"அத்தை பசிக்குது..."
என்ற பூரணியின் குரல் கேட்டு தூணில் சாய்ந்திருந்த வேணி, ,கன்னத்தில்
வழிந்த கண்ணிருடன்,கண்களை திறந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அம்மா,அண்ணன்,மதினி எல்லோரும் அவரவர் இருந்த இடத்திலேயே
படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
வாரிச் சுருட்டி எழுந்தவள்,இதோ ஒரு நிமிடம் என்றவள் வேகமாக அடுப்பாங்கடைக்குள் நுழைந்தாள்.பூசனம் பூத்த குழம்பும்,கெட்டுப் போன சோறும்,பொரியலும் வாடை உள்ளே நுழையும் போதே குமட்டியது.நாலைந்து
நாளாக துடைக்காம கொள்ளாம இல்லாமல்,அடுப்பு காய்ந்து போய் வறவற என்றிருந்தது.அலமாரியில் டப்பா ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள்.ஒரு டப்பாவில் ரவை இருந்தது.
ஒரு அடுப்பில் தண்ணிரைக் கொதிக்க வைத்தாள்.மற்றொரு அடுப்பில்
இரும்புச் சட்டியில் ரவையைக் கொட்டி வறுத்தாள்.அதே அடுப்பில் கடுகு,உளுத்தம் பருப்பு,வெங்காயம் எல்லாவற்றையும் போட்டு தாளித்தாள்.கொதித்த தண்ணீரை தாளித்தவற்றில் ஊற்றி ரவையை போட்டு
கிண்டி, இறக்கி, வட்டிலில் உப்புமாவைப் போட்டு ஃபேனடியில் ஆறவைத்தாள்.
"பூரணி அத்தை வாயில தரவா"
"இல்லை அத்தை நானே சாப்பிட்டுக்கிறேன்"
சரி சாப்பிடு என்று கூறிய வேணி, அடுப்பாங்கடைக்குள் சென்று கெட்டுப் போன சோறுக் குழம்பு எல்லாவற்றையும்,கொல்லையில் உரக்குழியில் கொண்டு போய் கொட்டி,சாமானைக் கழுவப் போட்டாள்.
மாட்டுக்காடியில் மாடு தாகத்தால் கத்தும் குரல் கேட்டு,மாட்டிற்கு தண்ணீர் காட்டினாள்.நாலைந்து நாளாக கழுவாத மாட்டுக்காடி அவளது கவனத்தை ஈர்த்தது.குழாயில் ட்யூப்பை மாட்டி அந்த இடத்தை நன்றாக கழுவினாள்.பாவம் மதினி வயித்துப் பிள்ளைக்காரி,ஒத்தையில கஷ்டப்படுவாள் என்று நினைத்தபடி வேகமாக வேலைகளை முடித்தாள்.
ஹாலில் வந்து பார்த்தவள்,மேடிட்ட வயிறுடன்,முகம் சோகையால்
வெளிறி,கண்ணைச் சுற்றி,கருவளைத்துடன்,கண்கள் குழிவிழ படுத்து உறங்கிய மதினி தேவியை பார்த்தவுடன் பாரிதாபம் தோன்றிற்று.
உப்புமா,ஜீனி,தண்ணீர்,வட்டில் என எல்லாவற்றையும் எடுத்து வந்து ஹாலில்
வைத்து "மதினி எந்த்திரிச்சி சாப்பிடுங்க"என்று எழுப்பினாள்.
அப்படியே அண்ணனையும்,அம்மாவையும் எழுப்பினாள்.
எழுந்து பார்த்த தேவி"உன்ன யார் இதெல்லாம் பண்ண சொன்னது"
என்று கத்தினாள்.
பூரணி பசிக்குதுன்னு சொன்னா,என்று வேணி முடிக்கும் முன்பே
"யாராவது பார்த்து அண்ணே பெண்டாட்டி கொடுமைக்காரி இப்பவே
வேலைவாங்கற பாரு சொல்லறதுக்கா?என்னை எழுப்பிவிட வேண்டியது தானே?
சரிசரி விடு என்றான் மகேந்திரன்.
அதற்குள் கொல்லைப் பக்கம் போன மகமாயி,"மாட்டுக்காடியை நீ தான் கழுவுனியா"என்று கேட்டபடி உள்ளே வந்தாள்.
மதினி ஒத்தையில கஷ்டப்படுவாங்களேனுதான் என்று இழுத்தவளை
மகேந்திரனின் சரிமா சாப்பிட வா என்ற வார்த்தை நிறுத்தியது.
இல்லண்ணே எனக்கு பசிக்கல நா அப்புறம் சாப்பிட்றேன் என்றவளை
தேவி," இப்ப சாப்பிட உட்காரப் போறியா இல்லையா?,அத்தை
நீங்களும் உட்காருங்க,ஏங்க நீங்களும் உட்காருங்க "என அதட்டினாள்.
மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.
உடலெங்கும் புழுதி அப்பியபடி பூரணி உள்ளே வந்தாள்.அவளைப்
பார்த்து "நாளைகாவது ஸ்கூலுக்குப் போகனும்,நோட்டு,புத்தகமெல்லாம்
எடுத்து வைச்சையா?வீட்டுப் பாடமெல்லாம் முடிச்சியா?ட்ரஸ்யெல்லாம் ஒரே
புழுதி யார் துவைக்கிறது?என அதட்டியபடியே "வா தலை சீவுறேன்"என்றாள் தேவி.
கிட்டப் போனால் அடி நிச்சயம் என்று நினைத்தவள்,"போங்க மா நா
அத்தையிடம் சீவிக்கிறேன்" என்றாள் பூரணி.
அத்தை அடிக்காமல் படிப்புச் சொல்லிக் கொடுப்பாள்,தலைபின்னி விடுவாள்
என்பதால் சந்தோஷத்துடன் கேட்டாள்.
"அத்தை,மாமா சாமிக்கிட்ட போயிட்டாதால இனிமே நீங்க இங்கதானே
இருப்பீங்க?
-தொடரும்-
Bookmarks