(இந்த கதையில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே)
பகுதி 1
ஜீவீந்திரன் எனும் ஜிவியும் காதலும். தலைப்பே ஒரு கரையால் இடிக்கிறது. காரணம் காதல் என்பதை வார்த்தையாலும் திரைப்படத்தாலும் மட்டுமே பார்த்து அறிந்தவன். இந்த லட்சணத்தில் ஜிவியும் என் காதலும் என்ற தலைப்பு பொருந்தவே பொருதாது. ஆனாலும் இந்த காதல் அவனையும் வாட்டியிருக்கிறது. நம்புகிறீர்களா.... இதோ நிரூபிக்கிறேன். x=y=z ஆகவே x=z என்கிறீர்களல்லவா.... அவனது நண்பன் காதலால் அவன் அவஸ்த்தைப்பட்டிருக்கிறான். அவனால் ஜிவி அவஸ்த்தைப்பட்டிருக்கிறான். ஆகவே ஜிவியும் காதலால் அவஸ்த்தைப்பட்டிருக்கிறான். (எப்படி என் கணித முளை.... அட ச்சீ... தூ........ மூன்றாம் தரப்பாக ஜிவி இருந்திருக்கிறான். அதனால் வந்த அவஸ்த்தைக்கு தான் இத்தனை விளாவாரி... சரி இனி அந்த ஜிவி எனும் ஜீவீந்திரனின் சுயசரிதையை பார்ப்போம்.
கல்லூரிக்காலங்களில் காதல் வரும் என திரைப்படம் பார்த்து அறிந்தவன் நான். அதை கண்கூடும் கண்டிருக்கிறேன். நம் ஊரில் ஒரே வகுப்பறையில் இருந்தாலும், மாணவிகளின் பெயரை கூட ஆசிரியர் வரவுகளை பதியும் தருணத்தில், அவரவர் பெயரை அழைக்கும் போது பிரசன்ட் சேர் என்ற வார்த்தைகள் வருவதை வைத்து தான் பெண்களின் பெயர்களை அறிவோம். அத்துடன் சரி. பேச்சு வார்த்தைகளுக்கு இடமே இல்லை... அப்புறம் உயர் தரம் வந்ததும் சற்றே நெருக்கம் ஏற்படும் வழமை. ஆனால் நமக்கு பழக்கதோசமோ என்னமோ விரிசல் அதிகமாகவே இருக்கும். நமக்கு வாய்க்கும் நண்பர்களும் அப்படிப்பட்டவர்கள். (நாம் ஆறுபேர் இருக்கிறோம்.) இற்றை வரைக்கும். ஆனால் ஒருவனை தவிர.. அந்த ஒருவனும் எப்படி மாறினானோ தெரியாது....
அவனிடம் இருக்கும் கலைநயம் தான் அந்த காதலுக்கும் காரணமாகியிருக்கும் என்பது தற்போதய எனது கணிப்பீடு... முதலில் அவனும் நம்மைப்போலத்தான். போக்கிரியி்ல் விஜய் கூறியது போல் இந்த காதலென்றாலே எரிச்சல் எரிச்சலா கிடக்கு.... என்பது தான்... டேய் அவளப்பற்றி இப்பிடி போசாதடா என்று நான் சொன்னாலும் விடமாட்டான். என்னிலும் மோசமாக திட்டுவான்.... அவளுடன் சேர்ந்து பாட வேலை ஒன்று செய்யும் காலத்தில் என்னையும் அவனையும் இணைத்து அவனே பேசுவான். தன்னுடன் மற்ற வாலுகளையும் சேர்த்துவிடுவான்.... மாலைகளில் அந்த நண்பர்கள் ஒன்றாக ஓரிடத்தில் சந்திப்பது வழமை. ஒன்றாக வந்ததும் ஒருவனை வைத்து மற்றயவர்கள் அனைவரும் கிண்டல் கணைகளை செலுத்துவார்கள். அந்த ஒருவனாக ஒருதடவை நான் இருந்த போது அவளை வைத்து தான் பேசினார்கள். வந்த கணைகளில் பெரும்பாலான கணைகளில் அவனிடம் இருந்துதான்.
