நான் விரும்பியவன் அல்ல நீ
என்றாலும்
உன்னைப் பிடித்தது எனக்கு -
நீ என்னைப் பிடித்தது
என்று சொன்னதால்.
பதிவாளர் அலுவலகத்தில்
காக்க வைத்தவன் வராத பொழுது
வீட்டிற்கே வந்தவன் நீயென்பதால்
உன்னை எனக்குப் பிடித்தது.
ஏமாற்றத்தில் இருந்த என்னை
ஊர் தூற்றிய பொழுதும்,
என்னை விரும்பிய உன்னை
இளிச்சவாயனாகப் பார்த்து
ஊரார் சிரித்த பொழுதும்
உன் மௌனம்
எனக்குக் காதலைக் காட்டியது.
முதலிரவுக் கட்டிலில் விரித்த
வெள்ளைத் துணியை மடிக்க
நாங்கள் தான் வருவோம்
என்ற மூத்த நாத்தனாரின்
மனதை ரசித்தேன் நான் -
என்னைப் பரிசோதிக்கிறாள்!
இத்தனைக் காதலையும்
உனக்குத் தர விரும்பியே
உன்னை முத்தமிட்டேன்
ராஜகுமாரனாய் நினைத்து....
போகம் முடித்து ஓய்ந்த ந்
புகையை ஊதிக் கொண்டே
என் காதில் கிசுசிசுப்பாய்
நான் தேவலையா அவனுக்கு
என்ற பொழுது உணர்ந்தேன் -
நீ ராஜகுமாரன் அல்ல,
எச்சில் இலைக்குக் காத்திருந்த
தெருநாய் என்பதை.
Bookmarks