(முன் குறிப்பு: ஒருமுறை அலுவலகத்தில் மதிய இடைவேளையின் போது நடந்த அரட்டையின் தாக்கத்தில் எழுத ஆரம்பித்தது இது. தொடரா எழுதி ஏறக்குறைய ஏழெட்டு மாதங்கள் இருக்கும். ஆயினும் மன்றத்தில் இட தைரியம் வரவில்லை. எப்படியோ இது வரை எத்தனையோ கடிகளையும் மொக்கைகளையும் தாங்கிய மன்றம் இதனையும் தாங்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் 3000ம் பதிப்பாய்)
காலை ஒன்பது மணி. மணி அடிக்கிற சத்தம். கொஞ்ச நேரத்தில வகுப்புகள் தொடங்கப் போகிறது. ஆண்டு விடுமுறைக்குப் பின் இன்னிக்கு தான் பள்ளி திறக்கிறது. புது வகுப்புக்கு போற சந்தோஷத்துல பிள்ளைகள் புது சொக்காய் உடுத்தி வகுப்புத் தேடி ஓடினார்கள்.
அட..யாரது. யாரோ ஒரு பையன் வேகமாய் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வர்றான்? பையன் வந்த வேகத்தில் மண் சறுக்கியது. காலில் சிராய்ப்பு. கொஞ்சமாய் ரத்தம் வர ஆரம்பித்தது. அந்த பையன் சைக்கிளை நிறுத்திவிட்டு வருவதற்கு முன் அவனைப் பத்தி பாப்போமா?
அந்த பையன் பேர் ப்ரேம். சின்ன வயதிலிந்து அந்த பள்ளிக்கூடத்துல் தான் படிக்கிறான். அவனுக்கென்று ஒரு பெரிய தோழர் பட்டாளம் உண்டு. எட்டாவது முடித்துவிட்டு இதோ ஒன்பதாம் வகுப்புக்கு போகிறான். முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். ஓரளவுக்கு நல்லாவே படிக்கிற பையன். கொஞ்சம் சமர்த்து. பசங்களோட சேர்ந்தா கொஞ்சம் வால். இன்னிக்கு கொஞ்சம் தாமதமா எழுந்திருச்சதால வேகவேகமா வர வேண்டியதா போச்சு.
சிராய்த்திருந்த முட்டிக்கால்ல எச்சில் தொட்டு தேய்த்தவாறே பள்ளிக்கட்டிடத்தை பார்த்து ஓடினான். ரொம்ப நாள் கழிச்சு தோழர்களை பார்க்கிற சந்தோஷம். மனசு பட்டாம்பூச்சியா பறந்திட்டு இருந்தது. பள்ளி வராண்டாவில் வேகமா ஓடினவன் அறிவிப்பு பலகையில் தன் வகுப்பு எதுன்னு தேடினான். அங்கிருந்த ஏகப்பட்ட தாள்ல ஒரு தாளில் 9-A என்றிருந்தது. வரிசையா பார்த்துக்கொண்டே வந்தான். அதோ அவன் பேர்.
கொஞ்சம் ஆர்வமிகுதியால தன் ஆள்காட்டிவிரலால ஒவ்வொரு பேரா பார்த்துக்கிட்டே வந்தான். எல்லாம் தெரிஞ்ச பேர் தான். ப்ரேமோட விரல் ஒரு பேர் மேல் நின்றது. ஷில்பா. கேள்வி படாத பெயர். புதுசா வந்த பொண்ணா இருக்கும். இது வரைக்கும் இங்க பார்த்ததில்லை. யாராயிருக்கும்? மனசுக்குள்ள ஆயிரம் சிந்தனைகளோடு தன் வகுப்பு நோக்கி நடந்தான் ப்ரேம்.
டேய்என்னடா யோசிச்சுகிட்டே வர்றே? யார பத்திடா..?!
