பாரத விலாசில் பூ...!!
தலைப்பு வித்தியாசமா இருக்கு தானே...!! ஆமாம்.. பாரத விலாஸ் படத்தை யாருமே மறந்திருக்க மாட்டீங்க..!
பல தரப்பட்ட மாநில மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் ஒரு படம். இதில் பூவுக்கு எங்கே வேலை இருக்குன்னு தானே கேக்குறீங்க??
அதைச் சொல்லத்தான் இந்த பதிவு.
பூவின் இப்போதைய பாகுபாடற்ற சகோதரத்துவத்தையும், அன்பையும் பார்க்கும் பலருக்கும் ஆச்சர்யம் வந்திருக்கும். அதற்கான அடித்தளம் ஏற்பட்டது அன்றைய என் வளர் பருவத்து சூழல் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒவ்வொரு குழந்தையின் எண்ணவோட்டமும், திறமையும் அந்தக் குழந்தை வளரும் சூழலையும் பொறுத்தது என்று சொல்வாங்க.
அந்த மாதிரி ஒரு அன்பான சூழலில் வளர்ந்தது தான் நான் செய்த பாக்கியம்.
நான் பிறந்து ஒரு 4 வயது வரை ஒரு ரூமில் கால் பங்கு தடுத்து சமையல் அறையாய் ஆகிய ஒரு ஒண்டிக்குடித்தனத்தில் தான் வளர்ந்தேன். பின்பு, வாடகை ஏற்றத்தால் அதே வீதியில் ஒரு மூன்று அறைகள் இருக்கும் வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். (அதில் இரு அறைகளைச் சேர்த்தால் ஒரு அறை அளவு தான் வரும்). ஆயினும், அப்போது அதுவே அரண்மனை தான். அது 5 வீடுகள் தொகுப்பாய் கொண்ட ஒரு காம்பவுண்ட் வீடு. என் வீடு இருந்த வரிசையில் என் வீடோடு சேர்த்து இரு வீடுகள்.
எதிர்புறம்.. எங்க நான்கு வீடுகளுக்கும் உரிமையாளர் அதாவது ஓனர். அவர் வீடு ஒட்டி இரு வீடுகள். மொத்தத்தில் 5 வீடுகள். இரு வீடுகள் எதிரில் 3 வீடுகள்.
என் வீட்டுக்கு ஒட்டிய வீட்டில் ஒரு வயதான பாட்டி தாத்தா.. தெலுங்கு பேசுபவர்கள். நாரயணாவையே சதா துதிப்பவர்கள். இந்த பாட்டி தைத்துக் கொடுத்து சம்பாதித்துக் கொண்டிருந்தார். தாத்தாவுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு சின்ன வேலை. இருவரும் அன்யோன்ய தம்பதிகள். இவர்களை எப்பவுமே "தையல் பாட்டி" என்று தான் சொல்வோம். இன்று வரை இந்த பாட்டியின் நிஜப்பேயர்
தெரியாது.
அப்புறம், எங்க வீட்டுக்கு நேரெதிரில் இருக்கும் வீட்டு உரிமையாளர் வீடு. எங்க இருவரின் கதவுகளையும் திறந்து அவங்க வீட்டிலிருந்து கடைசி அறையிலிருந்து பார்த்தால் எங்க வீட்டின் சமையல் அறை கடைசி வரை தெரியும். அவ்வளோ நேராக எதிரில் அமைந்த வீடு.
இவங்க கேரளாவிலிந்து வெகு நாட்கள் முன் வந்த மலையாளர்கள். அன்பான உள்ளங்கள். வீட்டுக்கார அக்காவினை நான் இன்று வரை "சேச்சிக்கா" என்று தான் அழைப்பேன்.
அவர்களின் வீட்டுக்கு ஒட்டிய வீடு எங்கள் போலவே ஒரு தமிழர் வீடு. அவர்கள் வீடு ஒட்டிய வீட்டில் ஒரு பேங்க் ஆபிசர் இருக்கும் தெலுங்கு பேசும் குடும்பத்தினர் வீடு.
5 வீட்டு கணக்கும் கூட்டிக் கழிச்சி சரியா வந்திருக்கா பாருங்க??
அடுத்து எங்க தொகுப்பு வீட்டுக்கு அருகிலேயே அமைந்திருந்தது இன்னொரு மூன்று வீடுகள். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் எந்த சுவர் இடைவெளியும் இல்லை. பிரதான கதவுகள் மட்டுமே தனித்தனியாய்..
அதில் முதல் வீட்டில் தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர். அந்த அற்புதமான தமிழ் மணத்துடன் அன்பான நபர்கள். அவர்களுக்கு ஒட்டிய வீட்டில் ஒரு 50 வயது நெருங்கும் வயோதிக கிருத்துவ தம்பதிகள். இவர்கள் குடிவருகையில் ஒளிந்து பார்த்து பின் மெல்ல மெல்ல பம்மிச் சென்று "பாட்டி" என்று அழைக்க, அவங்க தன்னை "மம்மி" என்று அழைக்கச் சொல்ல, இன்று வரை அன்பினால் பிணைந்து விட்டு நீங்காத அந்த தம்பதிகள் மம்மி-டாடி என்றே மனத்தில் நிலைத்துவிட்டனர்.
அடுத்து, அவர்களின் அருகில் இருக்கும் வீட்டில் எங்க வீதியில் மளிகைக் கடை வைத்து ஓஹோ என்று வியாபாரம் செய்த ஒரு புதுமண இஸ்லாமிய தம்பதிகள். செல்லமாய் இவர்கள் குடும்பத்தை "பாய்" வீடு என்றும் இவர் கடையை "பாய் கடை" என்றுமே அழைப்போம்.
இவ்வாறு மொழி, மதம் வேறுபாடுடைய வித்தியாசங்கள் நிறைந்த மனிதர்களோடு தான் என் வாழ்வின் மிக நீண்ட இடைவெளியாக 14 வருடங்கள் கூட்டுப்புழுவான நான் பட்டாம்பூச்சியாய் வளர்ச்சிதைமாற்றம் பெற அன்யோன்யமாய் தாய்-பிள்ளை போல வளர்ந்தேன் என்று சொன்னால் நம்புவீர்களா??
இதனால், இந்த குடியிருப்பை செல்லமாய் நான் "பாரத விலாஸ்" என்று அழைப்பதில் பிழையும் உண்டோ...??!!
Bookmarks