புன்(ண்)னகை...!!
அன்றைய பொழுது விரைவாகவே விடிந்தது…. மயில்களின் அகவலோடும்.. இடையிடையே அதற்கு சுருதி சேர்த்த குயில்களின் கூவலோடும்.. மெல்லிய தென்றல் காற்றின் ஒத்தடத்தோடு… உற்சாகமாக பரபரப்பானது மனது..
கிளிகளின் கீச் ஒலியோடு… ஒன்றிப் போன.. பெரிய கதவு திறந்து வாசல் வந்து செவ்வானம் பார்க்கிறேன்.. மனம் இன்றைக்கு எதிர்கொள்ளப் போகும் சங்கதிகள் பற்றி ஒரு புறம்.. படம் பார்த்துக் கொண்டிருந்தது..
குயிலினை இசைக்குருவாக்கி… கூவக் கற்று.. உள்ளே வந்து மடமடவென கிளம்புகிறேன்..
ஊர் நினைவு வந்தாலே.. மனம் சில்லிடும்.. பசும் புற்களின் வாசத்தில் கலந்து வரும் அந்த வரப்புக் காற்றும்.. தென்னந்தோப்பு தெளுவும்.. ஆங்காங்கே ஓடும் சிலு சிலு வாய்க்கால்களும்.. அதில் எட்டிப் பார்த்து கண் சிமிட்டும்.. கூழாங்கற்களும்..!!
மடி நிறைய கூழாங்கல் சேர்த்து.. ஐஞ்சாங்கல்லாட்டம் , ஏழாங்கல்லாட்டம்.. ஒட்டி கல்லாட்டம்… இப்படி வகை வகையாக ஒன்றாக விளையாடிய நட்புகளைப் பார்க்க போகிறேனே.. பின்னே இருக்காதா இந்த துள்ளல்..!!
நகரத்தின் வாசல் தாண்டி.. அடிக்கடி மனம் பயணப்பட்டாலும்… இப்போது தான்.. மனம்.. மனிதம்.. எல்லாம் பயணப்பட காலம் கை கொடுத்தது..
சித்திரை மாத கோயில் திருவிழாவினை முன்னிட்டு… அழைப்பு வர விடுப்பும் கிடைக்க.. குடும்பத்தோடு இதோ கிளம்பிவிட்டேன்.. கார் மாஸ்ட்ரோவின் எண்பதுகளுக்கான மாஸ்டர் பீஸ்களை ஒவ்வொன்றாக பாடி.. மனத்தில் அந்த கால நினைவுகளை அதன் சார்பாக அள்ளித் தெறித்துக் கொண்டிருந்தது..
காலையில் உண்ட உப்புமா…செரிமானமாகாமல்.... நெஞ்சில் வந்து மனம் செரிக்காத நினைவுகளை.. நினைவூட்டியது…
நெற்றி நிறைய விபூதி... இதழோரம் வீற்றிருக்கும் அந்த ஒற்றை மச்சம்.. தாவணி பாவாடை சரசரக்க… வாய் நிறைய சிரிப்போடு எப்போதும் பூத்திருக்கும் அந்த பால் முகம்.. கண் முன் வந்து மனம் அசையாமல் செய்தது..
சில மணி நேர பயணத்துக்குப் பிறகு… கார் ஊர் எல்லையை அடைந்தது.. எப்போதுமே ஊர்க்காவலைத் தன்காவலாக்கி வைத்துக் கொண்ட மதுரை வீரச் சாமிகள் இருவர்.. அவர்களை தாண்டி பால் சொசைட்டி… அருகில்…. ஒரு பெரிய தண்ணி டேங்க்… அதில்.. பஞ்சாயத்து பொது தொலைக்காட்சி… அதற்குமிக அருகில்.. ஊர் பொதுக் கிணறு…. எதுவுமே மாறவில்லை.. சற்று கடந்து பயணப்பட… ஊரின் முக்கிய கோயிலான.. காமாட்சியம்மன் கோயில்.. நோம்பி சாட்டியதில் மக்களின் நடமாட்டத்தில்.. பக்திப் பாடல்களை லவுட் ஸ்பீக்கரில் போட்டபடி.. கோலாகலமாக காட்சியளித்தது..
பந்தல், மின்விளக்குகள் அலங்காரமும்.. நோம்பி சாட்டுதலின் மழையில் முளைத்த காளான்களாக அங்கே வரிசையாக அணிவகுத்திருக்கும் பலூன் கடை.. பொம்மைக் கடைகளும்.. பல வண்ணங்களில் அமைந்த குச்சி முட்டாயும்.. பஞ்சு மிட்டாயும்.. அதைச் சுற்றி.. தேனீக்கள் போல பறந்து நிற்கும்.. குழந்தைகளின் வெள்ளந்தி சிரிப்பும்.. ரகசிய சம்பாஷனைகளும்.. அக்காவிடம் அடம்பிடித்து நகர மறுக்கும் தம்பிப் பையன்களும்.. பிடித்து இழுத்து நகர வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் அக்காமார்களும்… மெல்ல மனம் அசைபோட்டு ரசித்துச் செல்லலாயிற்று…
இதோ இல்லம் வந்தாகிவிட்டது… உள்ளிருந்து ஓடி வரும்.. செல்ல நாய்க்குட்டியின் தாவலைத் தடவிக் கொடுத்தபடி உள்ளே நுழைகிறேன்..
மனம் மெல்ல ஊர்க்காற்றை உள்ளிழுத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டது.. பரஸ்பர வரவேற்புகளும்.. மதிய உணவும் முடித்த பின்… அடுத்த கட்டமாக.. மனம் தேடியது பழைய நட்பின் புதிய முகமன்.
