காந்தியின் ஆண்மைக்கு தக்காளி சூப் குடித்து பார்த்தால் என்ன என்று யோசித்து, அம்மணியிடம் , அம்மணி, இப்படி இப்படி காந்தி எழுதி இருக்கிறார். அதனால் தக்காளி சூப் கிடைக்குமா என்று கேட்க, அம்மனியும் அசராது இணையத்தில் நுழைந்து எங்கெங்கோ தேடி சூப் செய்யும் முறையினை குறிப்பு எடுத்துகொண்டு, பையனை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது சரக்குகளுடன் வருகிறேன் என்று சொல்லி சென்றார். பையன் மட்டும் புத்தக மட்டையுடன் வர, எங்கடா அம்மா என்று கேட்க காய்கறி கடையில் பையனின் லன்ச் பேக் ( ஸ்டைலா சொல்லுறான் பையன் ) வைத்து விட்டு வந்து விட்டாராம் அம்மனி. அரக்க பரக்கச் சென்று லன்ச் பேக் ( ! )கை திரும்பவும் எடுத்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தால் அம்மனி கையில் மூன்று கிலோ பெங்களூர் தக்காளி ( ! ) உடன் வந்தார். அடடா, அம்மனிக்கு என்மேல் எவ்வளவு கரிசனம் என்று எண்ணி மகிழ்ந்தேன். மனதுக்குள் நாரதர் வீணை வாசிக்க, ஏம்மா இவ்வளவு தக்காளி வாங்கினாய் என்றேன். அட மூன்று கிலோ பத்து ரூபாய்ன்னு சொன்னாங்க வாங்கிட்டேன் என்றார். என்னத்தை சொல்ல இதுக்கு மேல....
ஏங்க தோலை உரிச்சுட்டு அரைக்கட்டுமா இல்லை எப்படி என்று சமையலறையில் இருந்து ஒரு கேள்வி. எப்படியாவது சூப் போல செய்யும்மா என்று சொல்லியவாறு பேப்பரில் மூழ்க, சிறிது நேரத்தில் மணக்க மணக்க தக்காளி சூப் வந்தது..... சாப்பிட்டு பார்த்தேன். நல்லாத்தான் இருந்தது.
எப்படி செய்வது தக்காளி சூப்....
ஆறு பெங்களூர் தக்காளி ( எனக்கு பெங்களூர் என்றால் ரொம்பவும் பிடிக்கும்.)
ஒரு பெரிய வெங்காயம்
கொஞ்சம் கார்ன் பிளவர் மாவு ( அதான் சோள மாவு )
மிளகு தூள்
சீரக தூள்
கொத்தமல்லி தழை
உப்பு
வெண்ணெய்
தக்காளியினை நறுக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது சோள மாவினை சேர்த்து வைத்து கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தை வெண்ணெயில் பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அரைத்த தக்காளிக் கலவையினை பத்து நிமிடம் கொதிக்க வைத்து, உப்புச் சேர்த்து பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடனுமாம். சீரக தூள், மிளகு தூள் ( இதை இரண்டும் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளனும் ) சேர்த்து, வெங்காயத்தை சேர்த்து அடுப்பை அணைத்து ( ! ) விடவும். கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறனுமாம்.
ஏதோ காந்தியின் புண்ணியத்தில் எனக்கு தக்காளி சூப் கிடைத்து விட்டது.
நாட்டுத்தக்காளியா, பெங்களூர் தக்காளியான்னு கேள்வி கேட்டவரு சூப் குடித்தாரா என்று தெரியவில்லை. ஈஸ்வரன் வேறு மிகவும் பயனுள்ள செய்தி என்று கருத்து சொல்லி இருக்காரு.
இதில் மிகவும் சோகமான விஷயம் என்னெவென்றால் போன வருடம் இதே தேதியில் தக்காளி குவிண்டாலுக்கு 1100 ரூபாய்க்கு விற்றது. ஆனால் இந்த வருடம் இதே குவிண்டால் 450 ரூபாய்க்கு விற்கின்றது. விவசாயியின் நிலைமையை எண்ணினால், சூப்பை குடிக்கும் போது அவன் ரத்தத்தை குடிப்பது போல தோன்றியது.
Bookmarks