14 காரட் தங்கத்தை விட உயர்ந்த தர தங்கத்தை நகை செய்து அணியாதே என்கிறது தங்கக் கட்டுப்பாட்டு விதி. அதிகமான பிள்ளைகளைப் பெறாதே என்கிறது குடும்பக் கட்டுப்பாட்டு விதி. 30 ஏக்கருக்கு மேல் விளைநிலம் வைத்துக் கொள்ளாதே என்கிறது உச்ச வரம்புக் கட்டுப்பாட்டு விதி. இன்னும்பல கட்டுப்பாட்டு விதிகளிருக்கலாம். அவ்விதிகளை மீறுபவருக்குத் தண்டனையும் உண்டு. அவற்றைச் சில பல அரசியற் கட்சிகளும் ஆதரிக்கின்றன. காமக்கட்டுப்பாடு என்பதொன்று. அதுவே மக்கள் மக்களராய் வாழ உதவுது, ஆகலின் அக்கட்டுப்பாடு ஏனைய கட்டுப்பாடுகளை விட மிகவும் அவசியமானது.

காமம் கட்டுப்படுவதா? அன்றா? சாத்தன் ஒரு யெளவன புருஷன். அவனது குடும்பத்தில் அவனுக்குத் தங்கைமார், தமக்கைமார், புத்திரிமார் முதலிய பெண்டிர் இருக்கின்றனர். அடிக்கடி அவரைச் சந்திக்கிறான், அவரோடு அளவளாவுகிறான் அவன். அவன் ஒழுங்கீனனாயிருந்தாலுங் கூட அவரைச் சிறிதுங் காமக்கண்கொண்டு பாரான். சாத்தியும் ஒரு குடும்பப்பெண். அவளும் தன் தமையன் தம்பியாதியோரை அக்கண்கொண்டு பார்ப்பதில்லை. காமம் பொல்லாதது, ஆயினுங் கட்டுக்கடங்குவதே என்பது அதனால் தெரிகிறது. காமம் இயற்கையுணர்ச்சி, அதனைக் கட்டுப்படுத்தக் கூடாது, முடியாது எனப் பேசித்திரிபவன் சம்சயத்துக் கிடமாவான்.

'ஒருவன் தன் மிருக விச்சைகளை முழுதும் அடக்கியாகிவிட்டால் அவனுக்குத் தெரியாமலே வீரியம் போவதற்கு இடமில்லாமற் போய்விடவும், போகவிச்சையினால் கூடுதல் அறவே நின்று போகும். அப்பொழுதுபிள்ளை வேண்டுமென்ற ஆசை பிறக்கையில் மட்டுமே கலவி நடக்கும். இல்லற பிரமசரியம் எனப்படுவது இதுவே. அதாவது, இந்த விதியின்படி நடப்பவன் இல்லறத்தி லிருப்பினும் சுகபோகத்தில் சிறிது ஈடுபடாதவன் நிலையை எய்தி, அவனுக்குச் சிறிதும் குறையாத மகிமை பெற்றிருப்பான். ஏனெனில் இவன் பிள்ளையைக் கருதியின்றி வெறும் சிற்றின்பத்திற்காகக் கலவி புரியவே மாட்டான்' என்றார் காந்தியார். கணவன் மனைவியை மாத்திரங் காமக்கண்கொண்டு பார்க்கலாம். அதுவும் அவர் சொன்ன பிரமசரிய விரதத்துக்குப் பங்கமில்லாமலிருக்க வேண்டும். அதுவே குடும்ப வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, அக் குடும்பங்களே நாட்டில் மிக வேண்டும். மிகுவிப்பது காமக் கட்டுப்பாடொன்றே.

அவ் வாழ்க்கைக்குப் பிரதிகூலங்களே இப்போது அதிகங் காணப்படுகின்றன. வீசிய நடை, ஆடம்பர வுடை, மமதையைப் புலப்படுத்தும் பாவனை, சுவையும் மணமும் ஏற்பட்டால் எதனையுந் தின்னும் ஆசை, புகையை யுறிஞ்சி யூதி யுமிழ்தல், கலவி நிர்வாணப் படங்களைக் கண்டு களித்தல், ஆண் பெண் அணைப்புக் கேற்ற இசைப் பாடல்களைக் கேட்டு மகிழ்தல், காமக்கதைப் புத்தகங்களைப் படித்துப்பூரித்தல், ஸினிமாக்களில் நடன்நடிகளின் அணைப்புக்களைக்கண்டு ஏங்குதல் முதலியன காமத்தைக் கட்டுப்படுத்த உதவாமல் காந்தியார் சொன்ன பிரமசரியத்தைச் சிதைக்கவே உதவுகின்றன. அவை நன்மக்கட்குத் தேவையா?
அவற்றுள் புலாலுணவு மாத்திரம் சில விலங்கு பறவைகளிடமுண்டு. மற்றவையெல்லாம் மனிதரிடமே யுள்ளன. அவை அவருக்கு எவ்வகையில் கெளரவம் அளிப்பன?

மிருகங்கள் காமத்தாற்கூடிக் குட்டி போடுகின்றன. அக்குட்டிகள் தாய்ப் பெட்டைகளின் பராமரிப்பில் வளர்கின்றன. அதுபோற் பெற்ற ஆண் இவனெனத் தெரியாமல் பிள்ளைகளைப் பெற்றுத் தோளி லொன்றும், இடுப்பி லொன்றும், கைப்பிடியி லொன்றுமாகச் சுமந்து திரியும் தாய்ப் பெண்கள் மனித வர்க்கத்திலுமுளர். மனித சமுகத்திற்கு அது மானக் கேடு. காமக் கட்டுப்பாடின்மையே அதற்குக் காரணம்.

காம மிகுதி மிருக வியல்பு என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அவற்றிடம் இயற்கைக் கட்டுப்பாடு உண்டு. 'மிருகங்கள் விதியை மீறுவதே இல்லை. மனிதனுக்கு மீறவோ, கட்டுப்படவோ - இடமிருப்பதால் மீரும் பெரும் பிழையைச் செய்து வந்திருக்கிறான்' என்றார் காந்தியார். ஆடவர் கட்டுப்பாட்டை மீறுவதே பெரும்பான்மை என்பது அதனால் தெரிகிறது. பெண்டிற் பெரும்பாலும் அடக்க முடையாரென்பதுந் தெரியலாயிற்று. அவர் பொருட்டாயின் கலியாணம் என்பதே வேண்டாம். ஆடவர் கட்டுக் கடங்காத காரணத்தால் அவர்பொருட்டே கலியாணம் மனிதவர்க்கத்துள் உளதாயிற்று. கலியாணத்தின் நோக்கமே காந்தியார் சொன்னபடி ஆடவன் காமத்தைக் கண்ட விடத்திற் செல்லவிடாமற் கட்டுப்படுத்தி மனைவியுடன் பிரமசரிய விரதத்தில் வாழ்வது என்பது தான் அவன் கலியாணத்தாற் கொண்ட மனைவியும் அவனுக்கு அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளும் அவன் பொறுப்பில், மேற் பார்வையில் இருந்து வருவர். கலியாணத்தின் அந்த நோக்கம் இப்போது போயிற்று. அதுவுங் காம விளையாட்டுக்கா மென்ப தாயிற்று.