இந்தா பாத்தீகளா....இந்த மஞ்சனத்தி மரம். இதுக்குப் பின்னால நெறைய கதைக இருக்குல்ல. கொஞ்ச நஞ்சமா? எங்க தாத்தா சின்னப்பிள்ளைல இருந்து இருக்காம். அவருஞ் சரி எங்கப்பாவுஞ் சரி..இந்த மரத்துல ஏறித்தாம் வெளையாடுவாகளாம். கலியாணம் ஆனவுட்டுத்தான் ரெண்டு பேருமே ஊர்ப்பேச்சுக்குப் பயந்து ஏறாம இருந்திருக்காக.
எங்க பாட்டி கெடா வளத்தாகளாம். அந்தக் கெடாயெல்லாம் இதே மஞ்சனத்தி மரத்துலதான் கெட்டி வெப்பாகளாம். அகத்திக் கொப்புகள வெட்டியாந்து கொச்சக்கயிறு வெச்சி மரத்துல கெட்டி வெச்சிருவாகளாம். ஆடுக அப்படியே கடிச்சிக்கிட்டும் அச போட்டுக்கிட்டுமிருக்குமாம். கருவேலக் காய்களும் பறிச்சிப் போடுவாகளாம் கெடாக்களுக்கு.
இருந்தாலும் பழுத்து விழுகுற மஞ்சனத்திப் பழத்துக்கு ஆடுக அடிச்சிக்கிருமாம். கொம்பக் கொண்டு முட்டிக்கிட்டு பழத்துக்குச் சண்ட போடுறதப் பாத்து எங்கப்பா குதிப்பாருன்னு பாட்டி சொல்லீருக்காக. ஆனாலும் ஊர்ப்பிள்ளைக வந்து பழத்தப் பெறக்கீருவாகளாம். அப்பிடிப் பெறக்கியும் பெறக்க மாட்டாம எக்கச்சக்கமா பழங்க உதுந்து கெடக்கும்னு எங்கம்மா சொல்லுவாக.
கலியாணமாகி வந்தப்ப பழம் பெறக்க வந்த பிள்ளைகள வெரட்டுவாகளாம். ஆனா நெறைய கெடக்கக் கண்டு அப்புறமா சும்மா விட்டாகளாம். எனக்கு மஞ்சனத்திப் பழம் பிடிக்காது. கருப்பாயிருக்கும். வீச்சமடிக்கும். நசிக்கிப்புட்டம்னா பிசுபிசுன்னு இருக்கும். எப்படித்தான் திங்காகளோ சாமி.
சாமிங்கவுந்தான் நெனவுக்கு வருது. ஏனோ எதுக்கோ தெரியாது....காதோல கருகமணி வாங்கி பொங்கலுக்குக் கட்டுவாக பாட்டி. ஏன்னு கேட்டா சின்னப்பிள்ளைக அதெல்லாம் கேக்கக்கூடாதுன்னு வெரட்டுவாக. ஆனா பொங்கலுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா முந்திரிக்கொத்து அதுரசம் சுசியமெல்லாம் அப்பத்தான கெடைக்கும். மரத்தடில பாவாடைல வெச்சிக்கிட்டுத் திம்பேன். மரத்தடியில உக்காந்து திங்காதடின்னு வஞ்சாலும் கேப்பமா?
மரத்துல அப்பப்ப கொப்பு ஒடிச்சி காய வெச்சிருப்பாக பாட்டி. பொங்க வெக்கிறப்போ அதுல ஒரு கொப்பு வெச்சித்தான் அடுப்பு பத்த வெக்கிறது. தைப்பொங்கலு மட்டுமில்ல. ஐயனாரு கோயிலுக்குக் கெடா வெட்டுனாலுஞ் சரி...காச்சக்கார அம்மனுக்கு காச்சலுக்கு நேந்துக்கிட்டு பொங்க வெச்சாலும் சரி...மஞ்சனத்திக் கொப்பில்லாம பொங்க பொங்கனதேயில்லை. அதுனாலதான்...ஊர்ப்பிள்ளைக பழம் பெறக்க விட்டாலும் கொப்பொடிக்க விட மாட்டாக வீட்டுல. தப்பித் தவறி யாராச்சும் கெளையக் கிளைய ஒடிச்சிப்புட்டாக....ஒரு வருசத்துக்கு அந்த வழிய போயிக்கிற முடியாது. பாட்டி வசவு வஞ்சே அவுகள அசிங்கப்படுத்தீரும்.