அடுத்த கட்ட பயணத்துக்கு ஆயுத்தமாகி.. பெரியோரிடத்தில் விடைபெற்று.. நான் மட்டும் மாமா வீடு தேடி நடைபயின்றேன்..
யாருமற்ற தார் சாலையில்.. என்னோடு பழைய நினைவுகள் பூட்டவிழ்த்து உடன் வந்தன..
முச்சந்தியில் ஆலமரம் விழுதுகளோடு வரவேற்க தயாராக நின்றது.. மெல்ல கையசைத்து அருகில் வரப் பணித்தது..
அருகில் சென்று விழுது கை பற்றி.. சுற்றும் முற்றும் பார்த்து ஒரு குட்டி ஊஞ்சலாட்டம் போட்டு.. குறுநகையோடே இறக்கத்தில் இருக்கும் ஒற்றையடிப் பாதை வழியே.. இறங்கி நடக்கிறேன்..
சுற்றியிருக்கும் சூரியகாந்தி மலர்களின் மேற்குத் திசை நோக்கிய ஒற்றைக் கால் தவம்.. சூரியனின் திசையைப் புரிய வைத்தது.. ஏதோ என்னை வரவேற்ப்பது போல ஒன்றாக திரும்பி… சிறுப் பூப்புன்னகையோடு.. காட்சியளிப்பதாக தோன்றியது..
வழியில் இருக்கும் மஞ்சளரளிப் பூக்களும்.. மே மாத மரத்தின் சிவப்பு வண்ண மலர்களும்.. காற்றில் எழுதிய தனது பிரியா விடைக் கடிதத்தோடு.. என் கைப்பையில் வந்தமர்ந்தன..
இதோ இந்த தென்னந்தோப்பு கடந்து.. வாய்க்கால் தாண்டினால்.. மாமாவின் இல்லம்.. அருகில் செல்லும் முன்னே.. வெளியில் விளையாடியபடி இருந்த திவ்யா.. காவ்யா.. ஓடி வந்து சிரித்து கால் கட்டிக் கொண்டார்கள்..!
காவ்யாவைத் தூக்கி மெல்ல நடைபயின்று செல்வதற்குள்.. திவ்யா ஓடிச் சென்று உள்ளே நான் வருவதை சொல்லிவிட்டிருந்தாள்..
அதே ஒற்றை இதழோர மச்சத்தோடு… இன்னும் அதே புன்னகை மாறாத அஞ்சலி..!! என் பிரிய அஞ்சலி..! ஒரே வயதுடைய இருவரும்.. ஒவ்வொரு வருட சந்திப்புகளையும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கும் பால்ய நட்பு..
இரண்டாம் தாரமாகி.. காவ்யாவைப் பெற்று.. வருடம் 3 கடந்திருந்தது.. சித்தி கொடுமைகளின் விஷப்பேச்சுகள்.. நெடுந்தொடர்களின் ஆட்டுவிப்புகள்.. மூத்த தாரத்து பிஞ்சுகளின் நெஞ்சுடைத்திருந்த புகுந்த வீட்டின் நிலை சொல்லி விம்பி அழுத அஞ்சலியின் அம்மாவைத் தேற்ற வழி தெரியாது கலங்கி நின்றேன்..!
முதல் கோணல்.. முற்றும் கோணல் கதையாக.. சாஸ்திரங்களையும் ஜாதகங்களையும் நம்பி.. பிஞ்சு மகளை இரண்டாம் தாரமாக்கிய கொடும் பாதகம்.. தடுக்க முடியாமல் போன என் நிலை குறித்து.. நினைக்கும் போதெல்லாம்.. நெஞ்சு சுடுகிறது..
காவ்யாவின் பிறப்புக்கு பின் தாய்வீட்டில் வசிக்கும்.. அஞ்சலியின் துயர் நிலை, என் மனம் தின்றது.. ஒன்றாக்கும் வழி பெரியோரிடம் ஒப்படைத்து.. அவர்கள் மனம் சாந்தமடைய குறுஞ்சிரிப்பு வெடிகளை பற்ற வைத்தேன்..
அதே புன்னகையோடு.. ஓடி ஓடி தோட்டத்திலிருந்து எனக்குப் பிடித்த பூக்களும்.. கொய்யாப் பழங்களும் பறித்து வரும் அவளைப் பார்த்து.. கண்கள் கலங்கியே விட்டிருந்தது.. தெரியாமல் கண் துடைத்து சிரித்து நின்றேன்..
அஞ்சலியின் அக்காவும் தங்கையும் தத்தம் கணவர்களோடு ஒன்றாக அருகிருக்க.. அஞ்சலி மட்டும்.. எனக்கு சமைக்க.. அதே புன்னகை மாறாமல் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள்..
அடுப்படி சென்று.. அமைதியாக நின்று.. அவளையே உற்றுப் பார்த்திருக்கும் என் கை பற்றி… சத்தமின்றி இதழோரப் புன்னகையோடே அழுதது அவள் விழிகள்..!!
தோள் தட்டி.. காவ்யாவினை நினைவூட்டி… அற்புத வாழ்க்கை இன்னும் பாக்கியிருப்பதை உணர்த்தி.. அவசர வேலையாக பிரியா விடை பெற்று வெளிவந்தேன்.. அதற்கு மேல் அழாமல் நடிக்கும் பலமின்றி…
சற்று தூரம் சென்று திரும்பிப் பார்த்து கையசைக்க… என் கையில் சிக்கின… டிசம்பர் மலர்கள்.. இப்போது.. அஞ்சலி… புன்னகையூடே உள்வலியை மெல்லமாக தவற விட்டிருந்தாள்..!!
(முற்றும்)
Bookmarks