மற்றொரு இரவும் கழிகிறது
மாற்றங்களின் ஊடே
எந்த மாற்றமும் இல்லாத
இன்னொரு நாளாய்..
இன்னும் கவனிபாரற்று
உன் இல்ல முகப்பில்
கழட்டிவிடப் பட்ட
காலணிகளின் ஊடே
கிடக்கிறது
என் இதய அஞ்சல்..
..
ஊரெல்லாம் சுற்றிவிட்டு
மீள வருகிற எண்ணங்கள்
உதறிவிட்டுப் போகின்றன
உன் நினைவுகளை..
..
ஒவ்வொரு நினைவுகளும்
உன் முகமூடி அணிந்து கொண்டு
என்னை எதிர்த்துப் பேசுகின்றன..
..
நீ என்னை
எவ்வளவு காயப்படுத்தினாலும்
உனக்கு சாதகமாய்தான்
பேசுகிறது
என் மனம்
என்னிடம்..
..
என்னை மட்டும் காதல்
தன் துட்ட தேவதைகளால்
ஆசீர்வதித்ததா ?
..
என் காதல்
நெருப்பு
நரக குழிகளில் இருந்து
உயிர் கொண்டதா ?
..
நீ
என் மகிழ்ச்சியா ?
கண்ணீரா ?
...
எனக்கு தெரிந்த விதத்தில்
எல்லாம் பேசிப் பார்த்துவிட்டேன்
நீ மௌனத்தை மட்டும்
தான் பேசிபோகிறாய்
..
உன்னையும் மீறி
நீ
உதிர்த்துப்போகிற சில வார்த்தைகள்
வந்து விழுகின்றன
உளியும் சுத்தியலுமாய்
என்மீது..
என் சிற்பியே
நீயே கூறு
நான்-
சிலையா ?
அம்மிக்கல்லா ?
-ஆதி
.
Bookmarks