\"டே பார்த்தி....அந்த லாடு லபக்குதாஸு(கொஞ்சம் பந்தா பார்ட்டி) எங்கடா இன்னும் காணோம்\" கணேஷின் கேள்விக்கு,
\"அவனா..... சாரு ஜமாவுல சேர்றதுக்கு இன்னிக்கு கொஞ்சம் லேட்டாகுமாம்....காலையில போன் பண்ணியிருந்தான்\" ஷாகுல் பதில் சொன்னான்.
\"ஏன் 9 மணிக்கு பில் கேட்ஸோட மீட்டிங் இருக்காமா...?\"
\"இல்லடா....அவங்கப்பா என்னமோ வேலை குடுத்திருக்காராம்,அத முடிச்சிட்டு வர்றதுக்கு நேரமாகுன்னு சொன்னான்\"
\"இதப் பார்றா...புள்ள அப்பன் பேச்சையெல்லாம் கேக்க ஆரம்பிச்சிடிச்சா....\"கணேஷ் நக்கலாக சொல்லி முடித்ததும் அந்த ஜமாவே சேர்ந்து ஒரு ஓ......ஹோ....போட்டார்கள்.
\"மச்சி....அப்டியே தலையை திருப்பாம நைஸா உன்னோட லெஃப்ட்ல பாரேன்\"சொண்டி என்கிற சுந்தரேசன் சொன்னதும் ஷாகுல் அப்படியே செய்தான்.
\"அட நம்ம மின்னலு....கூட யார்றா அது வடிவேலு...?\"
\"அய்யா மின்னலோட மாமாவாம்...துபாய் ரிட்டர்ன்...\'இன்று ஒரு தகவலாக தந்தது செழியன்,சுருக்கமாக செல்லு(அப்பா தமிழ் வாத்தியார்).
அது ஒரு பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் இருக்கும் டீக்கடை+பெட்டிக்கடை.இந்த குரூப்....ஆமாம்...நீங்கள் நினைப்பது சரிதான்.காலை முதல் மாலைவரை அந்த இடத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு பொகிறவர்கள் வருகிறவர்களையெல்லாம் கலாய்க்கும் இளைஞர்கள்.
இதில் கணேஷ்,செழியன்,ஷாகுல்,ரேமண்ட் ராஜா,பார்த்தி எல்லோரும் பட்டதாரிகள்.மும்முரமாக இல்லையென்றாலும்,தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள்.சொண்டி என்கிற சுந்தரேசன் வட்டிக்கடைக்காரரின் இரண்டாவது மகன்.
\"டே லபக்குதாஸு வர்றாண்டா\" சத்தமாக செல்லு சொன்னதும் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
\"வாடா பரமேசு,என்னா காலங்காத்தால மொளகாப்பொடி அரைக்கப் போய்ட்டியா\"ஷாகுல்.
\"அட போங்கடா,நேத்து எங்கப்பா வண்டி வழியில மக்கர் பண்ணியிருக்கு,அதை ஃபிரெண்ட் வீட்ல விட்டுட்டு அவரு வண்டியை வாங்கிட்டு வந்திருக்காரு.அதான் காலங்காத்தால அவர் வேலைக்கு போறதுக்குள்ள என்னை போய் குடுத்துட்டு வரச் சொன்னார்.வண்டியை விட்டுட்டு,லொங்கு லொங்குன்னு அங்கருந்து நடந்து வரேன்\"
\"அது ஒண்ணும் இல்ல மச்சி....இந்த பண்ணாடைக்கு தொப்பை வுய்ந்திடிச்சி,அத அவங்கப்பா கவனிச்சிருப்பாரு....இதான் சோம்பேறியாச்சே தானா நடக்காதுன்னு தெரிஞ்சிக்கிட்டு காலையிலேயே வாக்கிங் போக வெச்சிருக்காரு...கில்லாடிடா..உங்கப்பா\"ரேமெண்ட் அடித்த கமெண்ட்டுக்கு பரமேசு அவனைத் துரத்தினான்.
\"டம்....ச்சடார்...\"
சத்தத்தைக் கேட்டு எல்லோரும் திரும்பிப்பார்க்க....சாலையில் சிறிது தூரத்தில் ஒரு ட்டூவீலர் விழுந்திருந்தது.
ஒரு அவசரத்தோடு அனைவரும் அங்கே ஓடினார்கள்.அதற்குள் கொஞ்சம் பேர் கூடிவிட்டார்கள்.அவர்களை விலக்கிப் பார்த்த கணேஷ் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் சங்கடப்பட்டான்.புதிதாகத் திருமணம் ஆனவர்கள் என்பது மஞ்சள் மினுக்கு மாறாத தாலியிலும்,அவள் அணிந்திருந்த நகைகளிலும் தெரிந்தது.பக்கத்தில் அவள் கணவன் சுய நினைவற்றுக் கிடந்தான்.அந்தப் பெண்ணின் முந்தானை சக்கரத்தில் சிக்கிக்கொண்டு ...அவளை விட்டு விலகியிருந்தது.கைகளை X குறியாக்கி தற்காலிகமாக தன் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டிருந்தாள்.அந்த முகத்தில் பயமும் அழுகையும் அப்பட்டமாகத் தெரிந்தது.அருகில் இருக்கும் கணவனைக் காப்பாற்றவேண்டும் என்றாலும் புடவையை துறக்க வேண்டி வரும்.அதைச் செய்ய இயலாத பரிதாபத்திலிருந்தாள்.கணேஷ் கூடியிருந்தவர்களை கோபமாகப் பார்த்துவிட்டு,உடனே தன் ஜெர்க்கினை எடுத்து \"சிஸ்டர் இந்தாங்க இதைப் போட்டுக்குங்க...கவலைப் படாதீங்க நாங்க இருக்கோம்\"என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு..அவள் தயக்கத்துடன் அந்த ஜெர்க்கினை வாங்கி அணிந்து கொண்டதும் அவசரமாய் சேலையை முந்தானை வரைக் கிழித்து அவளுக்கு விடுதலைக் கொடுத்தான்.
