வாழ்க்கையில் எத்தனை விதமான மனிதர்களை சந்திக்கிறோம்.எல்லோருமே மனதில் நின்றுவிடுவதில்லை.சிலர் மட்டுமே என்றும் நிற்கிறார்கள்.அதில் சிலர் அவரவர்களின் பழகும் தன்மையாலும்,அல்லது பிரத்தியேக குனாதிசயங்களாலும் மறக்கமுடியாதவர்களாகிறார்கள்.
அப்படி நான் சந்தித்த ஒருவர்தான் தேசாய் என்ற குஜராத்தி நன்பர்.பொதுவாகவே குஜராத்திகள் பணவிஷயத்தில் கெட்டி.அதிலும் இவர் வடிகட்டின கஞ்சன்.அவரோடு எனக்கேற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
சம்பவம்-1
அப்போது நாங்கள் கஜகஸ்தானில் இருந்தோம்.எனக்கு நேரெதிர் அறையில் அவர் இருந்தார்.ஒருநாள் இரவு 10 மணியளவில் அடுத்தடுத்த அறகளில் கதவு தட்டப்படும் சத்தமும்,சில பேச்சுக்குரல்களும் கேட்டது.சிறிது நேரத்தில் என் அறைக்கதவும் தட்டப்பட்டது.கதவைத் திறந்தால் பைஜாமாவில் தேசாய்.என்ன என்று கேட்பதற்குள் உன்கிட்ட சூப்பர் குளூ இருக்கா என்றார்.எதை ஒட்டுவதற்கு என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலில் அதிர்ந்து போனேன்.
டூத் பிரஷ் உடைந்துவிட்டது அதை ஒட்டவேண்டுமென்றார்.
அடப்பாவி 20 டிங்கே கொடுத்தால் கீழ் பகுதி கடையில் புதிய பிரஷ் கிடைக்குமே என்றதற்கு இன்னொரு ஏவுகனையை வீசினார்.
இந்த பிரஷ்...நான் ஊர்ல டூத்பேஸ்ட் வாங்கும்போது அதனோடு இலவசமாகக் கிடைத்தது.இன்னும் இரண்டு வாரத்தில் நான் ஊருக்குப் போகிறேனே அப்போது அதே பேஸ்ட்டை வாங்கினால் மீண்டும் ஒரு பிரஷ் கிடைக்குமே அதுவரை இதை ஒட்டி அட்ஜெஸ் செய்துகொள்கிறேன்
என்றார்.
சம்பவம்-2
அப்போது நான் வாக்மேன் உபயோகித்துக்கொண்டிருந்தேன்.ஒருநாள் ஹெட்டில் காந்தக் கழிவு சேர்ந்துவிட்டதால் அதை சுத்தம் செய்ய வேண்டும்.அப்போதைக்கு After Shave lotion -ஐக்கொண்டு சுத்தம் செய்யலாமென்று காதுகுடையும் பட்ஸ் இருக்கிறதா என்று பார்த்தால் தீர்ந்து விட்டிருந்தது.சரி எதிர் அறையிலிருக்கும் தேசாயிடம் வாங்கிக்கொள்ளலாமென்று அவரை அனுகினேன்.நான் பட்ஸ் கேட்டதும் என்னை மேலும் கீழுமாய் ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே சென்று ஒரே ஒரு பட்-ஐ கொண்டுவந்தார்.கையில் கொடுக்கும்போது ஒன்று சொன்னார் பாருங்கள்.............
ஒரு பக்கத்தை உபயோகித்துவிட்டு திருப்பிக்கொடுத்துவிடு இன்னொரு முனையை நான் உபயோகிக்கவேண்டும்
மயக்கம் வராதகுறையாக அதை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தேன்.
சம்பவம்-3
சாதாரனமாக தேசாய் மனைவிக்கு அதிகமாக தொலைபேசியில் பேச மாட்டார்.ஏனென்றால் அந்த நாட்டில் தொலைபேசிக்கட்டணம் மிக அதிகம்(ஒரு நிமிடத்துக்கு இரண்டரை டாலர்கள்)அதனால் அவர் ஒரு வழி கண்டுபிடித்திருந்தார்.அதாவது நான் எதிர் அறையில் இருப்பதால் என்னுடைய அலைபேசி எண்ணை அவருடைய மனைவியிடம் கொடுத்திருந்தார்.ஏதாவது அவசரமென்றால் இந்த எண்ணில் அழைக்குமாறு சொல்லி வைத்திருந்தார்.
ஒருநாள் அவருடைய மனைவியின் அழைப்பு வந்தது.எனக்கு தேசாயிடமிருந்து கிடைத்த இன்ஸ்ட்ரெக்ஷென் அந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் தொடர்பை துண்டித்துவிட்டு இவரை அழைக்க வேண்டுமென்பது.ஆனால் அந்தமுறை அழைப்பவரின் எண் தெரியவில்லை நானும் அதை எடுத்து பேசிவிட்டேன்.அவர் குளிக்கப் போயிருந்தார் அதை சொல்லிவிட்டு பிறகு அழைக்குமாறு சொன்னேன்.
குளித்துமுடித்து திரும்ப வந்தவரிடம் விஷயத்தை சொன்னேன்.ஒரே ஆத்திரம் அவருக்கு.ஏன் பேசினாய்..எத்தனை நேரம் பேசினாய் என்று கோபமாகக் கேட்டார்.என்னடா வம்பாப்போச்சு என்று ஏன் உங்க மனைவிக்கிட்ட பேசினது தப்பா என்று கேட்டதற்கு அது தப்பில்லை...நீ பேசியதால் அநாவசியமாய் செலவாகியிருக்குமே...என்றார்.வெறுத்துவிட்டேன்.இனி எப்போது அழைத்தாலும் உங்களிடம் சொல்லவே மாட்டேன் என்று நானும் சொல்லிவிட்டேன்.
அதன் பிறகு அவர் மேற்கொண்ட உத்திதான் மிகப் பிரபலம்.வேறொரு நன்பரின் எண்ணை வாங்கி அதை மனைவிடம் கொடுத்துவிட்டு அந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் ஒருமுறை மணியடித்துக் கட் ஆகிவிட்டால் நான் நலம் என்று அர்த்தம்.இரண்டுமுறை மனியடித்தால்..மனைவி திரும்ப அழைக்கவேண்டுமென அர்த்தம்...அதையும் தாண்டி மணியடித்தால், இவருக்கு ஏதோ பிரச்சனை அதனால் நன்பர் அழைக்கிறார் அதனால் எடுத்து பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு அதன் படியே பைசா செலவில்லாமல் போனை உபயோகப்படுத்தினார்.
Bookmarks