உயிர்த்துளி பருக வாருங்கள்....
என்னையும் என் கவிதைத்தொகுப்பையும் அறிமுகப்படுத்தும் நெகிழ்வில் நான்.
முதல் தொகுப்பு. அதைவிட இது என் உயிர்த் தொகுப்பு
சின்னச் சின்ன கனவுகளாக, சிறுகச் சிறுகச் சேர்த்த உணர்வுகளை கவிதையாக்கி வாழ்ந்திருக்கிறேன். வாழ்ந்து முடித்திருக்கிறேன்.
இதுவும் ஒரு காதல் தொகுப்ப்புதான். கற்பனைகள் என்றாலும், கனாவுகள் என்றாலும் என் உயிரை அதில் கரைத்திருக்கிறேன்.
என் காதலைப் பற்றியும் நிறைய பேசலாம். ஆனால் இப்போது மெளனமாய் இருப்பதே பிடித்திருக்கிறது. தேவையுமாய் இருக்கிறது. காதல் எனக்குக் கற்றுக் கொடுத்திருப்பது எல்லையற்ற அன்பையும், அதைச் சொல்லக் கூடிய எல்லைகளையும்
என்னைப் பொறுத்தவரை
காலத்தால்
உறவின் பெயர்களை மட்டுமே
மாற்ற முடியும்
அன்பை அல்ல.
கவிதை என் நெடுநாளைய விருப்பம். பதினான்கு பதினைந்து வயதுகளில் என் மைத்துனனும், உயிர் நண்பனுமான செல்வகுமாரோடு ஆரம்பித்த தேடுதல் இன்றூ தொகுப்பாய் மலர்ந்திருக்கிறது. அவனும் நானும் கவிதை பேசி கழித்த இரவுகளின் ஈரமின்னும் எனக்குள் அப்படியே இருக்கிறது.
எழுதிய கணத்திலிருந்து என்னை ஊக்கப்படுத்தும் அப்பா தி.முத்துவுக்கும் நான் சொல்வதையெல்லாம் ரசிக்கும் அம்மா மு.முத்தம்மாளுக்கும் எனது அன்பையும், நன்றிகளையும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. எனது எந்த விருப்பத்துக்கும் தடை சொல்லாத அவர்களது அன்பு, இந்த உலகில் எனக்குக் கிடைத்தற்கரிய செல்வம்.
துபாய், என்வாழ்க்கையை சோலையாக்க்கியிருக்கும் பாலை. நல்ல நண்பர்களை,உறவுகளை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. எனது தேடல்கள், சிந்தனைகள் ஒரு வடிவம் பெற்றிருக்கிறது. என் பயணத்தை பற்றிய தெளிவை தந்திருக்கிறது. இந்த பாலைப் பிரதேசத்திற்கு என் ஈர முத்தங்கள்.
என் கவிதைகளுக்கு களமாகவும், சோர்ந்த பொழுதில் தாங்கிப் பிடித்த தமிழ்மன்றம்.காம் இணைய தளத்திற்கும், உற்சாக வார்த்தைகளால் என்னை ஊக்குவித்த இளசு அண்ணாவிற்கும், சக குடும்பத்தினராக அன்பு செலுத்திய மன்ற உறவுகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறமொழி கலப்புகளைத் தவிர்த்து, இனிய தமிழில் கவிதைகள் எழுதிடத் தூண்டுகோலாய் இருந்த 'துவக்கு' இலக்கிய அமைப்பிற்கும், இ.இசாக், கவிமதி, நண்பன், ந.தமிழன்பு மற்றும் நூலாக்கத்தில் துணை நின்ற ஜாபர்சாதிக் பாக்கவி, கடற்கரய் ஆகியோருக்கும் எனது நன்றிகள்
சனங்களின் மொழியை கவிதை மொழியாக்கிய சனங்களின் கவிஞர் த.பழமலய் அவர்கள் இத்தொகுப்பிற்கு அணிந்துரை அளித்திருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. அவரின் அன்புக்கு நன்றிகள்
என் உயிர்த்துளியைப் பருக வழிவிட்டு விடைபெறுகிறேன்
(நூலுக்கான என்னுரை)
**
இனிய மன்ற உறவுகளுக்கு, ஒரு அன்பான அழைப்போடு நீண்ட இடைவெளிக்குபின் மன்றத்தில் நான். நமது மன்றத்தில் பிரியன் என்ற பெயரில் நான் உளறல்கள் என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதைகள் இப்போது கவிதை தொகுப்பாக மலர்ந்திருக்கிறது. உளறல்கள் தீபங்கள் பேசுமாகி திருத்தப்பட்டு இறுதியாக ''உயிர்த்துளியாக உங்கள் முன்னே வந்திருக்கிறது. தமிழ்மன்றத்தை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பனின் ''விரியக்காத்திருக்கும் உள்வெளி''யோடு துபாயில் கவிஞர் இன்குலாப் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள, 18-04-2008 அன்று, கராமா எஜுஸ்கேன் அரங்கில், சிறப்புற இந்த விழா நடைபெறவிருக்கிறது. இதற்கான விழா அழைப்பிதழ் என் வலைப்பூவில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற அன்புடன் அழைக்கின்றேன்…
இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
பிரியன்
Bookmarks