"என்ன சரசம்மா. பொழுது படமுன்னமே வெளிக்கிட்டாய்" குரலில் அதிர்ச்சி கலந்த பரிவு தொனித்தது. அமாவாசை நாளில் கூட, இரவு ஏழு எட்டு மணிமணிவரை, தோட்டத்தில் வேலை பார்ப்பவள், பௌர்ணமி நாளில், நிலவு காலிக்க முதல் வீட்டுக்குப் போனால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இராது. அதுவும் சரசம்மா மேல கிராமத்து சனங்கள் எல்லாருக்கும் கொள்ளை பாசம். அவளது நடத்தை; பேச்சில் கலந்திருக்கும் கனிவு; எல்லாத்துக்கும் மேலாக கட்டிய புருசனானாலென்ன பெத்த புள்ளையானாலென்ன தப்பை தப்பென்று போட்டுடைக்கும் நேர்மை; இதெல்லாம் சேர்ந்து அவள்மீதான அதீத நேசத்துக்கு காரணமாயின. அந்த அன்பின் ஆழத்தை சுருக்'கமாக சொன்னால் "சரசம்மாவை கைம்பெண்ணாக்கும் அளவுக்கு ஊராரின் பிரியம் இருந்தது."
ஊராரைப் போலவே, சசரசம்மா மீது கொண்ட சுந்தரம் அன்பு, காதலாகி கல்யாணம் வரை சென்றது. காதலிக்கும்போது கற்கண்டாக இருந்த சரசம்மாவின் குணவியல்புகள், மனைவியான பின்னர் சிறிது சிறிதாக கசக்கத் துவங்கியது. சரசம்மா, சுந்தரத்தின் நிறை குறைகளை பொதுவில் போட்டுடைப்பது, அவனுக்கு மூக்குடைபடுவது போல இருக்க உள்ளுக்குள் குமைந்தான். ஊர்ச்சனம் வேறு எல்லாத்திலும் மூக்கை நுழைத்து, சரசம்மாவின் பக்கம் சாய்ந்து, அவனை கொடுமைக்காரன் என்று பட்டம் சூட்டிய போது இனந்தெரியாத உணர்ச்சிக்கு அடிமையானான். அன்றும் அப்படித்தான்..
மெல்லிய வார்த்தை வாதம், ஊர்ப்பெருசுகளால் ஊதப்பட்டு தடித்து விட, சரசம்மாவிலிருந்து வழுக்கிவிழுந்த "பேசாமல் பிரிந்து விடலாம்" என்ற வார்த்தைகளால் சுந்தரம் காயப்பட்டான் . துடித்தான்.. தன் நேசத்திற்குரிய எட்டு மாதக் குழந்தையை ஒரு நொடி மறந்தான். நிரந்தரமாகப் பிரிந்தான்.
"இண்டைக்கு வெய்யில் அதிகமாக சுட்டுட்டுது. லேசாக தலையிடிக்குதக்கா. அதான் வெள்ளனவே வீட்டை போறன்" குரலைக் காற்றில் கரைத்தாள் சரசம்மா.. விவரம் தெரிஞ்ச நாள் முதலாக, தினமும் வெயிலில் குளித்து கறுத்த தோலுடைய அவளுக்கு, வேக்கையால் தலைவலின்னு சொன்னால் யார்தான் நம்புவார்கள். என்னவோ பிரச்சினை என்று புரிந்தவள் பார்வையால் ஆறுதல் சொல்லியவாறு மௌனமாகிக் கடந்தாள்.
சுந்தரத்தின் மரணத்தின் பின்னர் விஷேசங்களிலிருந்து விலகி இருந்த சரசு, சுந்தரத்தின் அக்கா பொண்ணு, தன் மஞ்சள் நீராட்டுக்கு, கட்டாயப்படுத்தி கூப்பிட்டதால் போனாள். சடங்குகள் சம்பிராதயங்கள் நடந்தபோது ஓரமாக நின்று கவனித்தவளை திடுக்கிட வைத்தது "தாய்மாமன் முறை செய்யவேணும்; தாய்மாமனைக் கூப்பிடுங்கோ" என்ற பெரிசொன்றின் குரல். திடுக்கிடல் நிமிர்த்தியபோது, சுந்தரத்தின் குடும்பத்தினர் அத்தனை பேரும், ஒத்தை ஆம்பிளைப் பிள்ளையை இழந்த சோகத்தை விழிக்கடை நீர் சுண்டிச் சொல்லினர். கிட்டமுட்ட மறந்திருந்த சுந்தரத்தின் மறைவு வலி அந்த நொடியில் வலுவாகத் தாக்கி, சரசம்மாவின் தலையில் வலியாகக் குடிபுகுந்தது.