இப்படி இருந்தவனிடம் பின் ஒரு போக்கு மாறியதை அவதானிக்க முடிந்தது. திடீர் என்று செக் ரீ-ஷேர்ட் கள் முழுக்கை ஷேர்ட்களாக மாறின... டெனிம் முழுநீள காற்சட்டை அலுவலகத்திற்கு அணியும் ஹொட்டன் முழுநீள கால்ச்சட்டைகளாக மாறின.... இவ்வாறு பலவிடையங்கள் அவதானிக்க முடிந்தது. விரிவுரை குறிப்புகளின் மூலைகளில் காதல் கவிதைகள் தோன்றின. அத்துடன் ஒரு பெண்ணின் கண்களும் இருக்கும்.... நம்முடன் சேர்ந்துதான் இருப்பான். ஆனால் முன்பு போல் கலகலப்பு இல்லை. மிகவும் அமைதியாக மாறினான்... காரணம் காதல் என்றும் அந்த-பெண் யார் என்றும் புரிந்தது. ஆனால் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. இப்படியே சில மாதங்கள் கடந்தன... நண்பர்கள் அனைவரும் தற்காலிகமாக சில பயிற்சி வேலைத்திட்டம் காரணமாக சற்று தூரப்பிரதேசங்களுக்கு செல்வவேண்டிய கட்டாயம். சந்திப்பது கடினமானது. அலைபேசிகள் மட்டும் தான் உதவின... வார இறுதிகளில் சந்திப்போம். அவ்வளவு தான்.
மீண்டும் சில காலங்களுக்குப்பின்னர் அந்த ஆறுபேர் தவிர்ந்த இன்னொரு கல்லூரி நண்பன் ஏதோ ஒரு பேச்சு வரும் போது சொன்னான். டேய் அவன் அவளை லவ் பண்றானாம்டா.... என்றான். உனக்கு எப்பிடி தெரியும் என்றேன். அவன்தான் சொன்னவன் என்றான். எனக்கு தூக்கிவாரி போட்டது.... அட நாமும் ஏதோ பெரிய நட்பிற்கு இலக்கணமாக இருக்கிறோம் என்ற இறுமாப்புடன் இதுவரைக்கும் இருந்தேன். அப்படியே உடைந்தது. அட அவனுக்கும் காதல் வந்துவிட்டது என்ற உண்மை அந்தக்கணத்தில் உறைத்தது. ஏன்டா ஒன்டா திரியிறியள். இதுகூட தெரியாதா என்றான். அவன் கேள்வியில் நியாயம் தெரிந்தது. அமைதி தான் என்னிடம் இருந்த பதில். புன்முறுகலுடன் கதையை மாற்றினேன்.
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்று முழுவதும் ஏதோ ஒருமாதிரி இருந்தது. அட உனக்கேன் போர்த்தேங்காய் என்று உள்மனம் சொன்னது. இருந்தாலும் ... முடியல... மாலை அந்த அறுவரில் ஒரே கம்பனியில் பயிற்றி வேலைத்திட்டம் செய்யும் மற்ற நண்பன் வந்ததும் என்ன பெரிய கப்பல் கவிந்திட்டுதோ என்றான். பதில் சொல்லவில்லை. பின் குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்தோம். அப்போது மீண்டும் கேட்டான். உனக்கு இப்ப என்னடா பிரச்சனை என்றான். விளாவாரியாக சொன்னேன். பின்னர் அமைதி காத்தான். நீண்டநேரத்திற்கு பின் சரி இப்ப என்ன செய்யலாம் என்றான். நானும் தெரியாது என்றவாறு முகத்தால் சைகை காட்டினேன்....
திடீரென மற்றொரு நண்பன் தூரைப்பிரதேசத்திலிருந்து வந்து சந்தித்தான். அது ஒரு மாலை நேரம்.
(தொடரும்...)
Bookmarks