நான் படித்து ரசித்த ஒரு கதையின் அடிப்படையில் உண்டான கவிதை இது!
(நன்றி: மன்மதன்)
அவள் ஒரு தேவதை!
பலமுறை சொல்லியது அவன் நாவதை!
அவளைக்கண்டு,
என்றும் மயங்கி மயங்கி நின்றவன்
இன்று தயங்கி தயங்கி சென்றான்!
எனக்காய் சில நிமிடங்கள்
ஒதுக்கமுடியுமா?
விழிகளும் புருவங்களும்
ஆச்சரியத்தில் விரிந்தன முதலில் -பின்
மெல்லிய புன்னகையொன்று,
எட்டி பார்த்தது அவள் இதழில்
எகிறி எகிறி குதித்தாடியது
அவன் இதயமும் காதலும்!
அருகிலிருந்த ஓட்டலில்
நுழைந்தனர்!
என்ன சாப்பிடறீங்க....
தேநீர் சொல்லவா என்றான்!
தண்ணீர் மட்டும் போதுமென்றாள் -அந்த
வெண்தேக நங்கை
உண்மைதான்...
"தேன்" நீர் மட்டும் அருந்தினாலே -அது
தேநீர்தானே என்றான்!
திடீரென்று,
ஒரு நூறு புறாக்கள் ஒன்றாக
பறந்திடும் சப்தம் கேட்டதங்கே....
அவளின் சிரிப்பொலியில்!
கைதட்டி வெற்றியென்று
விரலால் சைகை செய்தான்!
இரு தேநீர் கோப்பைகள்
வந்தமர்ந்தன மேஜை மீது!
மெல்ல தேநீரை சுவைத்தவனின்
உதடுகள் சர்வரை அழைத்தன!
கொஞ்சம் உப்பு கொண்டுவாங்க....
விழிகளும், புருவங்களும்
ஆச்சரியத்தில் விரிந்தன
இரண்டாம் முறையாய் அவளுக்கு!
சர்வரும் அவனை
ஏற இறங்க பார்த்தபடியே சென்றான்..
என்னங்க உப்பு கேட்கறீங்க
என்றாள்.. அவள்!
மெளனமாய் இருந்தவன்
மெல்ல தலையை உயர்த்தினான்...
அவனின் கண்களில் சில நீர்பந்துகள்,
கீழே விழுந்திட தயாராய் நின்றிருந்தன..
கடலோர கிராமத்திலே
உப்புக்காற்றின் வாசத்தில் பிறந்தவன்.
கடலில் நீராடும்போதும்
வாய்க்குள்ளே செல்லும்
உப்பு நீரினை ருசித்தவன்..
இன்று அந்த கடலும் இல்லை
என் பெற்றோரும் இல்லை
அந்த பால்ய காலமும் இல்லை.
ஒவ்வொரு முறை
தேநீரில் உப்பினை போடும்போதும்
நான் ருசித்துக்கொண்டிருப்பது...
தேநீரை அல்ல...
என் பால்ய கால நினைவுகளை!
என்று சொல்லிமுடித்தபோது,
அவனுள்ளிருந்த உப்புத்துளிகள்
சில மேஜை மீது கிடந்தன...
அவள் அவனை அப்படியே
பார்த்தபடி இருந்தாள்...
அறிமுகம் காதலாகி,
காதல் பின் கனிந்து,
திருமணமாய் மணம் வீசியது!
ஒவ்வொருநாள் காலையும்
உப்பிட்ட தேநீரையே,
அன்பாய் அவள் கொடுத்தாள்...
ஆசையாய் அவனும் பருகினான்...
பல வருடங்களுக்குப் பின்,
இறக்கும் தருவாயில்,
கோதையவளின் மடிமீது
தலைவைத்தபடி கூறினான்...
மன்னிப்பாயா அன்பே என்னை?!
அன்று நம் முதல் அறிமுகத்தில்,
சர்க்கரையென்று கேட்பதற்குபதிலாய்
உப்பு என்று உளறிவிட்டேன்...
உன்முன் அவமானப்படுவதை
தவிர்க்க நினைத்து பொய்யாய்
சில காரணங்களை கூறினேன்...
அவள் அழுதபடியே கேட்டாள்..
பின் ஏன் இத்தனை நாளாய்
அதை குடித்தீர்கள்?
ஒவ்வொருமுறை,
சொல்ல நினைக்கும்போதும்
எதோ என்னை தடுத்தது..
ஒவ்வொரு முறையும் நீ,
தேநீரில் கலந்தது உப்பல்ல
முழுக்க முழுக்க நம் காதலை!
அவள் அவனை
கட்டியணைத்துக் கொண்டாள்...
அடுத்தபிறவியிலும்
நானுனக்கு கணவனாய்
இறைவன் படைத்திட வேண்டும்!
உன் கையால் தினம்,
உப்பு தேநீரை குடித்திடவேண்டும்!
Bookmarks