சட்டசபைக்கு இன்று திடீர் வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
மூன்று நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், காலை 9 மணிக்கு கோட்டைக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சபை நடவடிக்கைகளில் 9.30 மணிக்கு பங்கேற்றார்.
சட்டசபைக் கூட்டம் தொடங்கியவுடன் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு, ஒகேனக்கல் விவகாரம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து, அதன் மீது பேச அனுமதிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவும், அதிமுக உறுப்பினர்களும் கேட்டுக்கொண்டனர்.
இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், அதிமுகவினர் தொடர்ந்து ஐந்து நிமிடம் கோஷங்கள் எழுப்பிவிட்டு, பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பற்றி சட்டசபையில் பேச அனுமதி கேட்டதாகவும், ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதால் வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்தார்.
______________________________________________________________________
(மூலம் - வெப்துனியா)
Bookmarks