தூக்கி சொருகிய பாவாடையும்
நனைந்து மின்னிய கால்களும் கண்டு
வயற் காற்றுக் காமுகன்
மானபங்கம் செய முயல்வான்.
அங்கத்திற்கு திரையிட்டு-என்
உள்ளத்தில் உனை சிமிழ்ப்பாய்.
தேம்பல் துளிகள் ஏந்தியபடி
வீடேகிய கடநீரேறி மிச்சத்தில்
தூண்டிலிட்டுக் காய்வோம்..
காத்திருப்பில் கால்கடுக்க
தோள்சாய்ந்த தலை கோதி
தாயாகி நீ நிமிர்வாய்.
சொக்கட்டான் ஆட்டத்தில்
உருட்டிய சோகி தாயம்தர-என்
தொடை தட்டி மாயம்செய்வாய்.
கோவில் தீபமாய் காயம்வைப்பாய்!
குலசாமி அமர்ந்த அரசமர நிழலில்
கண்மடல் குவித்து இதழுக்கு தாழிட்டு
புறாக்கீதத்துடன் உறவாடுகையில்
பின்னின்று பயங்காட்டி மலர்வாய்.
காலவாரியம் இடமாற்றிய தோழியே..
வேசக் காட்டு மிருகங்கள் தரும்
துரோகக் கீறல்களின் எரிவுகளிற்கு
ஒத்தடமாகும் உன் நினைவுகள்
புன்னகையாய் பூத்து சொன்னது
சிரிப்புக்கும் அழுகை என்று பெயர்.
Bookmarks