பாகம்-1
1917..........வியாபாரத்துக்கு வந்த ஆங்கிலேயர்கள்...ஆட்சியாளர்களாகி போட்டுக்கொண்டிருந்த ஆட்டமெல்லாம்...ஆட்டம் கண்டுகொண்டிருந்த காலம். அவசர அவசரமாய் கொள்ளையடித்த பொருட்களையெல்லாம் ஏறக்கட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கும் ஒரு பகுதியை அனுப்பிவைக்க தீர்மானித்த மகாராணி அரசாங்கம்...இந்தியத் தங்கத்தை கப்பலேற்றி அனுப்ப முடிவு செய்தது.ஆனால் உலகநாடுகளின் பார்வைக்கு இவர்களின் திருட்டுபுத்தி தெரியக்கூடாது என்பதற்காக அதை ரகசியமாய் செய்ய முடிவெடுத்தனர். கப்பல் தயாரானது. கேப்டன் ரஸ்ஸலும்,உடன் பாதுகாப்புக்கு கப்பற்படை அதிகாரி ராபர்ட் ஸ்டீவும் அவருடைய ஒரு பிரிவு வீரர்களும் ரகசியமாய் தயார்படுத்தப்பட்டனர். மும்பையிலிருந்து புறப்பாடு என ஏற்பாடு.
சரக்கு ஏற்றும் பகுதி...இரண்டு அடுக்குகளாக பிரிக்கப்பட்டு...உள் அடுக்கில் டன் கணக்கில் இருந்த தங்கப் பெட்டிகளும்,அதனைச் சுற்றி வெளி அடுக்கில் பார்ப்பவர்களுக்காக பருத்திப் பஞ்சு மூட்டைகளும் ஏற்றப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.ராணுவ வீரர்கள் சாதாரண கப்பல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டார்கள்.எல்லாம் மிகச் சரியாகத் திட்டமிடப்பட்டதும் பயணத்துக்கான நாள் குறிக்கப்பட்டது.
பணியாளர்களுக்கு உணவு சமைக்கும் வேலையில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்கு ஆஸ்தான உதவியாளராக..மருதமுத்து. இருவரும் தென்கோடி பகுதியான நாகர்கோவில் பகுதியான குளச்சலைச் சேர்ந்தவர்கள்.மிக ரகசியமாக ஏற்றப்படும் சரக்கு இன்னதென சுந்தரலிங்கத்தால் முதலில் விளங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் அந்தக் காரியத்தின் ரகசிய செயல்பாடுகள் அவருக்கு சந்தேகத்தை தோற்றுவித்தது.கப்பலின் உள்ளே சர்வ சுதந்திரத்துடன் உலவும் அனுமதி பெற்றவரென்றாலும்...சரக்கு ஏற்றும் சமயத்தில் அவரையும்,அவருடைய உதவியாளர்களையும் உள்ளே அனுமதிக்காததிலிருந்து மிக முக்கியமான...மிகவும் மதிப்புள்ள பொருளை இந்தமுறை கொண்டுபோகிறார்கள் என்று யூகிக்க முடிந்தது.
அது தங்கப்பாளங்கள்தான் என்பதையும் அவர் தெரிந்துகொண்டார்....பெட்டிகளில் அடுக்கப்பட்டிருக்கிறது...கனமான பூட்டும் போடப்பட்டிருக்கிறது....அந்தவகைப் பூட்டுகளை ஆங்கிலேயர்கள் மிக விலையுயர்ந்த பொருட்கள் இருக்கும் பெட்டிகளுக்குத்தான் உபயோகப்படுத்துவார்கள். சாதாரணமாக இரண்டுபேரால் இலகுவாய் தூக்கிவிட முடிந்த அளவில் இருந்த அந்தப் பெட்டிகளை மிகக் கஷ்டப்பட்டு அவர்கள் தூக்கியதிலிருந்தும்,வழக்கமாய் பயணிக்கும் வேலையாட்கள் மாற்றப்பட்டு புதிய ஆட்களை தயார்படுத்தியதிலிருந்தும்,அந்த புதுமுகங்களெல்லாம் கப்பற்படையைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களது நடவடிக்கைகளிலேயே தெரிந்ததாலும்...சர்வ நிச்சயமாய் சுந்தரலிங்கத்தால் அதை யூகிக்கமுடிந்தது.
