திருச்சிற்றம்பலம்

1 ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்
சோதியை யாம்படக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே ! வளருதியோ ? வன்செவியோ நின்செவிதான் ?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே ! என்னே !
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய் !

ஒளிபொருந்திய அகன்ற கண்களையுடைய பெண்ணே!தோற்றமும் இறுதியும் இல்லாதவன் சிவ பெருமான்;அரிய பேரொளியயானவன். அவனைப் பாடுகின்றோம்;அந்தப் பாடலைக் கேட்டபின்னும் நீ உறங்குகின்றாயோ?உன் செவி என்ன, கேளாதவன் செவியா?தேவதேவனை, கழலணிந்த அவன் திருவடிகளை நாங்கள் வாழ்த்துகின்ற ஒலி வீதியெல்லாம் நிறைந்தது. இதைக் கேட்ட ஒருத்தி பக்தி மேலீட்டால் விம்மி விம்மி மெய்ம்மறந்தாள்;மலர்ப் படுக்கையிலிருந்து புரண்டு விழுந்தாள்;எதற்கும் பயன்படாதவள். போல் நினைவற்றுக் கிடக்கிறாள்!அவள் அல்லவா இறைவனிடம் அன்புடையவள்!எங்கள் தோழியாகிய நீயோ உறங்குகின்றாய். என்னே உன் தன்மை!