இரவுப்பணி முடித்து
இரவி வீடேகும் போது
விழிமலர்ந்து
விழி மலர்விப்பாய்..
தூரிய சேதிகளை
தூறியதும் நூரும் நம்முறவு
தொடர்வண்டி பயணத்தின் பின்
தொடர்கிறது மீண்டும்..
நமதுறவுப் பாசனத்தில்
குறுக்கோடும் இடையூறுகளால்
ஊறிய பசியுடன் காத்திருப்பேன்
நீ தரும் போசனத்துகாய்.
வீடடையும் வேளைதனில்
என்னிலை உணர்ந்து
நாணிச் சிவக்கும் வானம்.
தளிர்க்கும் வாடிய நம்வதனம்.
உரசல்களும் ஊடல்களும்
அமைத்த பஞ்சணையில்
துவங்கும் ஆட்டத்தின் முடிவில்
உறங்குவோம் திருப்தி மடியில்..
நான் நலங்கெட்ட நாட்களில்
உன்விரல் தீண்டல் கிட்டாது
மங்கிப்போகும் என் முகம்..
இரட்டையாக உன் முகம்..
எனக்கு நானே வினவுகிறேன்
என்ன உறவு
எமக்கிடையான இவ்வுறவு
மடிக்கணினியே கணி நீயே!
Bookmarks