ப்ரேமோட நண்பன் கிஷோர். இவனும் அவன் வகுப்பு தான். எல்லோரும் ஒன்னா சேர்ந்து கொட்டமடிக்கற பசங்க. இன்னிக்கு அவனும் லேட். ஆனா கொஞ்சம் கூட பயமே இல்லாம ஆடிப் பாடிகிட்டு வந்தான்.
இல்லடா மச்சான்..கொஞ்சம் தூங்கிட்டேன். எந்திருச்சு பாத்தா எட்டு மணியாயிடுச்சு. அம்மாவும் அப்பாவும் வேற கல்யாணத்துக்கு போயிருக்காங்களா..அதான் யாரும் எழுப்பல. ஆமா நீ ஏன்டா லேட்டு?
(இப்பலாம் பயலுவ ஒன்னாப்புலேயே மாமன், மச்சான் னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாய்ங்க)
அத ஏண்டா கேக்குற. நானும் ஒன்ன மாதிரி தான். தூங்கிட்டேன். ஏன்டா இன்னும் எந்திருக்கலேன்னு அம்மா தண்ணி ஊத்திட்டாங்க. அரக்கபரக்க குளிச்சு முடிச்சு வந்து பாத்தா சைக்கிள் பஞ்சர். கடையில போய் பஞ்சர் ஒட்டிகிட்டு வர்றதுக்கு இம்புட்டு நேரமாச்சு. சரி வா..சீக்கிரம் போவோம். யாரு டீச்சர்ன்னே தெரியல. மொத நாளு அதுவுமா திட்டு வாங்க வேணாம்
ரெண்டு பேரும் ஓடிப்போய் மாடியில இருந்த அவங்க வகுப்பறை வாசலில் நின்றார்கள். அட! நம்ம மல்லிகா டீச்சர். மல்லிகா டீச்சர் தமிழ் பாடம் சொல்லிக் கொடுப்பவர். மத்த பாடத்துல எப்படி இருந்தாலும் ப்ரேம் அண்ட் கோ தமிழ்ல அடிச்சு புடிச்சு நல்ல மதிப்பெண் வாங்கிடுவாங்க. தமிழ்ல மட்டும் மத்த பிள்ளைங்களுக்கெல்லாம் நேர் எதிர். அதனால ப்ரேம் கிஷோர் ரெண்டு பேரும் மல்லிகா டீச்சருக்கு செல்லம். இந்த வருஷம் அவங்க தான் இவங்க வகுப்பாசிரியர்ங்கறது இவங்களுக்கு இன்ப அதிர்ச்சியா இருந்தது.
சத்தம் போட்டுகிட்டு இருந்த பசங்கள எல்லாம் அதட்டிட்டு டீச்சர் வாசல் பக்கம் திரும்புனாங்க.
வாங்கப்பா..வாங்க. மொத நாளு அதுவும் இவ்ளோ நேரங்கழிச்சா வர்றது? சரி சரி. உங்கள சும்மா உள்ளாற வுடப்படாது. தாமதமா வந்த காரணத்த சொல்லிட்டு உள்ள போய் உக்காருங்க?
கிஷோர் ஆரம்பித்தான்.
டீச்சர்..அது வந்துஇன்னிக்கு நான் ஸ்கூலுக்கு கிளம்பும் போது சைக்கிள் டயர் பஞ்சராயிடுச்சு. அத ஒட்டிகிட்டு வந்தேனா.
ப்ரேம் மனம் இதிலெல்லாம் போகவில்லை. அந்த வகுப்பறையில் நீண்ட பெஞ்சுகள் இருந்தன. ஒன்னொன்னுலேயும் ஐந்து பேர் உட்காரலாம். முதல் ரெண்டு பெஞ்சுலேயும் பொண்ணுங்க உட்காருவாங்க. பசங்க கடைசி பெஞ்சுலேர்ந்து உட்காருவாங்க. என்னிக்கு உருப்பட்டிருக்கானுங்க அவங்க..?