"ஆ" கத்திய படி காலைத் தூக்கினாள். குத்திய முள்ளை எடுக்க விடாமல் தலையில் இருந்த புல்லுக்கட்டு இடைஞ்சல் செய்ய மண்பாதையில் காலைத் தேய்த்தவாறு நடந்தாள். கடந்த சிலநாட்களாக அவளையே அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒருவாரகாலமாக குடிகொண்ட வலியின் தாண்டவத்தைக் கட்டுப்படுத்த முயன்று இன்று தோற்றுவிட்டாள். இந்த ஏழு நாளும், ஏழுவயது மகனில் சீறி விழுந்தாள். பெத்த ஆத்தா, அப்பன் மேல் அனலைக் கொட்டினாள். நெருக்கமான அனைவருக்கும் நெருப்பை உமிழ்ந்தாள். சின்னச் சின்ன விசயங்களுக்காக வயக்காட்டு வேலையாட்களை கடிந்து கொள்ள, முகச்சுழிப்புகளை காணிக்கையாகப் பெற்று படியளந்தாள். அந்தளவுக்கு இருந்த மன உளைச்சலுடன், இப்போது காலேறிய முள்ளு நோவும் சேர்ந்துகொள்ள அதிக எரிச்சலை அனுபவித்தாள்.
"என்ன சரசு. என்ன யோசனை" மாட்டுக்கார வடிவேலுதான் கேட்டான்.
பட்டியில் அடைபடப் போகும் விரக்தியில் மாடுகள் கிளப்பிய புளுதி நெடி நாசியைத் துளைத்தது. முதன் முதலாக கிராமத்து கரிசனை, மண்வாசனை இரண்டும் சரசம்மாவை இம்சித்தது. முதலில் சொன்ன பல்லவியை மறுபடியும் பாடினாள்..
அவளது உட்புழுக்கத்தை, மொட்டைப் பனையில் இலைகளாக இருந்த பச்சைக்கிளிகள் உணர்ந்தன போலும். காற்றில் படபடத்து மறைந்தன. வீட்டண்டை ஆயில்மரத்தின் கீழ் விளையாடிய சிறார்களின் இனிமை மொழி, பஞ்சு கழன்ற காது குடையும் குச்சியால் காது குடைந்த வேதனையைத் தந்தது.
"ஏப்பா.. உதைகாலிக்கு பக்கத்தில போகாதை எண்டு எத்தனை தரம் சொல்லுறது" என்று, வீட்டின் பின்பக்கம் நின்ற தகப்பனை செல்லமாக வைஞ்சபடி, வீட்டு வளவின் பின்பக்க படலையால் உள்ளே நுழைந்தாள். சுமையை இறக்கினாள். எல்லாரையும் முட்டித்தள்ளும் மாடு, வழக்கம்போலவே இவளைக் கண்டு சாந்தமாகி, போட்ட தீனியைத் தின்னத் துவங்கியது.. மாட்டை தடவிக் கொடுத்துவிட்டு, நொண்டியபடி முத்தத்துக்கு வந்தபோது "என்னம்மா என்னாச்சு" என்று பதறி வரவேற்றான் அவளது மகன்..
"அதொண்டுமில்லை..முள்ளுக் குத்திப் போட்டுதடா" சொல்லிக்கொண்டு ஆயாசமாக முத்தத்து மல்லிகைப் பந்தலில் அமர்ந்தாள்.
"குத்தின முள்ளை எடுக்காட்டால் ஆணியாக்கி நடக்கேலாமல் போகுமெண்டு பாட்டி சொல்லுறவா"..
சொல்லியவன் அவளைக் குத்திய முள்ளை அகற்ற ஆரம்பித்தான்.. முள்ளு சிறிது சிறிதாக வெளியேற, தன்னைப் பிடித்தாட்டிய வலி விட்டகன்றதாக உணர்ந்த சரசம்மாவின் கண்களுக்கு, மகனுக்குப் பின்னாலிருந்த செக்கச்சிவந்த மேல்வானம் இதம் தநதது.
Bookmarks