உள்வெளியிலிருந்து….
ஒவ்வொருவருக்குள்ளும் மற்றவர்க்குச் சொல்வதற்கென ஒரு உள்வெளி இருக்கிறது. ஆயிரமாயிரம் சிந்தனைகள், கற்பனைகள், கனவுகள் கணந்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கும் அந்த வெளிகளில்.
எல்லோராலும், எல்லாப் பொழுதுகளிலும், அந்த வெளிகளைத் திறந்து, வெளிவந்து பரந்து விரிந்த பிரபஞ்ச வெளியில் கலந்துவிட இயல்வதில்லை தான். ஆனாலும், அவ்வாறு கலந்து அதன் மூலம் தன்னைப் போன்ற பிற மனிதனின் உள்வெளிகளையும் தரிசித்து விட முடியுமாவென்ற ஆவல் மட்டும் என்றுமே தணிந்து விடுவதில்லை.
இந்தத் தணியாத ஆவல், தரும் ஏக்கமே படைப்பாக வெளிவருகிறது - கவிதையாக, கதையாக, ஓவியமாக, ஒளியாக, ஒலியாக இன்னபிற படைப்பு வடிவங்களைத் தாங்கிக் கொண்டு.
இந்தத் தாகத்துடன், முனைந்து முயற்சிப்பவர்களுக்கு, இந்த வெளி உலகுடன் தொடர்புப் படுத்திக் கொள்ள முனையும் உள்வெளி என்றுமே விரிந்து கொண்டே இருக்கும் - புதிய புதிய நயங்களுடன்.
கடந்த நான்கு ஆண்டுகளாக அவ்வப்பொழுது எழுதி, இணையத்தில் இடம் பெற்ற கவிதைகள், இன்று நூலாக பதிவுறுகிறது.
எந்த ஒரு இலட்சியமும், எளிதாகக் கை கூடி விடுகிறது – நதியின் கரை போல நின்று, சரியானத் தடங்களை நோக்கி, திருப்பி விட்டுக் கொண்டே இருக்கும் நண்பர்களால்.
முதன் முதலில், சாதாரணமாகவே எழுதத் தொடங்கினாலும், அதைப் பிரம்மாண்டமாகப் பாராட்டி, புகழ்ந்து உற்சாகப் படுத்திய தமிழ் மன்றம் டாட் காமின் இளசு, அத்தகைய கரைகளில் ஒருவராக இருந்தார் என்றால், ஆங்கிலக் கலப்புகளை நீக்கி, தமிழை முதன்மைப் படுத்த தொடர்ந்து கேட்டுக்கொண்டே அதற்கான உதவிகளையும் செய்து கொடுத்து வரும் இசாக் மற்றொரு கரையாக இருக்கிறார்.
எழுதுவதற்குத் தளம் அமைத்துக் கொடுத்த தமிழ் மன்றம் தான் இத்தகைய நண்பர்களையும், உடன் பிறவா சகோதரர்களையும் அடையாளம் காட்டியது.
இன்று இணையத்தில் பரவலாக எழுதினாலும், முதலில் நடை பயின்றது தமிழ் மன்றம் என்றால் மிகையாகாது. பின்னர் வலைப் பூக்களும், முறையான வடிவ இணைய பத்திரிக்கைகளும் இயங்கும் தளமாக ஆகிவிட்டன. இவ்வாறு பலவாறான தளங்களில் தோன்றிய கவிதைகள் தொகுக்கப்பட்டு, இன்று விரியக் காத்திருக்கின்றன உங்களிடத்தில்.
எந்த ஒரு இசத்தையும் சாராமல், மனதில் தோன்றிய பொழுதெல்லாம், தோன்றிய படியே எழுதி இருப்பதால், குறிப்பிடத்தக்க அளவில் நடையில் மாற்றங்கள் இருக்கலாம். தேதி வாரியாகத் தொகுக்கப்படாததினால், இந்த மாற்றங்களை முன்னும் பின்னுமாகக் கூட காண நேரிடலாம்.
அறிமுகமற்ற நிலையில், ஒரு தொலை பேசி அழைப்பை ஏற்று, இக்கவிதைகளை வாசித்து, தனது கருத்துகளை அணிந்துரையாக எழுதித் தந்த நண்பர் கடற்கரய்க்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த ஒரு நிர்ப்பந்தத்திற்கும் இடமில்லாத மனம் போன போக்கில் இசங்களையேத் தாண்டியே எழுத வேண்டும் என்ற அவா புதிய தெம்புகளைத் தரும் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
நண்பன்
* * *
நீண்ட நாட்களுக்குப் பின் உங்களிடையே வருவதில் அத்தனை மகிழ்ச்சி…
நீண்ட நாட்களாக அந்த அவாவிருந்தது… உங்களிடத்தில் எழுதிப் பழகிய நாட்களில் தொடங்கிய கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வழங்கி விட வேண்டும் என்ற அந்த விருப்பம் வருகின்ற ஏப்ரில் 18ஆம் தேதியன்று நிறைவேறுவதாக அமைகின்றது.
‘விரியக் காத்திருக்கும் உள்வெளி’ என்று தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது. என்னைக் கவிதை எழுதச் செய்த – உற்சாகப்படுத்திய தமிழ் மன்றத்தில் அந்தச் செய்தியைச் சொல்வதென்பது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் மேலே வாசித்தவை அந்த நூலின் என்னுரையாக எழுதப்பட்டது.
கவிஞர் இன்குலாப் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள, 18-04-2008 அன்று, கராமா எஜுஸ்கேன் அரங்கில், சிறப்புற இந்த விழா நடைபெறவிருக்கிறது. இந்த நூலுடன், நண்பர் முத்துகுமரனின் கவிதை நூலும் வெளியிடப்படும். இதற்கான விழா அழைப்பிதழ் என் வலைப்பூவில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற பெருவிருப்புடன், அன்புடன் அழைக்கின்றேன்…
அன்புடன் நண்பன்
Bookmarks