பாகம்-1
நான் ஈடுபட்டுள்ள பணியின் தன்மையால் பல நாடுகளுக்கும் சென்று பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது.அவற்றில் ஒன்றான கஜகஸ்தான் நாட்டில் பணிபுரிய கிடைத்த வாய்ப்பு எனக்கு பலவிதமான அனுபங்களை பணியினூடே பனியுடன் கொடுத்தது.
சென்று இறங்கிய இடம் அல்மாட்டி என்றழைக்கப்படும் இந்த நாட்டின் முன்னாள் தலைநகர்.அழகு கொஞ்சும் நகரம்.சாலையோரங்களில் மின்னினைப்பை மண்டை வழியே ஏற்றிக்கொண்டு இங்குமங்கும் ஓடித்திரியும் பேருந்துகள் பார்க்கவே அழகு.நகரத்தை இரு கைகளாலும் அணைத்தமாதிரியான பனிமலை.துடைத்துவிட்டதைபோல என்று சொல்வார்களே அதை இங்கு நிஜமாகவே செய்கிறார்கள்.ஆம்...தினமும் அதிகாலையில் சாலைகளை கழுவி விடுகிறார்கள்.அங்கிருந்து என்னுடைய பணியிடம் போவதற்கான விமானம் இரண்டு நாட்களுக்குப் பிறகு என்பதால் நன்றாக சுற்றிப் பார்க்க நேரம் கிடைத்தது.நான் எங்கு போனாலும் என் அழைப்புக்காக காத்திருக்கும் என் வீட்டின் எஜமானிக்கு உடனே அழைத்து பேசுவது வழக்கம்.எனவே கையோடு கொண்டு போயிருந்த அமெரிக்க டாலர்களை அந்த நாட்டு பணமாக(டிங்கே என்பது அந்த பணத்தின் பெயர்)கொஞ்சம் மாற்றிக்கொண்டு,தங்கியிருந்த இடத்துக்கு அருகிலிருந்த தபால் நிலையத்திலிருந்த தொலைபேசி சேவையைப் பயன்படுத்தலாமென்று போனேன்.பேசி முடித்தபிறகுதான் பணம் கொடுக்க வேண்டுமென்பதால் அந்த ஆபத்தை முன்னமே அறிய முடியவில்லை.
பின்ன ஆபத்தில்லாம என்னங்க...இன்னும் கொஞ்ச நேரம் கூடுதலாய் நான் கொஞ்சியிருந்தாலும் நான் போட்டிருந்த துணியைக் கூட உருவி விட்டு அனுப்பியிருப்பார்கள்.அநியாயத்துக்கு தொலைபேசி கட்டணம்.ஒரு நிமிடத்துக்கு 3 1/2 டாலர் கட்டணம்.ஒரு டாலருக்கு 145 டிங்கே.நான் பந்தாவாக மாற்றி எடுத்துக்கொண்டு போயிருந்த 1450 டிங்கேயில் 3 நிமிடம்கூட பேச முடியாது.எப்போதோ நான் ஏதோ ஒரு தெருநாய்க்கு பொறை வாங்கிப்போட்ட புண்ணியம் இரண்டரை நிமிடத்தில் என் தொலைபேசிப் பேச்சு முடிவடைந்திருந்தது.அதனால் கௌரவத்தோடு திரும்பி வந்தேன்.அதே போலத்தான் உணவுவகைகளின் விலையும்.இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அங்கு எந்த உணவுவிடுதியிலும் தண்ணீரே வைப்பதில்லை.கேட்டால் மட்டும் விலைக்கு கொடுக்கிறார்கள்.அதுவும் CARBONATED WATER என்ற சோடாதான்.அரிசிச் சோறும் கிடைப்பது கஷ்டம்.கிடைத்தாலும் திருமனமான புதிதில் என் மனைவி வடித்துக் கொடுத்த அரைவேக்காட்டு சாதத்தை போலத்தான் கிடைக்கும்.அதற்கு குழம்பு என்ற வஸ்துவெல்லாம் எதுவுமில்லை.தொண்டை விக்குற அளவுக்கு வற வறவென்ற அந்த வெள்ளச் சாதத்தைத்தான் சாப்பிடவேண்டும்.இருப்பதிலேயே மிகக் குறந்த விலைக்குக் கிடைப்பது வோட்காதான்.நம்ம ஊர் பணத்துக்கு 60 ரூபாயில் ஒரு லிட்டர் கிடைக்கும்.அதுக்காக குடிக்கிற தண்ணீருக்கு பதிலா இதையா குடிக்க முடியும்?தண்ணீர்(சோடாதாங்க) ஒரு குப்பி 120 ரூபாய்.நல்லவேளை என்னுடைய நிறுவனமே ஒரு கார்ட்டன் மினரல் வாட்டர் கொடுத்தார்கள். பிழைத்தேன்.