அந்த நிமிடம்வரை அவருடைய மனதில் எந்த திட்டமும் இல்லை. ஆனால் போகும் வழியை கேப்டன் அவர்களுக்கு விளக்கிச் சொன்னபோதுதான்...மெல்ல அந்த திட்டம் அவருடைய மனதில் உருவானது.இலங்கையைச் சுற்றிக்கொண்டு போகவேண்டி இருந்ததால்...கப்பல் செல்லும் பாதையிலிருந்து ...தான் சர்வ சகஜமாய் புழங்கிக்கொண்டிருந்த கடல் பகுதி அருகில்தான் இருக்கும் என்பதை கணக்கிட்டு....திட்டத்தை உருவாக்கினார். தன் ஆஸ்தான உதவியாளரான மருதமுத்துவுக்கு அந்த திட்டத்தைச் சொன்னதும்...அவனுக்கு கை,காலெல்லாம் நடுங்கத்தொடங்கிவிட்டது.சாத்தியமா...இல்லை சாவு நிச்சயமா...என்று உதறலுடன் சுந்தரலிங்கத்தைக் கேட்டான்.
துணிந்தவனுக்குத் துக்கமில்லை....கவலைப்படாதே எல்லாம் நல்லபடியாக நடக்குமென்று அவனுக்கு தைரியம் சொல்லிவிட்டு...தனது திட்டத்தின் அடுத்த பகுதியை விளக்கினார்.
தென்தமிழகம்
குளச்சல் ஒரு கடலோர கிராமம். அந்த கிராமத்து வாலிபன் பாண்டியன், திடகாத்திர வாலிபன்.சுந்தரலிங்கத்தின் உறவுக்காரனென்றாலும் மிக நெருங்கிய நன்பன். அந்த வட்டாரத்தில் அவனுடைய துணிச்சலுக்கு நல்ல பேர் இருந்தது.கையில் ஒரு கடிதத்தை வைத்துக்கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.அது சுந்தரலிங்கத்திடமிருந்து வந்திருந்தது.தங்களுக்குப் பழக்கமான அந்தக் கரைப்பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு, குறிப்பிட்ட தினத்தில் நள்ளிரவுக்கு மேல் வந்து நிற்குமாறும்...நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள சில பொருட்களை ஏற்றிச் செல்ல ஏற்பாடையும் செய்யுமாறும்...எழுதிவிட்டு...பின் குறிப்பாக..நம்மிடமிருந்து எடுக்கப்பட்ட பொருளை நாமே திரும்ப எடுத்துக்கொள்வது திருட்டு அல்ல...அதனால் நான் கொண்டுவரும் பொருளைப் பற்றின
தவறான சந்தேகம் வேண்டாம்.ஆனால் சந்தேகமே இல்லாமல் நம் வாழ்க்கையை இது உயர்த்தும்.மிக எச்சரிக்கையாய் நடந்துகொள்.நான் அங்கு திரும்ப வந்த பிறகு பிரிட்டிஷார் என்னைத் தேடிக் கண்டுபிடித்து கொன்றுவிடுவார்கள்.என்
உயிரைப் பற்றிக் கவலையில்லை...ஆனால் நம் குடும்பமும்,மருதமுத்துவின் குடும்பமும் உன்னால்தான் காப்பாற்றப் படவேண்டும்.உன்னைத்தான் நான் வெகுவாக நம்பியிருக்கிறேன்....என்று எழுதியிருந்தது.
கடிதத்தை ஒன்றுக்கு மூன்றுமுறை படித்துப்பார்த்துவிட்டு..குழம்பிப்போனான். சுந்தரலிங்கம் கொண்டுவரப்போகிற பொருள் என்னவாக இருக்கும்,எப்படி அதைக் கரைவரைக் கொண்டுவரப்போகிறார்..அவர் வேலை செய்யும் கப்பல் வெள்ளைக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும், காவல் நிறைந்திருக்கும் அத்தனையையும் மீறி எப்படி அவரால் இதை சாதிக்க முடியும் இப்படி பலவேறான சந்தேகங்கள் கேள்விகளாய் குடைந்தன. தன் உயிருக்கே ஆபத்து வரும், நிச்சயம் இறக்கவேண்டிவரும் என்று அவரே சொல்வதைப் பார்த்தால் மிக மிக ஆபத்தான ஒரு காரியத்தில்தான் இறங்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட வேலையில் என்னைத்தான் முழுதுமாக நம்புவதாகச் சொல்லியிருக்கிறாரே...எப்படி என்னால் அவருக்கு உதவமுடியும் என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டாலும்...அந்தக் கடிதத்தின் பின் குறிப்பு அவனை சமாதானப்படுத்தியது.
