதை எழுதலாம்.
Bookmarks