புலர்ந்தும் புலராத காலைவேளை. மணியஞ்சாகிவிட்டது என்று கோயில்மணி அடித்துச்சொல்ல பதறி அடித்து எழுந்தாள் சரசு. குளிருக்கு இதமாக மண்தரையில் படுத்திருந்ததாலோ என்னவோ கிழிந்த சேலை அவளை விட்டு விலகி இருந்தது. அதைச் சரிசெய்து விட்டு குலைந்திருந்த தலையை சரிசெய்துகொண்டு வெளியே வந்தாள். பக்கத்துக் குடிசைத்திண்ணையில் பாக்குவெத்தலை இடித்துக்கொண்டிருந்த பங்கசக்கிழவிக்கு பாசத்துடன் புன்னகையை பரிசாக்கிவிட்டு, வழக்கமான வேலைகள்எல்லாவற்றையும் முடித்து விட்டு வீட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.ஊர்ப்பெரியவீட்டின் படலை பழுதாகாவண்ணம் பாதையில் விரிசல் ஏற்படுத்தி வளவுக்குள் நுழைய, வாலைக் குழைத்து குழைவுடன் வரவேற்றது கறுப்பு நாய். மெல்லப்பிடரியில் தடவி செல்லம் கொஞ்சும்போது கனைப்புச் சத்தத்துடன் எஜமானி. சாயம் போன வார்த்தைகளை விசிறி அடித்தாள்..
"பழையசோறு தின்றாலும் கொழுப்புக் கூடிட்டுது உனக்கு. வேலைக்கு வரும் நேரமிதுவாடி?".
பழங்கஞ்சி மிளகாய் பழகிப்போனதால், சேலையை தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு, மலைபோலக் குவிந்திருக்கும் பாத்திரங்கழுவும் வேலையை தொடங்கினாள். சற்று நேரத்திற்கெல்லாம், யாரோ அவளை பார்ப்பதாக உள்ளுணர்வு சொன்னது.சுற்று முற்றும் பார்த்தாள். யாருமில்லை என்று தெளிந்தாள்.
"இந்தாடி... இந்த உடுபுடைவைகளை நல்லா கசக்கித் துவைத்துபோடு. எப்பதான் அழுக்கில்லாமல் துவைக்கப்போறாயோ சனியனே.. எனக்கு மட்டும் எங்கிருந்து வந்து சேருகின்றீர்களோ" யானைப்பிளிறலுடன் மறைந்தாள் எஜமானி.
பாத்திரம் தேய்க்கும் சத்தத்தையும் மீறி யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. அவளையே பார்த்துக்கொண்டிருந்த நாயைப் பார்த்துப் புன்னகைத்தாள். கைவேலையை கவனித்தது.
கிணற்றடித் தொட்டியில் நீர் மொண்டு நிரப்பிவிட்டு உடுப்புகளை ஈரமாக்கி, சவர்க்காரம் போட்டு, தன் பெண்டாகி தன் பெண்டைத் தானே கழற்றிக்கொண்டு இருக்கும்போது, "இன்னும் துவைக்கலையா.. சனியனே.. சனியனே.. திண்டு திண்டு திரண்டு போயிருக்கிறாயே தவிர வேலையை வாகாச்செய்ய திராணி இல்லை. மாட்டுக்கொட்டகையை எப்பவடி சுத்தம் செய்யப்போறாய்" வெடித்தமடி மலைபோல ஆடி அசைந்து எசமானி செல்ல சருகுகள் அழுத சத்தம் கேட்டது. ம்மா என்று மாடுகள் அழைத்த சத்தம் அதனுடன் கலந்தது...
உச்சிவெயில் மண்டையைப் பிளக்க, கோமாதாக்கள் இருப்பிடத்தை கோயிலாக்கிவிட்டு, அவைகளுக்கு தண்ணி காட்டிவிட்டு தந்தாகம் தணிக்க துணிந்தவளை நெட்டித்தள்ளியது இடிக்குரல்.. "வேலை செய்து கிழித்த கிழிப்பிலை தண்ணி கேட்குதோ மகாராணிக்கு.... அப்படியே இதையும் தின்னு" பழைய பாத்திரத்தில் இருந்த பழஞ்சோறை தண்ணியில் கலந்துகுடிக்க பரிசாகபுரை ஏறியது..தன்னையும் யாரோ நினைக்கின்றார்கள் என்ற மகிழ்வுடன் குடித்துவிட்டு வீட்டுக் கொல்லப்புறக்கதவால் உள்நுழைந்து வீட்டைப் பெருக்கினாள்.. ஒருவாறு கட்டளைகளை நிறைவேற்றி அடிமாட்டுக்கூலியைப் பெற்றுக்கொண்டு அவள் குடிசைக்கு போகும்போது நேரம் மூன்று ஆகிவிட்டது...
குடிசை தனிமையாக வெயிலில் காய்ந்து கொண்டிருக்க, காலையில் அவள் ஆக்கி வைத்த சுடுசோறு ஆறிப்போய் இருந்தது.. பதைக்கும் மனதுடன் பாயைப் பார்க்க அது நின்ற நிலையில் இருந்தது.. வெளியே ஓடி எங்கும் தேடிக் களைத்து வந்தவளுக்கு பக்கத்துக் குடிசை பங்கசம் சேதி சொன்னாள்..
"ஏண்டி சரசு.. முந்தா நேத்து கூட்டியாந்தியே ஒருத்தி..யாருடி அவ... காலங்காத்தலா வேலைக்குப் போன உன்பின்னால போனாள்...கொஞ்ச நேரத்துக்குமுன்ன வந்தாள். உனக்கு பாரமா இருக்க வருமபல். அதனால போறேன்னு உங்கிட்ட சொல்லச்சொல்லிட்டு போயிட்டா..."
அதைக் கேட்டதும், யாருமற்ற தனக்கு, யாருமற்ற அவளை துணையாக ஆண்டவன் அனுப்பினானென சற்றுமுன் வரை புளகாங்கிதப்பட்ட சரசு, பாதரசப் பீப்பாவை நெஞ்சில் வைத்தது போல குடிசையின் திண்ணையில் சாய்ந்தாள்..
Bookmarks