பறவைக்கும் கூடுண்டு
என்னக்கொரு வீடில்லையென
சேர்த்து வைத்த காசில்
பார்த்து பார்த்து கட்டிய வீட்டில்
மொத்தமாய் இருந்த நாட்கள்
கொத்தனார் இருந்ததைவிட குறைவு!

இதை ஆதங்கமாய் சொல்லக்கூட
அருகதையில்லை எனக்கு...
அத்தியாவசியத்திற்காக
அயல்தேசம் வந்தவன்
அவசியம் அநாவசியத்திற்கான
வித்தியாசம் தெரியாமல்
வாழ்ந்து வருகிறேன்!

நிறுத்துவதும்,தொடர்வதும்
நிச்சயமாய் என் முடிவுதானென்றாலும்
ஒவ்வொரு முறையும் ஒரு காரணம்
மீண்டும் பயணிக்க வைக்கிறது....

நில்! வாழ்! எனும்
உள் மனதின் கட்டளை
என்னுள்ளிருந்து எழும் நாளுக்காய்
காத்திருக்கிறேன்....
கட்டிய வீடு இன்னும்
கட்டிடமாகவே காத்திருக்கிறது!