கறுப்புக் காதலர் தினம் − 1
நான் கூறப் போவது பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். அப்போது நான் காலேஜ் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.எங்கள் செட்டுக்கு வைக்கப்பட்டிருந்த பெயர் "அராத்து நம்பர் இரண்டு". முதலாமிடத்தைப் தக்கவைத்துக் கொண்டிருந்தவர்கள் சாட்சாத் எங்கள் சீனியர்கள் தான்.
வேறு துறைகளைச் சேர்ந்த எல்லாரும் கர்மமே கண்ணாகப் படிக்கும் போது...நாங்கள் மட்டும் கேண்டீனே கதியாகக் கிடப்போம். கேட்டால் படிப்பது "கேட்டரிங்"...கேண்டீனில் தான தொழில் கத்துக்க முடியும் என்போம்.
கல்லூரி நிர்வாகம் கொடுமையான விதிகளை விதித்திருந்தது.செமஸ்டருக்கு ஒரே ஒரு நாள் மட்டும் தான் லீவ் எடுக்க முடியும்.மீறி எடுத்தால் இன்டெர்னல்லில் கை வைக்கப் படும்.கலேஜ் கட் அடிக்க முடியாது.வகுப்பு நேரங்களில் வெளியே செல்வதென்றால், ஹெச்.ஓ.டி. யின் கேட் பாஸ் வேண்டும்.
இத்தனை தடைக்கற்களையும் நாங்கள் வெற்றிப் படிக்கட்டுகளாய் மாற்றினோம்.எப்படியா?
வாட்ச்மேன் எங்கள் கையில். "அண்ணா...எப்படின்னா நீங்க காதல் கோட்டை அஜீத் மாதிரியே இருக்கீங்க...தினமும் குங்குமப் பூ போட்டுப் பால் குடிப்பீங்களோ...என்னன்னு சொன்னா நாங்களும் ட்ரை செய்வோமில்லன்னு" ந்னு ஒரு பிட்டைப் போட்டு அவரு ஆன்னு வாயைப் பிளக்கிற நேரத்தில எஸ்ஸாயிடுவோம்.அவரு கேட்ல இல்லன்னா...ஒரு கருத்துக் கண்ணாயிரம் உக்காந்திட்டு இருக்கும்.அது இதுக்கெல்லாம் மயங்காது. அதுக்கும் ஒரு வழி வெச்சிருந்தோம்.கேட் பாஸ்ல எல்லா டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி. மாதிரியும் கையெழுத்துப் போட்டு நீட்டுனா முடிஞ்சது. இதுக்குன்னே கையெழுத்து நிபுணி ஒருத்தியும் கூடவே இருப்பா.ஒரு புதுப்படம் விட்டு வைக்க மாட்டோம்.
எங்க செட்ல நான் தான் கொஞ்சம் அப்பாவி. மத்ததுங்க எல்லாம் வெளைஞ்சதுங்க. இப்பிடி நாங்க கேண்டீனும்..பஜ்ஜியுமா...கேட்டரிங் படிக்கும் போது ராதிகான்னு ஒருத்திக்கு பொறந்த நாள் வந்தது. பிப்ரவரி 14. வரம் வாங்கிப் பொறந்தவ. எத்தன நாள் தான் பொறந்த நாளை ஹோட்டல்யும், தியேட்டரிலயும் கொண்டாடறது...ஒரு சேஞ்சுக்கு நேட்டிவிட்டியோட கொண்டாடலாம்னு நாங்கெல்லாம் முடிவு செஞ்சோம்.
ராதிகாவோட வீடு கோவையில்...சிறுவாணி பக்கத்தில பூளுவாம்பட்டி.தோட்டத்துக்கு நடுவில...பக்கா பண்ணை வீடு...அவ அம்மா நல்ல கோழி பிரியாணி செய்வாங்க. எனவே அங்க தான் பிறந்த நாள் கொண்டாட்டம்னு முடிவு செய்தோம்.எங்க கேங்கில் இருக்கும் ஹாஸ்டல்வாசிகளுக்கும் கஸ்டப்பட்டு அவுட்பாஸ் வாங்கி தயாரானோம்.பாதிப்பேர் வர மறுத்து விட்டார்கள். ஏன்னா அன்னைக்கு காதலர் தினம் ஆகையால்...ரொம்ப பிஸி அவரவர் ஜோலிகளில்...எனக்கு வேறு வழியில்லை...ஏன்னா என் இப்போதைய கணவரும் அப்போதைய காதலருமானவர், சென்னை போயிருந்தார். எனக்குத் திருமணம், நிச்சயிக்கப் பட்டு இருந்தது. வெளி நாடுகளில் இருக்கும் உறவுகள் வந்து வாழ்த்த வேண்டி திருமணம் தள்ளிப் போடப்பட்டிருந்தது.
சம்பவம் நடந்த அன்று ஞாயிறு...கறுப்பு நாயிறு...வீட்டை விட்டுப் புறப்பட்ட போதே என் பாட்டி கேட்டார்கள். "ஏன்டி,ஞாயித்துக் கிழமையில கூட வீடு அடங்க மாட்டியா?எங்க போற" என்று.
"ம்ம்ம்.என் மாப்பிள்ளை கூட ஓடிப் போப் போறேன். அடுத்த வருடம் உனக்கு கொள்ளுப் பேத்தியோட வருவேன் காத்திரு" என்று எகத்தாளமாக பதிலளித்தபோது எனக்குத் தெரிந்திருக்கவில்லை...அன்று எத்தனை வேதனைப் படப்போகிறேன் என்று,,,,
தொடரும்...
Bookmarks