அங்கு இருந்த இரண்டு நாளும் ஆசைதீர அலைந்து திரிந்து அநேக இடங்களைப் பார்த்தேன்.எங்கு பார்த்தாலும் பெண்கள்.எல்லா வேலையிலும் பெண்கள்.ஏன் ஆண்களே இல்லையா என்றால்...இருக்கிறார்கள்...ஆனால் பெண்களைவிட குறைந்த சதவிகிதத்தில்.அவர்களும் எந்த நேரத்திலும் மப்பும் மந்தாரமுமாகவே அலைகிறார்கள்.பெண்கள் கடும் உழைப்பாளிகள்.நம்ம ஊர் கதாநாயகிகளெல்லாம் கறுப்பு என்று சொல்லும்படியான அப்படி ஒரு நிறம்.மஞ்சள் கலந்த,சிவப்பு சேர்ந்த வெள்ளை.முகம்தான் மங்கோலிய முகங்கள்.அதன் கதையை பிறகு சொல்கிறேன்.நம்ம ஊரில் மூலைக்கு மூலை பெட்டிக்கடை இருப்பதைப் போல அங்கே பியர் கடைகள் இருக்கின்றன.வித்தியாசமான முறையில் அமைந்த அந்த கடைகள் ஒரு ஆச்சர்யம்.பூமியில் குழி தோண்டி மரத்தாலான பெரிய சைஸ் பீப்பாயை அதில் புதைத்து வைத்திருக்கிறார்கள்.அதனுள் பியரை ஊற்றி வைத்து..மேலே ஒரு மோட்டாரை வைத்து அதில் குழாய் இணைத்து ஈரத்துணி சுற்றி வைத்திருக்கிறார்கள்.கேட்பவர்களுக்கு ஒரு பெரிய MUG-ல் பிடித்துக் கொடுக்கிறார்கள்.அங்கேயும் விற்பனையாளர் பெண்தான்.
இரண்டு நாள் ஊர் சுற்றலுக்குப் பிறகு பணியிடத்துக்குப் போவதற்காக விமானநிலையம் போனேன்.டிக்கெட்டைக் கொடுத்து போர்டிங்க் பாஸ் கேட்டதற்கு ரஷ்யன் மொழியில் என்னவோ கதைத்தார் அந்த பேரிளம்பெண்.பக்கதிலிருந்தவர் கஷ்டப்பட்டு மொழிபெயர்த்தார்.போர்டிங் பாஸெல்லாம் கிடையாது.விமானத்துக்குள் சென்று விருப்பப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம்.விமானத்துக்குள் செல்வதற்கான அறிவிப்பு வந்ததும் டவுன் பஸ்ஸில் இருக்கைக்கு அடித்துக்கொள்வதைப் போல அனைவரும் ஓடியதைப் பார்க்கும்போது நாம் போவது நிஜமாகவே விமானம்தானா என்ற சந்தேகம் எழுந்தது.ஆனால் நான் பயணம் செய்யப் போகும் அந்த விமானத்தைப் பார்த்ததும் சந்தேகம் போய் பயம் வந்து விட்டது.
தொடரும்
Bookmarks