தாய்மொழி ஒரு இனத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கும் ஒரு கருவி. தாய்மொழியில் சிந்தித்துச் செயல்படுவதுதான் குழந்தைகளுக்கு இயற்கையாகவே சிறப்பாக அமையும் என்பது மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தாய்மொழியில் கல்வி கற்பித்து வரும் பல நாடுகளில் குறிப்பாக ஜப்பான், சீனா போன்ற நாடுகளின் அறிவுசார்ந்த பொருளாதார வளர்ச்சி இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். ஜப்பான் நாட்டில் படிப்பெல்லாம் ஜப்பானிய மொழியிலேயேதான் சொல்லித் தருகிறார்கள். இளம் சமுதாயத்துக்குச் நல்ல சூழ்நிலையை உருவாக்கித் தருவதிலும், மாணவர்களைப் பண்படுத்தி நல்ல குடிமக்களாக உருவாக்குவதிலும், நற்பண்புகளை விதைத்துச் சான்றோராக்குவதிலும் தாய்மொழியின் பங்கு இன்றியமையாதது. ஒரு நாட்டு மக்கள் அந்த நாட்டுக்குரிய உயர்ந்த பண்புகளுடன் விளங்க வேண்டுமானால் அந்த நாட்டு இளைஞர்களுக்கு உயர்தரக் கல்வி மட்டுமின்றி அனைத்துக் கல்வியையும் தாய்மொழி மூலமாகவே கற்பிக்க வேண்டும் என்பது அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பொன்மொழியாகும்.
இவ்வாறு ஒரு இனத்தின் கலை, கலாச்சாரப் பண்பாட்டு வளர்ச்சிக்கு அவ்வினத்திற்குரிய மொழியே முக்கியக் காரணமாக அமைகிறது. அதனால்தான் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அவ்வினம் பயன்படுத்தும் மொழியை முதலில் அழிக்க முயற்சித்தாலே போதுமானது. விரைவிலேயே அவ்வினமே அழிந்துவிடும் என்பது மொழி ஆய்வாளர்களின் கூற்றாகும். எனவே தாய்மொழியைப் போற்றிப் பாதுகாப்பது அவ்வினத்தில் பிறந்த ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும். அப்போதுதான் அந்த இனத்தின் தொன்மையையும், பெருமையையும், அவ்வினத்தின் வரலாற்றுச் சிறப்பினையும் கட்டிக்காக்க முடியும்.
இவ்வகையில் பார்த்தால், ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரிக வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள் என்பது புலனாகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழில் இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் சிறந்த இலக்கியங்கள் தோன்றி வெளிவந்து, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே மற்றத் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கியங்கள் பிறந்தன. உலகின் தொன்மையான மொழிகளில் கிரேக்கம், சீனம், தமிழ் ஆகிய மூன்று மொழிகள்தான் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ளதாக அறியப்படுகிறது. இவற்றுள் காலத்திற்கேற்ற மாற்றங்களைத் தழுவிக் கொண்டு பேச்சு, எழுத்து என்னும் இரு வழக்கிலும் இன்று மிகச்சிறந்து விளங்கும் ஒரு மொழியாக நமது தாய்மொழியாம் தமிழ்மொழி விளங்கி வருகின்றது.
ஈராயிரமாண்டுகளாத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் வரலாறும் கொண்டது நம் தமிழ்மொழி. தமிழின் பொற்காலம் என்று சொல்லப்படும் சங்க காலத்தில் இன்று உலகில் புழக்கத்தில் உள்ள சில மொழிகள் தோன்றவே இல்லை. ஆங்கில மொழி இன்று உலக மொழியாக விளங்கினும், ஆங்கிலோ சாக்சான் காலத்தில் அது வெறும் இருநூறு சொற்களை மட்டுமே வைத்திருந்தது. அது, பிற்காலத்தில் பிறமொழிகளில் கடன் பெற்று வளர்ந்த மொழி. ஆனால் தமிழ் மொழியோ சங்க காலத்திலேயே ஆயிரக்கணக்கான சொற்களைத் தன்னகத்தே கொண்டு கருத்து வளமுடன் விளங்கிய உயர்தனிச் செம்மொழி. தமிழ் மக்களின் நாகரிகமும் பண்பாடும், அரசியல் அமைப்பும் பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால், முன்னேற்றம் மிக்க சிறந்த அரசியல், பொருளாதார, நாகரிகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும்.
Bookmarks