தன்னை நம்பி இந்தக் காரியத்தில் இறங்கிவிட்டார்...கண்டிப்பாக எந்த கஷ்டம் வந்தாலும் இதில் அவருக்குத் துணையாக இருக்கவேண்டுமென உறுதி செய்துகொண்டு அந்தக் கடிதத்தை தன் நாட்குறிப்புப் புத்தகத்தில் மடித்து வைத்துவிட்டான். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோருக்கு அணில் உதவியாய் அவ்வப்போது சிலவற்றை செய்துகொண்டிருந்தான். அந்த நிகழ்வுகளை..பதித்து வந்த அந்த நாட்குறிப்பை...(நாட்குறிப்பென்றால் நாள்தோறும் அதில் எழுதும் பழக்கமில்லை. தன்னைப் பாதித்த நிகழ்ச்சிகளை,தனக்குத் தோன்றியதை...இப்படி அவ்வப்போது எழுதி வந்தான்.)மிகப் பத்திரமாக பாதுகாத்தான். அதனாலேயே அந்தக் கடிதத்தையும் அதனுடனே வைத்தான். அந்த நாட்குறிப்பை, பழம்பொருட்களைச் சேகரிக்கும் பழக்கத்தில் ஒரு நலிந்துவிட்ட சிற்றரசர் குடும்பத்தாரிடம் வாங்கிய ஒரு சின்ன அழகிய வேலைப்பாடுடன் கூடிய மிகப் பழைய காலத்து மரப்பெட்டியின் உள்ளறையில் வைத்தான்.
சுந்தரலிங்கம் குறிப்பிட்டிருந்த அன்றையதினம்......வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு..மெல்ல வெளியேறினான் பாண்டியன். மங்கிய வெளிச்சத்தில் தெருவை சுற்றி நோட்டமிட்டான்.அந்த ஊரிலிருந்த அனைவரும் கடுமையான உழைப்பாளிகள்...அதுவுமல்லாமல் பட்டணத்தவர்களைப் போல அவர்களுக்கு கேளிக்கை என்பதெல்லாம் தினமுமல்ல... வருடம் ஒருமுறை நடக்கும் திருவிழாவும் தெருக்கூத்தும்தான். அதனாலேயே வெகு சீக்கிரமே கஞ்சியைக் குடித்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்துக்குப் போய்விடுவார்கள்.அப்படியே அன்றும் அனைவரும் உறங்கியிருந்தார்கள்.
எங்கோ ஒரு உழவுமாடு கத்தும் சத்தமும்,சில் வண்டுகளின் சத்தமும்,பஞ்சாரத்தில் அடைபட்டுருந்த கோழிகளின் குக்குர்குரும் தான் கேட்டது. வேகமாக அதே சமயம் சத்தம் வராமல் நடந்து ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த மாட்டுவண்டி இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். சக்கரங்களில் அவன் இட்டு வைத்திருந்த மசையால்..அதிக சத்தம் வராமல் அவை உருண்டன.வண்டியை ஓட்டிக்கொண்டு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். தான் கொண்டு வந்திருந்த மாட்டுவண்டியை ஓரமாக மறைவிடத்தில் நிறுத்திவிட்டு...ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். பலவித எண்ணங்கள் மனதில் ஓடினாலும்...எதோ ஒருவித பரபரப்பு உடலில் ஓடிக்கொண்டிருந்தது.
குறைந்த நிலா வெளிச்சத்தில் தண்ணீருக்கு மேல் தாவிய மீன்களின் மின்னல் வெட்டு மட்டும் அந்த கரிய கடலின் உடல்மீது தோன்றிக்கொண்டிருந்தது.காற்றில் சில்லிப்பு கூடியிருந்தது. நள்ளிரவைக் கடந்த சமயமல்லவா...ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு தயாராய் இருந்த மனது குளிரை உணரச் செய்யாததால்.....குளிர் உறைக்காமல்,தன் கண்முன்னாலேயே நிகழப்போகும் விபரீதத்தை அறியாமல்..பார்வையைக் கடல்மீதே பதித்து காத்திருக்கத் தொடங்கினான்.அலைகளின் ஓசை..வம்புபேசுபவர்களின் இரைச்சலைப் போல ஓயாது கேட்டுக்கொண்டிருந்தது.......
தொடரும்
Bookmarks