மஞ்சனத்திக் கட்டைய வெட்டுனா மஞ்சமஞ்சேர்னு இருக்கும். அதுக்குத்தான் மஞ்சனத்தின்னு பேரு வெச்சாகளாம். நானும் கொப்பு ஒடிச்சிப் பாத்துருக்கேன். பாட்டிக்குத் தெரியாமத்தான். உள்ள மஞ்சளத்தான் இருந்துச்சு. அத வெச்சி மஞ்சப் பூசுனா என்னன்னு அம்மீல ஒரசி மூஞ்சீல பூசீருக்கேன். ஹா ஹா ஹா...அடி விழாத கொறதான். மஞ்சளுன்னா என்ன மஞ்சனத்தின்னா என்ன? மஞ்சப் பிடிச்சா சரிதான?
இப்பிடித்தான் ஒருவாட்டி கயிட்டம் வந்துருச்சின்னு மரத்த வெட்டிப்புடலாம்னு சொன்னாராம் தாத்தா. அப்பாவும் பாட்டியும் குறுக்க விழுந்து தடுத்தாகளாம். அப்படி வெட்டித் திங்கனும்னு தேவையில்லைன்னு முடிவெடுத்தாகளாம். அப்புறந்தான் அப்பா வெவசாயத்தோட நிக்காம வெளிவேலைக்கும் போகத் தொடங்குனாரு. அப்புறந்தான் அவருக்குக் கலியாணம்...நாம் பொறந்தது..எல்லாமே.
இப்பல்லாம் ஊருல வெவசாயங் கொறஞ்சு போச்சு. மழையே சரியா இல்லியே. மஞ்சனத்தி மரத்துல பாதிக்கு மேல மொட்டையா நிக்கி. அப்புறம் எங்குட்டுப் பழம் பழுக்க. மொத்த மரத்தயே உலுப்புனாலும் பிஞ்சா மொக்கா ரெண்டு மூனு விழும். முந்தி கணக்கா விழுறதுக்குப் பழமும் இல்ல. பழுத்து விழுந்தாலும் பெறக்க ஊர்ப்பிள்ளைக வர்ரதுமில்லை. நாகலாபொரத்துல கான்வெண்ட்டு இருக்குல்ல. வேன்ல ஏறிப் பாதிப்பிள்ளைக போயிருது. உள்ளூர் பள்ளிக்கூடத்துக்குப் பாதிப் பிள்ளைக போயிருது. மிச்சம்மீதி இருக்குறதுக தீப்பெட்டி ஒட்டப் போயிருதுக. இதுல எங்க பழம் பெறக்க?
ஆடுங் கெட்டுறதில்லை. பாட்டிதான் இல்லையே. அம்மாவுக்கு ஆடு பாக்குறது பட்டிக்கி விடுறது..கறிக்கி விக்குறதுல பழக்கமில்லை. அதுனால அதுவும் நின்னு போச்சு. சாமி கும்புடுறதுன்னா இப்பல்லாம் கோயிலுதான....கன்னத்துல போட்டுக்கிட்டு துந்நூரு வாங்கிப் பூசிக்கிறது. அம்புட்டுதான். காதோலையாவது கருகமணியாவது.
அப்பாக்கு இப்பல்லாம் ஒடம்புக்கு ரொம்ப முடியலை. பொழுதன்னைக்கும் வீடுதான். திண்ணதான். அம்மா பொங்கிப் போடுறத தின்னுட்டு கெடக்காரு. வயசாச்சுல்ல. திண்ணைல படுத்தாலும் சொவத்தப் பாத்துதான் திரும்பிப் படுப்பாரு. மூஞ்சீல காத்தடிச்சிரக்கூடாதாம். அவரு கயிட்டம் அவருக்கு.
இந்தா...இப்பிடித்தான் அம்மா அப்பப்ப வெளிய போகைல வரைல மரத்தப் பாப்பாக. அவ்வளவுதான். தாவுண்டு தாம் வேலையுண்டுன்னு போயிருவாக. இன்னைக்கென்னவோ கூடக் கொஞ்ச நேரம் மரத்தப் பாக்காக.
என்னம்மா...மஞ்சனத்தி மரத்த அப்படிப் பாக்க? நாந்தான் சொன்னேன்ல.....எம் பேச்ச நீ கேக்கவேயில்லையே. மாமாவோடத்தான கலியாணம் வேண்டாம்னேன். சின்னப்புள்ள ஒனக்கென்ன தெரியும்னு வாய மூடீட்டியே. ஒரு வார்த்த கேட்டிருந்தா இப்பிடி மரத்தப் பாக்க வேண்டியிருக்காதுல்ல. ம்ம்ம்ம். ஏம்மா?
அன்புடன்,
கோ.இராகவன்
Bookmarks