அதற்குள் மற்ற நன்பர்கள் அவள் கணவனை சோதித்தார்கள்.
\"மச்சி தலையில பலமா அடிப் பட்டிருக்குடா..சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கொண்டு போகனும்...ஆட்டோவை கூப்புடுடா என்று ஷாகுல் அலறினான்.பரமேசு உடனே வெளியேறினான்.அந்தப் பெண் நடுங்கிக்கொண்டிருந்தாள்.
ஆட்டோ வந்ததும் ஆளுக்கொரு பக்கமாய் அடிபட்டவனைத் தூக்கி, ஆட்டோவில் முதலில் செல்லு அமர்ந்துகொள்ள ஷாகுலும்,பரமேசும் அவனை ஆட்டோவுக்குள் நுழைத்தார்கள்.
\"சிஸ்டர் நீங்க உக்காந்துக்குங்க பக்கத்துலதான் ஹாஸ்பிட்டல் சீக்கிரம் போயிடலாம்.கவலைப் படாதீங்க அவருக்கு ஒண்ணும் ஆகாது\" சொலிவிட்டு..\"டே மாப்ள சிக்கிரமா ARK க்கு கொண்டு போங்கடா...நாங்க பின்னாலேயே வறோம்.\" என்று ஷாகுலிடமும்,பரமேசுவிடமும் சொல்லிவிட்டு மற்றவர்களுடன் வேகமாக தங்கள் கலாய்ப்பு இடத்துக்குத் திரும்பினான் கணேஷ்.நிறுத்தியிருந்த பைக்குகளில் மருத்துவமணை நோக்கி பறந்தார்கள்
கொஞ்ச நேரத்தில் மருத்துவமணையில் இருந்தார்கள்.உடனடியாக அவசர முதலுதவிப் பிரிவில் அவரை சேர்த்தார்கள்.
\"சிஸ்டர் உங்க வீட்லருந்து யாரையாவது கூப்பிடனுமா...இந்தாங்க இந்த செல்-லருந்து கூப்பிடுங்க\" என்று அந்தப் பெண்ணிடம் தன் செல்போனை கொடுத்தான் கணேஷ்.
கையில் போனை வாங்கிய அந்தப் பெண் சிறிதுநேரம் எந்த எண்ணும் நினைவுக்கு வராமல் தயங்கிவிட்டு பின் அழுத்தினாள்.
உள்ளேயிருந்து அவசரமாய் வந்த நர்ஸ் \'அவருக்கு தலையில நல்ல அடி பட்டிருக்கு..ப்ளட் தேவைப்படும்\" என்றதும்,
\"நாங்க ஆறு பேர் இருக்கோம் சீக்கிரமா எந்த குரூப்புன்னு சொல்லுங்க யாராவது ஒருத்தர் ரெண்டு பேரோடது மேட்ச் ஆகும்....ப்ளட்டைப் பத்திக் கவலையில்லை....அவருக்கு சீரியஸா ஒண்ணுமில்லையே...\"ரேமெண்ட் ராஜாவின் கேள்விக்கு
\"ஸ்கேனுக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க..அதுக்கப்புறந்தான் எதுவும் சொல்ல முடியும். ஹெட் இஞ்சூரிங்கறதால இப்ப ஒண்ணும் சொல்ல முடியாது\"நர்ஸின் பதிலைக் கேட்டு அந்தப் பெண்ணின் கண்களில் குபுக்கென கண்ணீர் எட்டிப் பார்த்தது.
அதைக் கவனித்த சுந்தரேசன்\"சிஸ்டர் நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க...ஒண்ணும் ஆகாது.எல்லாம் சரியாயிடும்..நாங்க இருக்கமில்ல\"என்றதும் அந்தப் பெண் அவர்களைப் பார்த்து கைகூப்பினாள்.எல்லோருக்கும் கண்கள் கலங்கிவிட்டது.
ஏறக்குறைய ஆறு மணி நேரத்துக்குப் பிறகு,ரத்தம் எடுக்கப்பட்டு,கொடுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர் சொல்லும்வரை அங்கிருந்து விட்டு அந்தப் பெண்ணுக்கும்,அவள் வீட்டிலிருந்து வந்திருந்தவர்களிடமும் சொல்லிவிட்டு திரும்பினார்கள்.
அடுத்தநாள் காலை ஒன்பது மணி.அதே டீக்கடை+பெட்டிக்கடை.
\"மச்சி அங்கப் பார்றா மின்னலு வேற ஒரு ஆளு கூட வர்றா...இது யாரு சிங்கப்பூரு மாமனா...?\"
கூட்டமாக \"ஓ....ஹோ\" சத்தம் கேட்டது.
அவர்கள் அப்படித்தான்.
Bookmarks