ஒவ்வொருத்தரா பார்த்துக்கிட்டே வந்தவன் ரெண்டாவது பெஞ்சில ஓரமா உட்கார்ந்திட்டிருந்த பொண்ணை பார்த்தான். ஓ..இது தான் புதுசா வந்தவளோ..? பார்த்திட்டு இருக்கும் போதே அவன் கண் இருட்ட ஆரம்பித்தது. தலை சுத்தற மாதிரி இருந்தது.
டீச்சரையே கவனிச்சிட்டு இருந்த ஷில்பா சட்டென துணுக்குற்றாள்.
யாரோ என்னை பார்க்கறாங்க
சுற்றும் முற்றும் பார்த்தவ கதவோரத்தில நின்ற ரெண்டு பேரையும் பார்த்தாள். அட! என்ன இது ஒருத்தன் தள்ளாடற மாதிரி இருக்கே?. அப்போ தான் அவன் காலில் ரத்தம் வழிவதை பார்த்தாள்.
டீச்சர்..டீச்சர்..அங்க பாருங்க. கிஷோரின் மேலிருந்த கவனம் சிதறி எல்லாரும் இவளைப் பார்த்தார்கள்.
ப்ரேமை நோக்கி கைகாட்டியவாறே,
டீச்சர்..அங்க பாருங்க. அவன் காலில ரத்தம் வழியுது. மயக்கமாகி கொண்டிருந்த ப்ரேமுக்கும் அப்போது தான் உறைத்தது. சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டதும் ரத்தம் வழிவதும் கூட மறந்து புது பெண்ணை பற்றி யோசித்துக்கொண்டிருந்திருக்கிறான்.
மல்லிகா டீச்சர் சட்டென போய் அவனைப் பிடித்தார். கைத்தாங்கலாய் அவனைப் பிடித்தவாறே பெஞ்சில் படுக்க வைத்தார்.
டேய் கிஷோர். உடனே ஓடிப்போய் ஆயாகிட்ட நான் கேட்டேன்னு ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் வாங்கிட்டு வா..
கிஷோர் சிட்டாய் பறந்தான்.
மாணவர் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீர் எடுத்து அவன் மேல் தெளித்தார். இத்தனை களேபாரத்தையும் டீச்சர் கூடவே இருந்து கண்ணில் கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ஷில்பா. ப்ரேம் தண்ணீர் குடித்ததும் ஓரளவு தெளிவானான். கண்ணை விழித்து விழித்துப் பார்க்கையில் முதலில் தெரிந்தது அவள் உருவம் தான்.
அட..இவள் ஏன் கண் கலங்குறா? மனதுக்குள் நினைத்தவாறே எழுந்து உட்கார முயன்றான்.
இதற்கிடையில் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸோடு கிஷோர் வர அவன் காலுக்கு மருந்திட்டார் டீச்சர். பேண்ட் எய்ட் போட்டவுடன் ரத்தம் நின்றது. மற்ற மாணவர்கள் தத்தம் நண்பர்களோடு அரட்டை அடிக்க போய் விட்டனர்.
டீச்சர்! அவன் ஏதாச்சும் சாப்பிட்டானான்னு கேளுங்க. பார்க்க ரொம்ப டயர்டா தெரியறான் ஷில்பா தான்.
ப்ரேம், என்னாச்சு. காலையில ஒழுங்கா சாப்டியா?
அப்போ தான் அப்பா அம்மா ஊரிலில்லாததால சீக்கிரம் எந்திருக்க மறந்து அவசர அவசரமாய் கிளம்பி வந்ததை நினைத்துப் பார்த்தான். இதற்கிடையில் காலையில் சாப்பிட மறந்துவிட்டான். அதுவும் அடிபட்டதும் சேர்ந்து மயக்கம் வந்துவிட்டது.
இல்லையென்று தலையாட்டினான். உடனே தன் கூடையிலிருந்த டிபன் பாக்ஸை எடுத்து நீட்டினாள் ஷில்பா. அதை வாங்கி டிபன் பாக்ஸைத் திறந்தான் ப்ரேம். பார்த்தவுடன் அவன் கண்கள் விரிந்தது.
-மிச்சசொச்சம் தொடரும்
Bookmarks